Friday, December 31, 2010

செம்மொழியான தமிழ் மீது


செம்மொழியான தமிழ் மீது

பற்று அவனுக்கு

எனக்கும்தான்

ஆங்கிலத்திற்கு எதற்கு

கொண்டாட்டம் என்கிறான்

தமிழோ ஆங்கிலமோ

வாழ்வை கொண்டாடு

அந்நியனோ நம்மவனோ

அடுத்தவனை நேசி

நமதென்றால்

நலமாகும் வாழ்வு
-

Thursday, December 30, 2010

முகம் மாறிப்போன தமிழ் சினிமா


பல தமிழ் சினிமாவை நின்றுகொண்டே பார்த்திருக்கிறேன்.உட்கார இடம் கிடைக்காது.இருக்கைகளின் அளவுக்கு தாண்டி டிக்கெட் கொடுத்து விடுவார்கள்.இரண்டரை மணி நேரமும் நின்றுகொண்டே படம் பார்க்கவேண்டும்.கீழே உட்கார நினைத்தாலும் இடம் இருக்காது.அதுவும் முதல் நாளன்று அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.

மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பென்று நினைக்கவேண்டாம்.தொண்ணூறுகளின் துவக்கத்தில்கூட இந்நிலை இருந்த்து.அப்புறம் வந்த்து திருட்டு சிடி யுகம்.தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுவிட்ட்து.நூறு நாட்கள் என்பது சாதாரணமாக இருந்த நாட்கள் போய் இந்த ஆண்டு பன்னிரெண்டு படங்களே பார்த்திருக்கின்றன.

சினிமா டிக்கெட்டுகளின் விலையும் இப்போது வசதியானவர்களும்,காதலர்களும் படம் பார்க்க போகும் அளவுக்கு இருக்கிறது.சாதாரணமானவர்கள் திருட்டு சிடியில் குடும்பத்தோடு பார்த்துவிடுகிறார்கள்.செலவும் குறைவு.நினைத்த நேரத்தில் அணைத்துவிடலாம்.

சினிமாக்களுக்கு சென்று பாதியில் எழுந்து வந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.உட்காரமுடியாத அளவுக்கு தரத்துடன் அவை இருக்கும்.பணத்தையும் இழந்து நேரத்தையும் இழந்து வெறுத்து வெளியேறும் தர்மசங்கடம் திருட்டு சிடியில் இல்லை.இதனாலேயே மக்களின் ஆதரவு கிடைத்துவிட்ட்து.

கேபிள் சங்கர்,சி.பி.போன்றவர்கள் கஷ்டப்பட்டு சினிமாவை பார்த்து நமக்காக விமர்சனம் எழுதி நம்மையெல்லாம் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.பிளாக்கில் படித்து விட்டு பல சினிமாக்களை தவிர்த்திருக்கிறேன்.சினிமா விமர்சன்ங்களுக்கு மனமார்ந்த நன்றி.

அடிக்க அடிக்க தாயிடம் ஓடும் குழந்தையை போல சினிமா மீதான கவர்ச்சி குறையவில்லை.எப்போதும் குறையாது.சினிமாவைப்போன்றுபிரபலமும் பணமும்வேறு எந்த தொழிலிலும் கிடைக்காது.குறைந்த முதலீட்டில் நல்ல படங்கள் எடுக்க முடியும் என்பதை பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.நன்கு திட்டமிட்டு உழைத்தால் நம்மாலும் சிகரத்தை தொட முடியும்.அதற்கு நம்மிடமே நல்ல உதாரணங்கள் இருக்கின்றன.வரும் புத்தாண்டு அதற்கான கதவுகளை திறக்கட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


-

Wednesday, December 29, 2010

அவரவர் கஷ்டம்


அந்தத் தொலைபேசி

உரையாடலுக்குப் பிறகு

பேசும் கருவியை

உடைத்து விட்டான்.

கண்களில் நீர்

கைகளில் நடுக்கம்

சுய நினைவின்றி

புகைத்துக் கொண்டிருந்தான்.

என்ன நடந்தது?

ஏன் கேட்கிறீர்கள்?

யாருடைய கண்ணீரையாவது

துடைக்க

உங்களுக்கு மனமிருந்தால்

உங்கள் அருகே

உங்கள் வீட்டில்

உங்கள் தெருவில்

அதை செய்யுங்கள்.

வம்புக்கு

அலைய வேண்டாம்.

அவரவர் கஷ்டம்

அவரவருக்கு.





-

Tuesday, December 28, 2010

தமிழ்மணம் போட்டியில் இரண்டாம் கட்ட்த்துக்கு தேர்வான கதை.


கடுமையான போட்டியில்!?நான் கூட இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.சென்ற ஆகஸ்டு மாதத்திலிருந்துதான் பதிவுலகில் இருக்கிறேன்.எனக்கு நேரடியாக எந்த பதிவரையும் தெரியாது.(ஈரோட்டிற்கு செல்ல முடியவில்லை.)தமிழ்மணம் விருது அறிவிப்பை பார்த்தவுடன் கலந்துகொண்டால் நான்கு பேர் பார்வை படும் என்று நினைத்து பரிந்துரை செய்தேன்.

முதல் கட்ட வாக்கெடுப்பு துவங்கியவுடன் சில நாட்களில் மங்கை அவர்கள் எனது இடுகை ஒன்றிற்கு பின்னூட்டம் இட்டிருந்தார்.அருமை.வாழ்த்துக்கள்.’-என்று.ஏதேது நாம் கூட கவனிக்கப்படுகிறோம் என்று சந்தோஷமாக இருந்த்து.மீண்டும் ஒரு முறை நன்றி! மங்கை அவர்களே!

தமிழகத்தின் பாரம்பரிய கலையான தெருக்கூத்து தொடர்பான நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றியது.ரதி,மன்மதன் கதை.யாரையும் முட்டாளாக்கும் காமத்தை கட்டுப்படுத்துவது பற்றிய நம்பிக்கை அது.இடுகைத்தலைப்பு,

நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காம்ம்.

(தமிழிசை,நடனம்,தமிழ்கிராமியக்கலைகள்-பிரிவில்) கதைக்கு வருகிறேன்.போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா இடுகைகளையும் எத்தனை பேர் படித்து வாக்களித்து இருப்பார்கள்.?அப்படி யாராவது இருந்தால் அவருக்கு தரலாம் எல்லா விருதையும்!.நாலு பேருக்குக் கூட தெரியாமல் நான் எப்படி இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்தேன்?

யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்றால் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.வேறொன்றுமில்லை.அந்த்த் தலைப்பில் மொத்தம் எட்டு இடுகைகள்தான் முதல் கட்ட போட்டியில் இருந்த்து.எட்டும் இரண்டாம் கட்ட்த்துக்கு வந்து விட்ட்து.எனக்கும் வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்கப் போகிறவர்களுக்கும் மிக்க நன்றி.


-

Sunday, December 26, 2010

இந்தியா நற்பண்புள்ள வல்லரசாக நீங்கள் உதவலாம்.

இந்தியா வல்லரசாவது உறுதி.அதென்ன நற்பண்புள்ள வல்லரசு?பொறுமை,சகிப்புத்தன்மை,
ஆபத்தில் உதவுதல்,தரமற்ற செயல்களில் ஈடுபடாதிருத்தல்,மனிதாபிமானம் போன்ற நற்பண்புகளை கொண்டிருப்பதே நற்பண்புள்ள வல்லரசு.

