Tuesday, November 5, 2013

காடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்



மதியம் எங்காவது சாப்பிட்டுவிடலாம் என்று முடிவாகிவிட்டது.ஆசிரியராக இருக்கும் நண்பன் உடன் இருந்தான்.நான் கடைவருவலை கொண்டுவருமாறு சொன்னேன்.சாப்பிட்டுபார்த்த நண்பன் நன்றாக இருப்பதாகவும்,இதுவரை சாப்பிட்டதில்லை என்றான்.பல வருடங்கள் வெளியில் உணவகத்துக்குச் சாப்பிடப்போனால் அவன் கட்டாயம் இருப்பான்.அவனுக்குத்தெரியாமல் நான் எப்போது சாப்பிட ஆரம்பித்தேன்?

திருவண்ணாமலையில்தான் முதன்முதல் சாப்பிட்டதாக நினைவு.அங்கே பிரபலமான ஸ்டார் ஹோட்டல் ஒன்று இருக்கிறது.மூன்று மணிக்குமேல் எதுவும் கிடைக்காது.இரண்டோமூன்றோ கிளைகள் இருக்கிறதென்று நினைக்கிறேன்.அசைவப்பிரியர்கள் அதிகம் நாடும் உணவகம் அது.நண்பர்கள் காடை பிரியாணி என்று வாங்கித்தந்தார்கள்.அதற்குப்பிறகு காடை ஃபிரை,பிரியாணி என்று சாப்பிட்டிருக்கிறேன்.

ஆற்காடு,ஆம்பூர் ஸ்டார் பிரியாணி எல்லாம் பிரசித்தி பெற்றவை.பலர் சாப்பிட்டிருப்பார்கள்.ஆற்காட்டில் இலையில் பிரியாணி கட்டித் தருவார்கள்.காரில் செல்பவர்கள் அதிகம் பார்சல் வாங்கிச் செல்வார்கள்.ஆரணியில் ஃபைவ்ஸ்டார் பிரியாணிக்கடை ஒன்று இருக்கிறது.சிக்கன்பிரியாணியோ,மட்டன்பிரியாணியோ நாம் விரும்பியது கிடைத்தால் நம்முடைய அதிர்ஷ்டம்.

சிக்கன்பிரியாணி கொண்டுவருவார்கள்,கொஞ்சநேரத்தில் தீர்ந்துவிடும்.அடுத்துவரும் மட்டன் பிரியாணிக்காக காத்திருப்பார்கள்.இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்காது.வெளியில் சமைத்து எடுத்துவருவார்கள்.எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும்.திருவண்ணாமலை ஸ்டார்பிரியாணியும் வெளியில் சமைத்துதான் வரும்.

தர்மபுரியில் ஜாலி பிரியாணிக்கடை பிரபலமாக இருக்கிறது.பிரியாணிக்குப்பிறகு அளவில்லாத குஸ்கா கிடைக்கும்.வயிறுநிறைய சாப்பிடுவார்கள்.அடிக்கடி பிரியாணி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் அளவைப்பார்த்துக்கொள்ளவேண்டும்.அதில் சேர்க்கப்படும் வனஸ்பதி கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து நல்ல கொலஸ்ட்ராலைக் குறைக்கும்.

காடை விவகாரத்திற்கு வருவோம்.அசைவ உணவுகளில் ஆபத்தில்லை என்று பரிந்துரைப்பது மீன் தான்.ஆட்டுக்குக் கோழி பரவாயில்லை என்று கருத்துக்கள் இருக்கின்றன.காடை இப்போது நிறைய உணவகங்களில் கிடைக்கிறது.விரும்பியும் சாப்பிடுகிறார்கள்.காடைபிரியாணியை விட எனக்குப்பிடித்தமானது வறுவல்தான்.மிளகு கொஞ்சம் தூக்கலாகபோட்டிருக்கவேண்டும்.

காடை முட்டை சாப்பிடுவதை சிறுவயதுகளில் பார்த்திருக்கிறேன்.பருத்தித் தோட்ட்த்தில் கூடுகட்டி வாழ்ந்துகொண்டிருக்கும்.கண்ணிவைத்து காடையைப்பிடிப்பார்கள்.முட்டையை கூட்டில் இருந்து எடுத்து சுட்டு சாப்பிடுவார்கள்.மிகச்சிறுசிறு முட்டைகள் அவை.முட்டையைச்சுற்றி சாணத்தைத்தடவி சுடுவார்கள்.சுட்டபின்பு ஓட்டைப்பிரித்தால் கருமட்டும் மஞ்சள்(ஆரஞ்சு?) நிறத்தில் இருக்கும்.

புரோட்டீன்,இரும்புச்சத்து,வைட்டமின்கள்(குறிப்பாக பி) போன்றவை இறைச்சிகளில் முக்கியமானவ.காடையை கோழிக்கறியுடன் ஒப்பிடும்போது கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கும்.உயிர்ச்சத்துக்களும்,கறி அளவும் கோழியில்தான் அதிகம்.கிட்டத்தட்ட கோழிஃபிரை அளவு விலையும் இருக்கும்.வித்தியாசமாக முயற்சி செய்யலாம் என்பவர்கள் சாப்பிடலாம்.
-