Thursday, February 28, 2013

உணர்ச்சி வழி

 கணவனால் அடிக்கப்பட்டு அல்லது உதைக்கப்பட்டு மனைவி வந்து நிற்பார்.பலரும் சொல்வார்கள்."அடிக்கிற கைதான் அணைக்கும்".வேறு போக்கிடம் ஏது? கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குப்போய் கணவனுக்கு உணவு சமைக்க ஆரம்பித்துவிடுவார்.அப்புறம் தம்பதிகள் சந்தோஷமாக இருப்பார்கள்.இன்னொரு நண்பர் வேறு விளக்கம் கொடுத்தார்.குழ்ந்தை ஓயாமல் தொல்லை செய்தால் தாய் அடித்து விடுவார்.சற்று நேரம் கழித்து வாரி அணைத்து கொஞ்சுவார்.இதெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருப்பவைதான்.
அடிப்பதற்கும் சரி அணைப்பதற்கும் சரி மனம் உணர்ச்சியால் நிரம்பியிருக்க வேண்டும்.சிந்தனை தவிர்த்து உணர்ச்சி வழி நடக்கும் மனிதர்களை  நாம் நிறைய பார்த்துக் கொண்டிருக்கிறோம்.பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஒருவருக்கு பெரிய சண்டை ஆகிவிட்டது.கெட்ட வார்த்தைகள்,கை கலப்பு என்று ஊர்  வேடிக்கை பார்த்தது.ஒரு மாதம் கூட ஆகவில்லை.இரண்டுபேரும் நண்பர்களாக சிரித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.இருவரில் யாராவது ஒருவர் உணர்ச்சி சார்ந்து இருந்தால் போதும்.
இன்னொரு நிகழ்வு! பால்ய காலத்து நண்பர்கள் அவர்கள்.ஒருவர் இன்னொருவரைப் பற்றி தவறாக பேசியதாக நம்பகமான தகவல் கிடைத்தது.பேசுவதை குறைக்க ஆரம்பித்து பின்னர் முழுமையாக வெட்டிக்கொண்டு விட்டார்.அறுந்து விழுந்த உறவு விழுந்ததுதான்.பிறகு சேரவேயில்லை.
ஆளுமை உணர்ச்சி சார்ந்து இருப்பதற்கும்,அறிவு சார்ந்து இருப்பதற்குமான வித்தியாசம் இவை.இரண்டாவது நிகழ்வில் சிந்தித்து முடிவு செய்ததால் -நட்பு நன்மையைத் தராது என்று முடிவு செய்திருக்க வேண்டும்-பேசுவதைக் குறைத்து வெட்டிக் கொண்டுவிட்டார்.பெரிதாக சத்தம் போட்டு சண்டை ஆகவில்லை.ஆனால் சத்தம் போட்டு சண்டை போட்டவர்கள் உடனே சேர்ந்துவிடவும் செய்கிறார்கள்.
B.J.P என்று செல்லமாக அழைக்கப்படும் ஜொள்ளு பார்ட்டிகள் கிட்டத்தட்ட  இந்தவகைதான்.உணர்ச்சி வழி நடப்பவர்கள் உறுதியற்ற படகு போலத்தான்.கரை சேர முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது.ஆனால் இவர்களை நம்புபவர்களே அதிகம்.அன்பு எனும் உணர்ச்சி தூக்கலாக இருக்கும்போது இவர்களைத் தவிர யாராலும் அத்தனை அன்பை பொழிய முடியாது.சோகமாக வந்து நின்று கெஞ்சுவார்கள்.முற்றிலும் சுயநலம் சார்ந்தது என்பது வேறு விஷயம்.அடிப்பதற்கும் அணைப்பதற்கும் தேவையானது மிகுதியான உணர்ச்சிதான்.நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் இவ்வாறே புரிந்து கொள்ளவும் முடியும்.எந்த வகை என்று தெரிந்துவிட்டால் உறவுகளை பேணுவது எளிது.
-

Friday, February 15, 2013

மனதை உற்சாகப்படுத்தும் உணவுகள்.