இந்தியாவில் சுமார் எட்டு மில்லியன் குழந்தைகள் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு "கல்விக்கான உரிமை"-என்பது இலவசமாக கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.இது குறித்த விழிப்புணர்வுக்காகவும்,நமது ஆதரவுக்காகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம்(UNICEF) Awaaz Do என்னும் இயக்கத்தை துவக்கியுள்ளது .

இந்தியக் குழந்தைகளுக்கு அவர்களது கல்விக்கான உரிமையை பெற நாம் கரம் கொடுத்து வலு சேர்ப்போம்.அறியாமையில் திளைக்கும் ஒரு நாடு வல்லரசாக முடியாது.கீழ்க்கண்ட செய்தியை நண்பர்களுடன்,தெரிந்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Hi,

Recently I came across a startling fact that 8 million children in our country are denied their basic right to education. With the Right to Education Act making education free and compulsory, we must now join hands to help these children exercise this right.

UNICEF has started a movement Awaaz Do that provides us a platform to ensure that no child in this country is denied his/her basic right to education. I have joined this movement and I urge you to pledge your support to the cause.

To join the cause,
SMS AWAAZDO to 53030 or log on to www.AwaazDo.in

Together we can make a difference. So let’s get started.

Awaaz do!
-

Saturday, December 25, 2010

வெடித்து சிதறியது ராக்கெட்தான்!


வெடித்து சிதறியது ராக்கெட்தான்

இந்தியனின் இதயமல்ல

சோதனைகளை சாதனையாக்கும்

நெஞ்சுரம்

எங்களுடையது.

தோல்விகளை கண்டு

துவண்டதில்லை

நாங்கள்

மீண்டு(ம்) வருவோம்

உலகை வெல்ல!

-

Friday, December 24, 2010

கள்ளக்காதல் இயற்கையானதா?


குற்றமாக தண்டனைக்குரியதாக கருதப்பட்ட சில செயல்கள் தற்போது இயல்பானதென்று புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.தனி மனித உரிமைகளாக விவாதிக்கப்பட்டு மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள சமூகம் தயாராகிவிட்டது.எளிய உதாரணம்.-ஓரினச்சேர்க்கை.இதே போல பாலியல் தொடர்பான இன்னொரு பொருள் கள்ளக்காதல்.

சட்டப்பூர்வ திருமண உறவை தாண்டி ஆணோ,பெண்ணோ வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுவதை கள்ளக்காதல் என்கிறோம்.காமமே இதன் அடிப்படையாக கருதப்படுகிறது "கணவனுக்கு அல்லது மனைவிக்கு போதுமான பாலியல் திறன்கள் இல்லை என்று கருதுவோர் இருக்கிறார்கள்.நாட்டுப்புற நம்பிக்கைகளில் ஒன்றாக இவை இருந்தது.

வாத்ஸ்யாயனார் காம சூத்திரத்தில் கள்ளக்காதலை குறித்துள்ளார்.அவரது காலத்தை கவனியுங்கள்.வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காதலில் விழுபவர்கள்தான் என்கிறார்.மதிக்கப்படாத நிலை,சூழல் போன்றவற்றை முக்கிய காரணமாக கூறுகிறார்.

பரிணாமக்கொள்கையும் ,பிராய்டிசமும் உலகை மாற்றின.தற்போது கள்ளக்காதலுக்கு மரபணுக்களை காரணமாக கருதுவோர் இருக்கிறார்கள்.மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்.ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது முன்னோர்களுக்கு ஏது?விலங்குகளுக்கு குடும்பம்,அவமானம்,கௌரவம் என்று ஏதேனும் உண்டா?மனிதன் கால்களால் நிமிர்ந்து நடந்து சிந்திக்க ஆரம்பித்து என்னென்னவோ கொண்டு வந்தான்.

ஒருவருக்கு மேற்பட்ட காதல் உணர்ச்சிகள் மரபணுக்கள் மூலம் பெறப்பட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தாது.ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.சுய இன்பம்,ஓரினச்சேர்க்கை உள்பட மற்ற வக்கிரங்கள் விலங்குகளிடம் உண்டா என்று யாரும் கேட்கவேண்டாம்.ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மரபணுக்கள் எல்லோருக்கும் இருப்பதில்லை.கள்ளக்காதல் இன்னும் விலங்கு நிலையிலேயே இருப்பவர்களால் நிகழ்த்தப்படுவது என்றும் கொள்ளலாம்.

26.12.2010 அன்றுநடைபெற உள்ள ஈரோடு பதிவர் சங்கமம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.பெரியார் மண்ணிலிருந்து நாம் சமூக மேம்பாட்டுக்கான கருவியைப் பெறுவோம். -

Tuesday, December 21, 2010

பெண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்

அமெரிக்க புற்று நோய் கழகத்தின் அறிவிக்கைப்படி, ஆண்டுதோறும் 1.3 மில்லியன் மார்பு புற்றுநோய்கள் கண்டறியப்படுகிறது.இவற்றில் இறப்பு 465,000.இந்நோய் தொடர்ந்து அதிகரித்து கவலை தரும் ஒன்றாக மாறி வருவதை தொடர்புள்ள துறையினர் சுட்டுகிறார்கள்.ஆரம்ப காலத்தில் கண்டறிவது இழப்பைத்தடுக்கும்.அதிகம் பெண்களையே தாக்கும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு அவசியம்.
அறிகுறிகள்:
மார்பு இயல்புக்கு மாறாக வீங்கியிருத்தல்,வலிஆகியன தெளிவான முதல் அறிகுறி.சிவப்பு கலராக மாறியிருப்பது,காம்பில் நமைச்சல்,எரிச்சல்,புண்,போன்றவை உடனே மருத்துவரை அணுகத்தக்கவை.
காரணிகள்:
பெண்களின் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை,வயது (வயது அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரிக்கிறது) ,குடும்பத்தில் ஏற்கெனெவே வரலாறு இருப்பது,பருவமடையும் வயது,மரபுக்கூறுகள் போன்றவை தீர்மானிக்கின்றன.மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றி குழந்தை பெறுவது,பாலூட்டுவதில் உள்ள நடத்தைகள் ஈஸ்ட்ராஜன் ஹார்மோனை அதிகரிக்க செய்து மார்பக புற்றை ஏற்படுத்தலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது,அதிக எடை,சுற்றுச்சூழல்(பூச்சிக்கொல்லி மருந்துகள் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுத்தலாம்).மது அருந்துவதால் ரத்தத்தில் ஈஸ்ட்ரோசன் அளவை கல்லீரல்ஒழுங்குபடுத்த முடியாமல் போவது போன்றவை குறிப்பிடத்தக்க காரணங்கள்.மேலும்,இளம் வயதில் கதிர்வீச்சு சிகிச்சை இந்நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
முன்னெச்சரிக்கையாக,
  • சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.கண்ணாடி முன் நின்று மார்பில் கைவைத்து கட்டிகள் இருக்கிறதா என்றும்,வீக்கம்,சிவப்பு கலரில் இருத்தல் போன்ற அறிகுறிகளையும் பரிசோதித்துகொள்ளலாம்.ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
  • உடலில் கொழுப்பு மிகுதியான உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.வயது ஏற ஏற கொழுப்பு உணவுகளை குறைத்துக்கொண்டே போவது பல வகையில் நல்லது.
  • தேசிய புற்று நோய் நிறுவனத்தின் அறிக்கைப்படி,அதிக எடை மார்பு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறது.
  • உடற்பயிற்சியுடன்,ஹார்மோன் சிகிச்சைகளை தவிர்த்து மாற்று வழிகளை கண்டறிவது நல்லது.
வருமுன் காப்பதுநல்லது இரண்டாவது,ஆரம்ப நிலையில் கண்டறிவது இழப்பை தடுக்கும்.இதற்கு சுய பரிசோதனையே சிறந்த வழி!


