Pages

Friday, October 18, 2013

மாணவர்கள் கையில் கத்தி.



கொடூரமான குற்றங்கள் நிகழும்போது வழக்கமாக என்ன சொல்வார்கள்? மோசமான படுகொலை நடந்துவிட்டால்?அவர்களைத் தூக்கில் போடவேண்டும் என்பார்கள்.கடுமையான தணடனை கொடுத்தால் மற்றவர்களுக்கு அந்த எண்ணம் வராது என்பது பொதுப்புத்தி.ஆனால் இப்போது கல்லூரி முதல்வர் கொலையில் குரல்கள் மாறியிருக்கின்றன.ஆனந்தவிகடன் கவுன்சிலிங் மையங்களை இயக்கவேண்டும் என்று தலையங்கம் எழுதியிருக்கிறது.

தண்டனைக்கான குரல்கள் பலவீனமாகி வேறு வார்த்தைகளை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.இது வரவேற்கத்தக்க மாற்றம்தான்.தண்டனையை விட தனிமனித,சமூகக்காரணிகளை கண்டறியும்போது நாம் தீர்வை நோக்கிச் செல்கிறோம்.ஆலோசனை பற்றிஇரண்டு ஆண்டுகளாக பல்வேறு பதிவுகளில் நான் சொல்லிவந்ததை வாசகர்கள் கவனித்திருக்கமுடியும்.ஆனால் தண்டனைகளும் அவசியம்தான்.

கொலை அதிகம் கவனிக்கப்பட்டுவிடுகிறது.ஆனால் மாணவ்ர்களின் தற்கொலைகள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. கோவை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையை நாளிதழில் போட்டிருந்தார்கள். தற்கொலை பற்றி பரவலாக இப்படி சொல்வார்கள், மற்றவர்களைக் கொல்ல முடியாதபோது தற்கொலை செய்துகொள்கிறார்கள்.மாணவர்கள் விஷயத்தில் இது உண்மையாக இருக்கக்கூடும்.

சென்ற ஆண்டு கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டுவந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.கல்லூரியில் மாணவ்ர்களுக்கு ஆசிரியர்கள் மீது மரியாதை இல்லை.திடீரென்று கட்டணத்தை உயர்த்துவார்கள்.அதிலும் முதல்வர் மீது காட்டமாக இருப்பார்கள் என்கிறார்.வணிகமயமாகிவிட்ட கல்வியை இந்தச்சீரழிவுக்கு முக்கியகாரணமாகச் சொல்லலாம்.அது பணம் கறக்கும் எந்திரமாக மாணவர்களைத் தரம் தாழ்த்துகிறது.

தங்களுடைய பெற்றோர் கடன் வாங்கி படிக்கவைக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தெரியும்.ஒவ்வொருமுறை கடன் வாங்கச்செல்லும் தந்தையைப் பார்த்தாலே மன அழுத்தம் கூடிவிடுகிறது.ஒவ்வொருமுறை கட்டணத்திற்கும் அவன் குற்றவாளியாக்கப்படுகிறான்.குடும்பத்தை கடனில் தள்ளியவனாகத் தெரிகிறான்.நீ மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக படித்திருந்தால்? சலித்துக்கொண்டு சொல்லிக்காட்டும் பெற்றோரும் இருக்கிறார்கள்.

வளரிளம்பருவத்துப்பையனுக்கு மேற்கண்ட பிரச்சினைமட்டும் இல்லை.உடல் மாற்றங்கள் அங்கீகாரவேட்கை என்று பிரச்சினைகள்விரிகின்றன..ஃபேஸ்புக்கில் காதலியுடன் நட்பு பாராட்டிய சக மாணவனைக் கொன்றது ஒரு உதாரணம்.நுகர்வு கலாச்சாரம் காரணமாக அவன் இல்லாதவனாகவே உணர்கிறான்.உணர்ச்சிப்பூர்வமான தோழமையும் வழிகாட்டுதலும் அவர்களுக்கு வேண்டும்.

உளவியல் ஆலோசனை மையங்களின் முக்கியத்துவம் இப்போது உணரப்பட்டுவருகிறது.ஆனால் அப்படி துவக்கப்பட்ட மையங்களை மாணவ்ர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று செய்தியில் படித்தேன்.பொதுவில் இன்னொருவரிடம் ஆலோசனை கேட்க நாம் விரும்புவதில்லை.அது நமது சுயமதிப்பைக் குறைக்கக்கூடும்நமக்கே எல்லாம் தெரியும் என்று நினைப்பதே வழக்கம்.அதற்காக இந்த முயற்சியை விட்டுவிடக்கூடாது.

ஆலோசனை சொல்பவர் மாணவர்களை ஈர்க்க முயற்சி செய்யவேண்டும்.மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பயிற்சிகளை நடத்தலாம்.உளவியல் ஆலோசனையின் தன்மையைப் புரியவைக்கும் கலந்துரையாடல் கூட்டங்கள் அவசியம்.ரகசியம் காப்பதை அவர்களுக்கு உறுதி செய்யவேண்டும்.பண்புடைய தகுதியான ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது எல்லாவற்றையும் விட முக்கியம்.

1 comment:

  1. மிகவும் அவசியமான பதிவு நண்பரே...
    மாணவர்கள் கையில் கத்தியை எடுத்து கொலைபாதகம்
    செய்யும் அளவிற்கு துணிதல் எவ்வளவு கொடுமை..
    நல்ல ஆற்றுப்படுத்தல் வேண்டும்..
    சரியான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்..

    ReplyDelete