                              மனம் நல்ல நிலையில் இருப்பதற்கு உணவும் முக்கியமானது.அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை தேர்ந்தெடுத்து உண்ணும்போது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.ஜலதோஷம் பிடித்தால் கூட சிடுசிடுப்பும் எரிச்சலும் வந்து விடுகிறது.உடலில் ஏற்படும் நோய்கள் மனதையும் மனதில் ஏற்படும் நலக்குறைவு உடலையும் பாதிக்கும்.இந்திய மருத்துவத்தில் குறிப்பிட்ட உணவு உணர்ச்சிகளில் மாறுபாட்டை உண்டாக்கும் என்று சொல்வதுண்டு.

                               பெரும்பாலான வீடுகளில் நடக்கும் ஒரு நிகழ்வை கவனித்திருக்க முடியும்.நண்பர் ஒருவருக்கு அப்பாவுடன் சண்டை.காரசாரமான விவாதம் நடைபெற்று நண்பர் வெறுத்துப்போயிருந்தார்.அன்று மாலை அவருடைய அம்மா கடைக்குப்போய் திரும்பிக்கொண்டிருந்தார்.அவனுக்குப் பிடிக்கும் என்று பலகாரம் செய்யப்போகிறேன்.ஆமாம்.அம்மாவுக்கு தெரியாதா என்ன? குழந்தைகள் எதற்கு கவலையை மறப்பார்கள்? எப்படி வழிக்கு கொண்டு வருவதுஎன்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும்.ஒவ்வொருவருக்கும் சில உணவுகளில் விருப்பம் அதிகம்.விருப்பமான உணவுகள் மனதை சந்தோஷப்படுத்தி விடுகிறது.மனம் இறுக்கமாக இருக்கும்போது பிடித்த உணவை உண்பது இறுக்கத்தை குறைக்க உதவும்.

                               மேலே கண்ட அம்மா வைத்தியமும் இப்போது பெரும் சிக்கலை உண்டாக்கி வருகிறது.சிறுவயது முதலே இனிப்பு,குப்பை உணவு என்று பழக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.அதிக எடை,ஆரோக்கிய குறைபாடு என்று திசை மாறிக்கொண்டிருக்கிறது.ஆரோக்கியம் தரும் பலகாரத்தை வீட்டில் செய்து தருவது இன்று சாத்தியமாக இல்லை.பொட்டலம் கட்டப்பட்ட அல்லது கடையை நம்பியே இருக்கிறார்கள்.அழும்போதெல்லாம் இப்படிப்பட்ட உணவுகளையே தின்னக் கொடுக்கிறார்கள்.இத்தகைய பழக்கங்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது.

                                                                       பெரும்பாலான வீடுகளில் இந்தப்பழக்கம் இருக்கிறது.சமைப்பதற்கு முன்னால் என்ன செய்யட்டும் என்று கேட்பார்கள்.ஆனால் அனைத்து உறுப்பினர்களையும் திருப்திப்படுத்துவது சாத்தியம் இல்லை.நமக்கு சில நேரங்களில் குறிப்பிட்ட உணவின் மீது ஆசை உண்டாகிறது.உணவின் மீதான ஆர்வத்துக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக ஒரு கிராமத்துப்பெரியவர் சொன்னார்.உடலில் உள்ள நோய்க்கு தகுந்தவாறு உணவின் மீதான ஆசையும் இருக்கும் என்றார்.உதாரணமாக ஒருவர் உடலில் சி வைட்டமின் பற்றாக்குறையாக இருக்கும்போது சி உயிர்ச்சத்து மிகுந்த உணவுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.இது சிந்திக்கவேண்டிய விஷயமாகத்தோன்றுகிறது.
                                                                         மகிழ்ச்சி, நல்ல மனநிலை,தூக்கம் போன்றவற்றிற்கு செரோடானின் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக உள்ளது.செரோடானின் அளவை உயர்த்தும் உணவுகளை உண்பது முக்கியமானது.வைட்டமின் பி சத்துள்ள உணவுகள்(பச்சை காய்கறிகள்,இறைச்சி,முட்டை,முளை கட்டிய தானியங்கள்,கைக்குத்தல் அரிசி,கோழி இறைச்சியின் மார்புப்பகுதி போன்றவை),வாழைப்பழம்,தக்காளி,அன்னாசி,கடல் உணவுகள் ஆகியவற்றை உணவில் சேர்ப்பது மகிழ்ச்சியான மனநிலையை தக்கவைக்கும்.
-