-

Saturday, December 18, 2010

மூட்டைப்பூச்சியுடன் ஒரு பயண அனுபவம்


சென்னைக்கு செல்ல வேண்டும்.முந்தைய இரவிலிருந்தே தயாராகிக் கொண்டிருந்தேன்.தூங்குவதற்கு வெகு நேரமாகிவிட்டது.அடுத்த நாள் இரவு பேருந்து ஏறினால் காலையில் சென்னை சென்று சேர்வேன்.ஓரளவு தூங்கிக்கொண்டு போகிற மாதிரி பேருந்தாக இருந்தால் நல்லது.உடன் வரும் நண்பனிடம் கூறினேன்."பணம் போனாலும் பரவாயில்லை.நல்ல பஸ்ஸாக இருந்தால் பரவாயில்லை"."முன் பதிவு தீர்ந்து போய்விட்டது".பெங்களூருவிலிருந்து நிறைய பஸ் வருகிறது.எந்த பிரச்சினையும் இல்லை.

பத்து மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறோம்.அவன் சொன்ன மாதிரியே பல பஸ்கள் வந்து நின்றது.எந்த பஸ்சிலும் இடம் இல்லை. இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது.வேலூர் போய் அங்கிருந்து சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.அதற்கும் பஸ் கிடைக்கவில்லை.காஞ்சிபுரம் தாண்டி செல்லும் பேருந்து ஒன்று.வேலூர் வரை போய் விடலாம் என்று ஏறிக்கொண்டோம்.நண்பனுக்கும் எனக்கும் வேறுவேறு இடத்தில் இருக்கை.

அரை மணி நேரம் ஆகியிருக்கும்.ஒரு பயணி எழுந்தார். "யோவ் கண்டக்டர்"என்றொரு சத்தம்.இங்க வாய்யா! என்னா பஸ் வச்சினு இருக்கிறீங்க!காசு மட்டும் மத்த பஸ்ஸ விட ரெண்டு மடங்கு வாங்குறீங்க,ஒரே மூட்டைப்பூச்சியா இருக்குது.ஒரு மூட்டைப்ப்பூச்சியை நசுக்கியிருந்தார்.சீட்டில் ரத்தக்கறை.கண்டக்டருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை."அதுக்கு நான் என்ன பண்றது?"." நீ போய் நிர்வாகத்துகிட்ட சொல்லு".மற்ற பயணிகளும் கண்டக்டரை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

வாக்கு வாதத்திற்குப் பிறகு பயணி கண்டக்டர் சீட்டிலும்,கண்டக்டர் பயணி சீட்டிலும் மாறி உட்கார்ந்தார்கள்.சிறிது நேரத்திற்குப் பிறகு இன்னொருவர் ஆத்திரமாக பேச ஆரம்பித்தார்.போதையில் வேறு இருந்தார்.ஆட்சியாளர்களை திட்டிக்கொண்டு இருந்தார்.அப்புறம் குறட்டையுடன் தூங்கிப்போய் விட்டார்.ஆளாளுக்கு முனகிக் கொண்டிருந்தார்கள்.

நான் தூங்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன்.சீட்டில் சாய்ந்து உட்காருவதற்கு பதிலாக இருக்கையின் நுனியில் இருந்தேன்.துணிப்பையை மடிமீது வைத்துக்கொண்டேன்.கலக்கமாக இருந்தது.பையில் எங்காவது ஏறி அமர்ந்து என் வீடு வரை வந்துவிட்டால்? நினைக்கவே ஒரு மாதிரி இருந்தது.புத்தகங்கள் வேறு நிறைய இருக்கின்றன. மூட்டைப்பூச்சி ஏறிய புத்தகங்களை பார்த்திருக்கிறேன்.பயத்திலேயே புத்தகங்களை இரவல் வாங்குவதை விட்டுவிட்டேன்.இன்னும் ஒரு மணி நேரம்தான்.வேலூர் போய் விட்டால் நிம்மதி.நல்ல பஸ் பார்த்து போகலாம். கொஞ்ச நேரம் தூங்கலாம்.

இருக்கையின் பின்புறமும்,இரண்டு பக்கத்திலும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.எனக்கு எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.எங்காவது கருப்பாக தெரிந்தால் கை வைத்து தடவிப் பார்த்தேன்.நான் மூட்டைப்பூச்சியை பார்க்கவேயில்லை.கடிப்பது நான் உணராமல் இருக்கிறேனோ? மூட்டைப்பூச்சி மூலம் தொற்று நோய் பரவுமா? அப்படி எதுவும் படித்ததாக நினைவில் இல்லை.சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது.வேலூர் கொஞ்ச தூரம்தான்.

வேலூரை நெருங்க நெருங்க மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி.மனம் லேசாகிக் கொண்டிருந்தது.பேருந்து நிலையம் வரும் முன்பே நண்பனிடம் போனேன்."இங்க இல்ல,காஞ்சிபுரத்துக்கு டிக்கட் வாங்கிட்டேன்.கண்டக்டர் சொன்னார்.அங்கிருந்து ஒரு மணி நேரம்தானாம்,கொடுக்கட்டுமா என்று கேட்டார். சரி என்று வாங்கிவிட்டேன்"(புத்திசாலி கண்டக்டர் )."என்கிட்டே ஏன் சொல்லல?"-என்னுடைய முகத்தை பார்த்து"என்னடா ஏதாவது பிரச்சினையா? " ஒண்ணுமில்ல!

இருவர் தொடர்புள்ள ஒரு விஷயத்தில் மற்றவருடன் கலந்து பேசாமல் முடிவெடுப்பது நாகரீகமா? சென்னை சென்ற பிறகு அவனிடம் இது பற்றி பேசவேண்டும்.தவிர நாம் விருப்பப்படுவது எல்லாம் நடந்து விடுவதில்லை.பையை நண்பனிடம் கொடுத்து விட்டு வேகமாக இறங்கி சிறுநீர் கழிக்க சென்றேன்.திரும்பியதும் நண்பன்சிரித்த முகத்துடன் கேட்டான்."இதுக்குத்தானா? பஸ் இங்க பத்து நிமிஷம் நிக்கும்டா" -

Saturday, December 11, 2010

ஓநாயும் வீட்டு நாயும் -பாரதி


ஓநாய்:- ஹே சகோதரா,நான் உன்னைச்சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.எனக்குத் தயவு செய்து விடைகள் அளிப்பாயா?

வீட்டு நாய்:-அடா ஓநாயே,நாம் நம்முடைய அந்தஸ்துக்கு குறைவான எந்த நாயோடும் சினேஹம் பாராட்டுவதில்லை.ஆயினும்,உன் மேல் நம்மையறியாமலே நமக்குப்பிரீதி ஏற்படுகிற படியால் நீ கேட்கும் கேள்விகளுக்கு ஜவாப் சொல்ல சம்மதித்தோம்.

ஓநாய்:-ஐயா,உம்முடைய அந்தஸ்தென்ன?நீ வசிக்கும் இடமெங்கே?இக்காட்டிற்கு வந்த காரணமென்ன?உமக்கு இவ்வளவு சுகமான வாழ்க்கை எங்கனம் ஏற்பட்டது?

வீட்டுநாய்:-நாம் உக்கிரேச பாண்டியநிடத்தில் இருக்கிறோம் அவர் நமக்கு ராஜோபசாரஞ் செய்து வருகிறார்.நமக்கும் அவரிடத்தில் பக்தியுண்டு.நம்மை அவர் மற்றெந்த நாய்களைக்காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.

ஓநாய்:-அண்ணா,என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?காற்றிலும் மழையிலும் வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியிருக்கிறது.பசியின் கொடுமையை சகிக்க முடியாததாய் இருக்கிறது.

வீட்டுநாய்:-தம்பி,உன்னுடைய ஊழ் வினைப்பயனை நீயே அனுபவித்து தீர வேண்டும்.பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாய் நமக்கு இப்போது இப்பதவி கிடைத்தது.

ஓநாய்:-நாயாரே,நானும் உக்கிர சேனனின் நட்பை நாடி வரலாமா?சுக துக்கங்களே சமரசமாய் இருந்தால் மாத்திரமே இவ்வுலக வாழ்வு சகிக்கத்தக்கது.என்னுடைய கஷ்டகாலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.

வீட்டுநாய்:-நல்லதப்பா,என் கூட வா.

இருவரும் சம்பாஷித்துக்கொண்டே வழி நடந்தார்கள்.திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுதாயம் தோன்றிற்று.பகதூரின் கழுத்தைச்சுற்றி அகலமான தழும்பு இருந்தது.ஓநாய் அதைப்பார்த்தவுடன் ஒரு கேள்வி கேட்டது.

ஓநாய்:-பகதூர்,உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

பகதூர்(வீட்டு நாய் ):-ஓ,அது ஒன்றுமில்லை.எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது.அதன் தடம் தெரியலாம்.

ஓநாய்:-அந்தப் பொன் பதக்கம் எங்கே? நீர் ஏன் அதைப் போட்டுக்கொண்டு வரவில்லை.

பகதூர்:-என்னை வெள்ளி சங்கலியால் கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.

ஓநாய்:-உம்மை ஏன் கட்ட வேண்டும்?யார் கட்டுகிறார்கள்?

பகதூர்:-என்னுடைய எஜமானன் என்னைக் கட்டுவார்.அவரைப் பார்க்க வரும் மனிதர்கள் என்னைக் கண்டு அஞ்சாதிருக்கும்படி என்னைக் கட்டி வைப்பார்.

ஓநாய்:-தூ! பிரஷ்டப்பயலே!என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய்.உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய் பேசினாய்;நான் சுதந்திரப்பிரியன்.எனக்கு எஜமானனும் இல்லை.சங்கிலியும் இல்லை.கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன்.யதேச்சையாய் எங்கும் செல்வேன்.எதையும் தின்பேன்.எதையும் சொல்வேன்.எவரோடும் சேர்வேன்.பராதீனம் பிராண சங்கடம்.ஒருவருடைய ஆக்கினைப்படி வரவோ,போகவோ,உண்ணவோ,உறங்கவோ,மலம் ஜலம் கழிக்கவோ சம்மதித்து இருப்பவன் மகா நீசனாய் இருக்க வேண்டும்.

இவ் வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப்போய்விட்டது.

-பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட பாரதியார் கட்டுரைகளிலிருந்து.
-

Monday, December 6, 2010

சாகித்ய அகாதமி மீது ஏனிந்த காட்டம்?

சென்னை தரமணியில் இயங்கி வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தை வெளியேற்ற தமிழக அரசின் சில துறைகள் தொடர்ந்து கடிதம் அனுப்பி நெருக்கடி தருவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.இது முதல்வருக்கு தெரிந்து நடக்கிறதா என்பது தெரியவில்லை.இலக்கியம் தொடர்பான ஒரு மத்திய அரசு நிறுவனம் தமிழகத்துக்கு வேண்டாம் என்று ஏன் நினைக்கவேண்டும்?அதனால் அவர்களுக்கு என்ன லாபம்?

சுதந்திரம் பெற்ற பின் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது சாகித்ய அகாதமி.ஞான பீட விருதுக்கு அடுத்து தேசம் தரும் உயரிய அங்கீகாரமாக சாகித்ய அகாதமி விருது கருதப்படுகிறது.சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளானபோதும் தகுதியானவர்களுக்கே கிடைத்து வந்திருக்கிறது.தமிழ் இலக்கியங்கள் மற்ற மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.சகோதர மொழிகளின் இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன.

எதிரிகள் யாரோ உள்ளே நுழைந்து விட்டதைப்போல காலிசெய்!காலிசெய்!என்று தொடர்ந்து கடிதம் மேல் கடிதம் எழுதுவது நமது மதிப்பீட்டை குறிக்கிறது.தெரியாமல் புத்தகத்தை மிதித்து விட்டதற்காக என் அத்தையிடம் அடி வாங்கியதும்,அவரது அறிவுரை ஏற்று வணங்கியதும் இப்போது நினைவுக்கு வருகிறது.நூலகம் வணக்கத்துக்கு உரியதல்லவா?என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றவேண்டாமா?

மண்டல அலுவலகம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்ததே நமது தவறு.சென்னையில் இல்லாத இடமா?பல்வேறு முயற்சிகளுக்கு பிறகே இந்த பிரிவு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போதுஇலக்கிய முயற்சிகளில் நாம் பின்தங்கி இருப்பதற்கு நமது மதிப்பீடுகளே காரணம்.புத்தகங்களை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?கலையும் இலக்கியமும்தான் நமது அடையாளம்.

உனக்கு வேறு போக்கிடம் இல்லையா என்பதற்கும்,நீ என்னுடன் இருந்துவிடு என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.நாம் கொடுக்கும் மரியாதை அது.நமது விழுமியங்களை காட்டுகிறது.பெருமைக்குரிய இடத்தை வழங்கி நாம் மரியாதை செய்யவேண்டும்.புத்தகங்களும் அவை சார்ந்த நிறுவனங்களும் வணங்கப்படவேண்டும்.
-

Friday, December 3, 2010

உலகில் துயரங்கள் அதிகமாக இருப்பது ஏன்?

மைனா திரைப்படத்தில் ஏன் பிரபு சாலமன் நாயகனையும்,நாயகியையும் சாகடித்து துயரமான முடிவைத்தந்தார்?ஏன் சந்தோஷமாக வாழ விடவில்லை? உலகின் மிகச்சிறந்த இலக்கியங்கள் துயரச்சுவை கொண்டவையாக உள்ளன.(ஷெல்லி என்று நினைக்கிறேன்).ஏன்?துயரம் மனிதர்களுக்கு பிடித்துப்போகிறதா?அதில் என்ன ஆனந்தம் இருக்கிறது?துக்கத்தில் மனிதன் தன்னை உணர்கிறானா?அல்லது பிரபஞ்சம் பற்றிய சிந்தனையில் விழுந்து உழல்கிறானா? துயரம்தான் மனிதனை மனிதனாக பார்க்கச்செய்கிறதா?

துக்கத்தில் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்.கடவுளை நிந்திக்கிறான்.அல்லது அடி மனதிலிருந்து கெஞ்சுகிறான்.கோரிக்கை வைக்கிறான்.சமாதானத்தை தேடுகிறான்.சிலர் குழந்தையை போல ஆகி விடுகிறார்கள்.ஏதேனும் போதையை தேடி ஓடுகிறார்கள்."நடப்பதெல்லாம் நன்மைக்கே" "எல்லாம் கடவுள் செயல்""முன் ஜென்மத்தில் செய்த பாவம்"-ஏதேதோ சமாதானங்கள்.கடவுள் ஏன் கருணையின்றி இருக்கிறார்?

கோமல் சுவாமிநாதன் சுபமங்களா பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார்.நான் அதன் வாசகனாக இருந்தேன்.எனக்கு தமிழின் சமகால இலக்கியம் பற்றி ஓரளவு அறிமுகம் கிடைத்தது.சுந்தர ராமசாமியின் நாடகம் ஒன்றை படித்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதினேன்.அஞ்சல் அட்டையில் எழுதிய கடிதம்.நாடகத்தை பற்றி சிலவரிகள் எழுதிவிட்டு கொஞ்சமும் தொடர்பில்லாமல் இதை எழுதினேன்."துயரமான முடிவைக்கொண்ட கலை இலக்கியங்களே உலகின் சிறந்த இலக்கியமாக திகழ்கிறது "என்று சொல்லப்படுகிறது.உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் கடவுள் படைக்கும் இலக்கியம்தானே உலகம்? அவரது படைப்பு மட்டும் எப்படி துயரம் இல்லாமல் இருக்கும்?

நான் எதிர்பார்க்கவில்லை! சில தினங்களில் சுந்தர ராமசாமி அவர்களிடமிருந்து அஞ்சல் அட்டை வந்திருந்தது.அதில் இருந்த வரிகள் "அந்த வரிகள் என்னைக்கவர்ந்தன.உங்களுக்கு சில பத்திரிக்கைகளையும்,சஞ்சிகைகளையும் அனுப்புகிறேன் ".எனக்கு இரண்டு காலச்சுவடு பிரதிகளை அனுப்பியிருந்தார்.முக்கியமான அறிமுகம்.ஒருநாள் நேரில் சந்திக்க நினைத்திருந்தேன்.முடியாமலேயே போய்விட்டது.

நாம் ஏதேதோ காரணங்களை தேடுகிறோம் அவ்வளவுதான்.ஏனென்று தெரியாமலேயே எல்லாவற்றையும் அனுபவித்து ஆகவேண்டும்.ஜோதிட நண்பன் இன்னொரு காரணம் சொன்னான்.குரு நல்ல கிரகம்.ஐந்து இடங்களில் தான் நல்லது செய்வார்.ஏழு இடங்களில் நல்ல பலன்கள் இல்லை.சனி மூன்று இடங்களில் தான் நல்லது செய்வார்.குரு சுக்கிரன்,புதன் நல்ல கோள்கள்.சந்திரன் வளர்பிறையில் நல்லவர்.சனி,செவ்வாய் சூரியன்,ராகு கேது என்று மற்ற கிரகங்கள் பொதுவாக நல்லதாக இல்லை.எனவே உலகில் நன்மை குறைவுதான்.அவர் வழியில் இது ஒரு காரணம்.

கலை,இலக்கியங்கள் துயரங்களை சொல்வது மூலம் நம்மை மென்மையாக்குகின்றன.மற்றவர்களை புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது.உதவும் மனப்பான்மை உருவாகிறது.மனிதர்களாக அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.நண்பர்களின்,உறவினர்களின் துயரங்களில் நாம் முழுமையாக உதவுவோம்.
-

Tuesday, November 30, 2010

நந்தலாலா -அலுப்பூட்டும் கவிதை

மிஷ்கின் பாத்திரத்தைப்போல நான் நேரில் பார்த்திருக்கிறேன்.சில நேரங்களில் தெளிவாக இருப்பதும் சில நேரங்களில் மூர்க்கமாக ,அமைதியாக,கோபமாக என்று விதம்விதமான மன நோயாளிகளின் குணங்கள்.யாரையாவது பார்த்தால் மிகவும் அடங்கி அன்பு பொங்க பார்க்கும் மனக்குறைபாடு உள்ளவர்களை நேரில் சந்தித்து வியப்பில் ஆழ்ந்ததுண்டு."அன்பு மட்டும் அனாதையாக இல்லை".அன்பு கொண்டவரை மன நலம் பாதித்தவர்கள் மட்டுமல்ல ,பிறந்த குழந்தைக்கும் அடையாளம் தெரியும்.யாரையாவது கூர்ந்து கவனியுங்கள் .புரியும்.படத்தில் காட்டப்படும் மன நல விடுதியைப்போலத்தான் இப்போது அத்தகைய விடுதிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.அமைதியாக்கும் நல்ல மருந்துகள் இருக்கின்றன.

பயணம் செய்யும் கதை என்றால் உலகத்தில் இருக்கும் எல்லா வண்டியையும் காட்டித்தான் ஆகவேண்டுமா?நடைபயணம்,சைக்கிள்,டிராக்டர்,லாரி,கார்,பஸ்,டூ வீலர் என எல்லாவற்றிலும் பயணிக்க வேண்டுமா?ஒவ்வொரு வண்டியையும் காட்டுவதற்கும்,அதில் பயணம் செய்வதற்கும் யாரையாவது-அவர்கள் சாதாரண மனிதர்கள்-படைத்தது போல அமைந்து விட்டது.கார் பயணத்தில் தொல்லை தருபவர்கள் மீண்டும் தொடர்பில்லாமல் எதிரே நிற்பதும்,பலாத்காரம் செய்ய வந்ததாக சத்தமிட்டு ஓட வைப்பதும் ,அவர்கள் மோதி நிற்பதும் வழக்கமான தமிழ் சினிமா.

இரண்டு தினங்களுக்கு முன்பு நான் படம் பார்த்தபோது அதிக கூட்டமில்லை."படம் சுலோவா போகுது"என்று யாரோ இடைவேளையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்கள்.அலுப்பான பயணம்தான் என்று எனக்கு பட்டது.பயணங்களின் போது நாம் சந்தித்த காட்சிகள் தான்.மீண்டும் பார்த்தபோது நாமே பயணம் செய்வதுபோல இருந்தது.விதம் விதமாக அழகை அள்ளித்தரும் காமிரா.இருந்தும் விரைவில் அன்னை வயலை அடைந்து விட்டால் நல்லது என்று நினைக்க தோன்றுவது படத்தின் பலவீனம்.

இளையராஜா இசையில் படம் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. வேறு யாரும் பொருந்தியிருப்பர்களா என்பது சந்தேகம்.படம் உருவாக்கும் உணர்வுகளை ராஜா முழுமையடைய வைக்கிறார். நந்தலாலா மறக்க முடியாத அனுபவமாவதற்கு ஒளியும் ஒலியும் அற்புதமாக அமைந்துவிட்டது.இசைஞானியின் மௌனத்தை வெகுவாக ரசித்தேன்.

ஆஹா! அந்த சிறுவன்! பையன் மிக இயல்பாக பொருந்திவிட்டான்.அல்லது மிஷ்கினின் உழைப்பா? வெகு நாட்கள் தாயைக்கான காத்திருந்து முடிவில் தாயைக்காணும் நிமிடங்களில் சிறுவனின் முகத்தில்!? மிஷ்கின் ஒரு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார்.அழகிய கவிதை!சில நேரங்களில் அலுப்பூட்டுகிறது.இருந்துவிட்டு போகட்டும்.குறையில்லாத எதுவும் இருக்கிறதா என்ன?நிறைய எழுதி விட்டார்கள்.நானும் என் பங்குக்கு சில விஷயங்களை சொல்ல நினைத்தேன். -

Friday, November 26, 2010

ஐயோ! செல்போன் கம்பெனிகள்!

பஸ் ஸ்டாண்டில் காய்கறி விற்கும் பெண் அவர்.ஒரு செல்போன் வைத்திருக்கிறார்.அவருடைய நம்பர் அவருக்கு தெரியாது.யாராவது போன் செய்தால் எடுத்து பேசுவார்.அவர் போன்லிருந்து பேசவேண்டுமானால் யாருடைய உதவியாவது தேவை.ஒரு நாள் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் பெரிய சண்டை.ரீசார்ஜ் செய்தால் பணமே இருப்பதில்லை.கடைக்காரர் ரீசார்ஜ் செய்து பரிசோதித்து பார்த்தபோது உடனடியாக பணம் கழிக்கப்பட்டிருந்தது.

செல்போன் கம்பெனிகளுக்கு டெலிமார்கடிங் என்றொரு அமுதசுரபி இருக்கிறது.அவர்கள் போன் செய்து ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பார்கள்.மேற்கண்ட காய்கறி விற்கும் பெண்ணைப்போல எத்தனை பேர் இருக்கிறார்கள்?படிக்காத ஏழை இந்தியர்களுக்கு இந்த எழவெல்லாம் என்னத்தை தெரியும்?யாரோ போன் செய்கிறார்கள் என்று நினைத்து எடுத்து பேச ஒன்றும் புரியாமல் ஏதோஒன்றை அழுத்துவார்கள்.அல்லது எதையும் செய்யாமல் அவர்களாகவே பணம் பிடித்துக்கொள்வார்கள்.

எனது நண்பன் ஒருவன் பிரபல பன்னாட்டு நிறுவனமொன்றின் இணைப்பை வாங்கினான்.பேசிய பின்னால் பணம் கட்டும் திட்டமது.அடிக்கடி ரீசார்ஜ் செய்ய கடைக்கு ஓடாமல் எளிதாக இருப்பதாக கூறிக்கொண்டிருந்தான்.நான்கு மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்த பில் தொகையைபார்த்து மிரண்டுபோனான்.நண்பர்களிடமெல்லாம் போன் செய்து புலம்ப ஆரம்பித்தான்.நான் அவ்வளவெல்லாம் பேசவில்லைஎன்று கம்பெனியில் விசாரித்தான்.

கம்பெனியில் நீங்கள் ஒரு மாதத்துக்கு முன் திட்டத்தை மாற்றியிருக்கிறீர்கள் என்றார்கள்.அப்படி எதுவும் நான் மாற்றவில்லை,நீங்கலாக எப்படி மாற்றலாம்?என்று கேட்டபின் டெலி மார்கெட்டிங் ஆட்கள் சொல்லி மாற்றியிருக்கிறார்கள்.உங்களுக்கு போன் செய்து கேட்டிருப்பார்களே?உண்மையில் அப்படி எதுவும் இல்லை.கம்பனிக்காரர்கள் சொன்னார்கள்!"சரி,பணத்தை கட்டிவிடுங்கள்,அடுத்த பில்லில் இருந்து பழைய திட்டத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.ஆக,நஷ்டம் நஷ்டம்தான்.அந்த நம்பரே வேண்டாம் என்று தலை முழுகிவிட்டான்.

இது போன்ற பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை நாடமுடியும்.ஆனால்,அவன் செய்யவில்லை.படிப்பறிவில்லா ஏழைகள் இந்த மாதிரி சட்டம் எத்தனை பேருக்கு தெரியும் ?தெரிந்தாலும் ஏழைகளுக்கும் நீதிக்கும் என்ன தொடர்பு?உழைத்து,உழைத்து வறுமையில் வாடும் இந்தியனை எத்தனை பேர்தான் சுரண்டுவது? -

Sunday, November 21, 2010

இனிய உறவுகளே வாழ்க்கையின் வெற்றி!

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் இனிய,இதமான உறவுகளை அமைத்துக்கொண்டவர்களே! கணவன்,மனைவி,நண்பர்கள்,பணியாளர்கள்,அண்டைவீட்டார்,பெற்றோர்,உடன்பிறந்தவர்கள் என சிக்கலில்லாத உறவுகளை கைவரப்பெற்றவர்கள் உண்மையில் இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று போற்றப்படும் நிலையை பெற்றவர்கள்.சாதனைகள்,தொழில் வெற்றி,புகழ் மாலை போன்றவற்றை உறவுகள்தான் தீர்மானித்திருக்கின்றன.

வெற்றி பெற்ற தனிமனிதன் அவனது திறமைகளால் தானே உயர்ந்திருப்பான்?ஆம். அவனது திறமை நல்ல உறவுகளை உருவாக்கியதில் இருக்கிறது.உறவுகளை தனது வெற்றிக்கு ,சாதனைக்கு பயன்படுத்திக்கொண்டதில் இருக்கிறது.தூக்கிவிட ஆளில்லாமல் யாரும் மேலேபோக முடியாது.தாங்கிப்பிடிக்காமல்நிலைத்து நிற்கவும் முடியாது.பலர் பலத்தில்தான் ஒருவர் உயரே நிற்கமுடியும்.

நல்ல உறவுகளுக்கு ஒருவர் அதிக சுயநலம் உள்ளவராக இருக்ககூடாது.சுயநலம் இருப்பவன் தனியாகத்தான் இயங்கமுடியும்.உங்கள் உடனிருப்பவர்கள் சந்தோஷமாக இல்லாதபோது நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?அப்படி இருந்தால்,அது ஒரு மன நோய்.உணர்வுபூர்வமாக மற்றவர்களின் தேவையை உணர்ந்தவன் அதை நிறைவேற்றுகிறான்.உடைக்கமுடியாத பிணைப்புகள் உருவாகின்றன.

நல்ல வார்த்தைகள் கைவரப்பெற்றவர்கள் நல்ல வாழ்க்கையை பெற்றவர்கள்.வார்த்தைகள்தான் உறவின் வலிமையை தீர்மானிக்கின்றன.சூழ்நிலை காரணமாக உணர்ச்சி வயப்பட்டு எரியும் வார்த்தைகள் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.பின்னர்,தவறை உணர்ந்து இனிய வார்த்தைகளால் உறவுகளை இருக்கிக்கொள்ளவேண்டும்.நல்ல உள்ளங்களிலிருந்து நல்ல வார்த்தைகளே வரும்.கோபம் போன்ற உணர்வுகளை கையாளத்தெரிந்தால் நலம் பயக்கும் உறவுகள் உண்டாகும்.

உறவுகளுக்காக தேவைப்பட்டால் உங்கள் மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ளலாம்.அந்த மதிப்பீடுகள் சமூகத்துக்கோ,தனி மனிதனுக்கோ தீங்கு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.ஒத்துப்போதல்,மற்றவர்களை புரிந்து கொள்வது,உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது,சேர்ந்து உண்பது,இணைந்து கொண்டாடுவது,எளிமையாக இருப்பது,பணத்தை பார்க்காமல் மனத்தை பார்த்து பழகுவது போன்றவை இனிய உறவுகளின் அடிப்படை.முயற்சி செய்தால் நீங்களும் சாதனை மனிதர்தான்! -

Friday, November 19, 2010

கள்ளக்காதல் வெளியே வருவது எப்படி?

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள்.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.உறவுகளிலும்,குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில்லை?

சமூகப்பிரச்சினை என்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்கு பொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால் படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.குற்றங்களை ஆய்வு செய்கிறோம்.மதுப்பழக்கம்,புகைபிடித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.படிக்கப்படுகின்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை.

கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமானங்களும்,அதையொட்டி ஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.பல குழந்தைகள் அனாதையாவது,கொலை,தற்கொலைஎன்று நீளும் குற்றச்செயல்களை ஓரளவாவது நம்மால் குறைக்கமுடியும்.முயற்சி இருந்தால் முடியாதது இருக்கிறதா என்ன?

நாம் இனி தலைப்புக்கு வருவோம்.நாளிதழ்களில்வந்தால் எல்லோருக்கும் தெரியும்.வேறு எப்படி?கள்ளக்காதல் ஒரு குற்றம்.ரகசியமானது,யாருக்கும் தெரியாமல் நடக்கவேண்டும்.ஆனால்,எல்லா குற்றச்செயல்களைப்போலவே தடயமும் இருக்கும்.நான் அறிந்தவரை உடனிருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் இத்தகைய உறவுகள் மலர்வதில்லை.காதலை போலவே இது தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.தோழிகளுக்கு தெரியாத கள்ளக்காதல் விதிவிலக்கு!

பலருடன் விவாதித்த வரையிலும்,பார்த்து,கேட்டு அறிந்தவகையிலும் கள்ளக்காதல்கள்,முடிவு செய்வதற்கு முன்னர் பெண்ணால் தனது தோழிகளிடம் பேசப்பட்டுவிடுகிறது.அவர்களது கருத்துக்களை அறிவதும்,அவரைப்பற்றி அறிவதும் இதன் நோக்கமாகும்.வெற்றிக்கு பிறகு ஆண் தனது நண்பர்களிடம் அறிவிப்பான்.ஆண் தனது வெற்றியாக கொண்டாடுவான்.பின்னர்,அப்பெண் தனது மரியாதையை இழக்க துவங்கி எதிர்கொள்ளும் சிக்கல்களை பெண்ணிய நோக்கில் பார்க்கவேண்டும். -

Tuesday, November 16, 2010

குழந்தையை பலி கேட்கும் சமூகம்

சேவை மனப்பான்மை மிக்க மாவட்ட ஆட்சியர் அவர்.பள்ளிக்கு செல்லும் வயதில் பணிக்கு சென்று கொண்டிருக்கும் குழந்தைகளை மீண்டும் கல்வி நிலையத்திற்கு கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார்.குடியரசு தினம் என்று நினைவு.கிராம சபா கூட்டங்களின் முக்கிய நோக்கமாக பள்ளியில் இருந்து இடை நின்ற குழந்தைகள் பற்றியதாக இருந்தது.அந்த மாவட்டத்தில் அதிகம் படிப்பை விட்டுவிட்டு போன குழந்தைகள் உள்ள கிராமம் தேர்வு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் கூடியிருந்தார்கள்.அனைவரிடமும் பள்ளியிலிருந்து நின்றுபோன குழந்தைகளின் பட்டியல் இருந்தது.மக்களை திரட்டுவதில் துறைவாரியாக உழைத்தார்கள்.குழந்தைகளின் பெற்றோர்களை வீடுவீடாக சென்று அழைத்துக்கொண்டிருந்தார்கள்.பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது.முதல் ஏழு பேர் வரை ஒருவரும் வரவில்லை.அடுத்த பெயர் படிக்கப்பட்டவுடன் சுற்றியிருந்தவர்கள் கை காட்டினார்கள்.ஒரு பெண்,சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும்,ஆட்சியர் முன்னால் தரையில் அமர்ந்தார்.

அவரது குழந்தையை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது குறித்து அவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டார்.மற்ற அதிகாரிகள் அதன் நன்மைகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள்."என் பொண்ணு படிக்கிறா!.பையன் சென்னையில வேலை செய்யறான்,அவன்தான் குடும்பத்தை காப்பாத்தறான்!அவங்கப்பன் வேற பொண்ண சேத்துக்குனு வாழ்றான்."தொடர்ந்து சட்டமும்,கல்வியின் நன்மைகளும் எடுத்துக்கூறப்பட்டது.உறுதியாக அந்தத்தாய் கூறினார்."எனக்கு மட்டும் எம்பையன் நல்லா இருக்கணும்னு ஆசை இருக்காதா?திருப்பியும் படிக்க அனுப்பரதெல்லாம் ஆகிற கதையில்ல!அப்பெண் கேலியாக சிரித்ததை பார்த்து ஆட்சியரின் முகம் வாடிப்போனது.
அடுத்து பெரும்பான்மையோர் வரவில்லை.கிராமசபையின் நோக்கம் தோல்வியில் முடிந்தது

அந்த பையன் என்னவேலை செய்கிறான் என்று தெரியவில்லை.அதை சொல்லவில்லை.மளிகை கடையில் பொட்டலம் கட்டலாம்,கட்டிடம் கட்டும் பணியில் இருக்கலாம்,ஹோட்டலில் வேலை செய்யலாம்,விடுதியில் வேலை செய்யலாம் எதுவாகவோ இருக்கட்டும்.அடியும் திட்டும் கூட வாங்கிக்க்கொண்டிருக்கலாம்.சம்பாதித்து வீட்டுக்கு கொண்டு வந்து தர வேண்டும்.அவனது தங்கையை படிக்க வைக்கவேண்டும்.படித்துககொண்டிருந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் யார் தருவார்கள்?சம வயதுடைய குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் போது மற்றவரின் ஏவலுக்கு பணிந்து சம்பாதிக்க வேண்டும்.அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது.
பள்ளிக்கு சென்றால்........................................
பள்ளிக்கு சென்றால் மட்டும் என்ன வாழ்கிறது? விடியற்காலையில் எழுந்து,அவசரமாக குளித்து,வேண்டாவெறுப்பாக தின்றுவிட்டு,பொதி சுமந்து,குனிந்து நடந்து -புததகங்களையும் நோட்டுகளையும் பள்ளியிலேயே அவரவர் மேசை மீதே வைத்து விட்டு ஓரிரு புத்தகங்களை மட்டும் வீட்டுக்கு எடுத்துசென்றால் என்ன?-எதையாவது மனப்பாடம் செய்து திரும்ப வேண்டும்.குழந்தைகள் விருப்பங்கள் எப்போதும் முக்கியமாக இல்லை.பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றப்போகும் கடவுள்கள்!

அனைத்து சமூகபிரச்சினைகளும் குழந்தையையும் பெண்ணையுமே பலியாக கேட்கின்றன!மது,வறுமை,வேலையின்மை,சாதி,மத மோதல்கள்,மனக்கோளாறுகள் என்று எல்லாமும் பெண்ணையும்,குழந்தைகளையும் குறி வைத்து சிதைக்கின்றன.தேசத்தின் சமபாதி குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பேசுவதை பொறுமையாக கேட்பதற்கோ,அடையாளம் காணவோ பெற்றோருக்கு நேரமில்லை.நல்ல மதிப்பீடுகளை நம்மால் கற்றுத்தர முடியவில்லை.அவர்களுக்கு குழந்தைமையையும்,மகிழ்ச்சியையும் வழங்க நாம் உறுதி ஏற்போம்.
குழந்தைகள் தினத்தன்று எழுத நினைத்தது! -

Wednesday, November 10, 2010

கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவனுடன் ஒரு சந்திப்பு

அணுகுண்டை விட வலிமையான ஆயுதமாக எதிரிகள் கருதுவது கற்பழிப்பு.பெண்ணுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும்,தேசத்திற்கும் மிகப்பெரும் அவமானம் என்பதால்!மானம் உயிரினும் மேலானதுஎன்பதால்!பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளில் உச்சமானது கற்பழிப்பும் அதன் விளைவான கொலையும்.தொடர்ந்து இணங்காமல் போராடும்போது கொலைசெய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது.ஒரு பெண் மீதான தீவிர,கீழ்த்தரமான ஆசைக்கு அப்பெண் மசியாதபோது கற்பழிப்புகள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு உறவினர்களால் ,நண்பர்களால் நடத்தப்படுபவை.திடீரென்று திட்டமிடாமல் நடக்கும் கற்பழிப்புகள் குறைவு.மன நோயாளிகளால் நடப்பவையும் உண்டு.மனதிற்கும் பால் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏதுமறியாத சிறுமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
கற்பழிப்பு குற்றங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனைகளுக்கு இடமிருந்தாலும் புகார் செய்யப்படுவது குறைவு என்று சொல்லப்படுகிறது.சமூகத்திற்கு அஞ்சி மறைக்கப்படுவதால் குற்றவாளிகள் பெருகும் வாய்ப்பு அதிகம்.குற்றத்தை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்,காவல்,சட்ட நடைமுறைகளை தாண்டவேண்டும்.இயல்பு வாழ்க்கையை தொலைக்கவேண்டும்.மகளிர் அமைப்புகள் சில வழக்குகளுக்கு சிறப்பான பணியாற்றியிருக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்ட அவன்
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்படும் போது வழியில் அவனை சந்தித்தேன்.காவல்துறையை சேர்ந்த நண்பர் என்னிடம் "ரேப் பண்ணியிருக்கான் ,இவனபார்த்தா எப்படியிருக்கு பார் ?"எனக்கும் ஆச்சரியாமாகத்தான் இருந்தது.ஒரு வீரனைப்போல அவன் முகம் காட்டினான்.குற்றம் சுமத்தப்பட்டவன் என்று அவனிடம் கவலையோ,குற்ற உணர்வோ இல்லை.விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற கோப்பையை உயர்த்தி காட்டும் மலர்ச்சியை நான் பார்த்தேன்.யாராலும் செய்யமுடியாத காரியமா?நண்பருக்கு என்னைப்பற்றி தெரியுமாதலால் அவனை அருகில் அழைத்து பேசினேன்.
அவனது வார்த்தைகளில் சில...................................
இதுக்கு மேல யார் சார் கல்யாணம் பண்ணிக்குவான் அவள,நான் எதுவும் பண்ணல!நான் வேணும்னா பலதடவ கல்யாணம் பண்ணிக்கலாம்,லவ் பண்ணலாம்னு சொன்னேன் .அவ எதுவும் பேசல! கோவத்துல சண்ட புடிச்சப்ப அவ சொந்தக்காரன் ஒருத்தன் பார்த்துட்டான்.அதனால வூட்ல போயி சொல்லிட்டா.அவளுக்குத்தான் அசிங்கம்.எவன் வருவான்?அப்படி ஆத்தரமா இருந்தா ரோட்ல,வீதில எத்தனையோ பேர் இருக்காங்க!நான் தண்ணியடிச்சா அந்த மாதிரி பழக்கமுண்டு.ராத்திரில செகண்ட்ஷோ சினிமா போய்ட்டு வந்து அந்தமாதிரி பொம்பளைங்ககிட்ட பழகியிருக்கிரன்.இதுக்கு மேல யார் கல்யாணம் பண்ணிக்குவான்னு பார்க்கிறேன்(திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்).அன்னக்கி நான் ஒண்ணும் தண்ணியிலகூட இல்ல!நான் ஒரே பையன்,கெடச்ச கூலிக்கு போவேன்.தப்புபண்ணமாட்டேன்.எங்கப்பன் குடிச்சி குடிச்சி காச கரைக்காம இருந்திருந்தா நான் எப்படியோ இருந்திருப்பேன்.நானும் படிச்சிருப்பேன்.இவள மாதிரி ஆளுங்கல்லாம் கால் தூசு. -

Tuesday, November 2, 2010

குருப்பெயர்ச்சி முக்கியமானதா?

ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி வந்துகொண்டே இருக்கிறது.விதம்விதமாக பலன் சொல்லும் புத்தகங்கள் வெளியிடப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.இப்போதும் குரு பெயர்ச்சியாகிறார்.மீனத்திலிருந்து வக்ரகதியாக கும்பத்துக்கு வந்த குரு பகவான் மீண்டும் மீனத்திற்கு செல்கிறார்.அங்கே மே மாதம் முதல் வாரம் வரை இருப்பார்.கடந்த மே மாதத்திலிருந்தே மீனத்தில்தான் இருந்தார்.இப்போது மீண்டும் முந்தைய இடத்துக்கே செல்லும்போது பலன்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மையா?
சுபர்களில் வலிமையான குரு
நவகிரகங்களில் வலிமையையும்,சுபபலன்களை தருவதில் பேராற்றலும் பெற்றவர் குரு.புகழுடன் பெருமைப்படத்தக்க வாழ்வு குருவின் பலமின்றி அமையாது.அவர் இருக்கும் ஸ்தானமும் பார்வைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.தனது சொந்த வீட்டில் இருக்கும்போது அவருக்கு வலிமை அதிகமாவதோடு பலன்களும் வலிமையாகவே இருக்கும்.ஆனால் குரு மட்டுமின்றி அனைத்து கிரகங்களும் தங்களது பணியை செய்துகொண்டுதான் இருக்கும்.செவ்வாய்,சுக்கிரன்,சூரியன் ஆகியோர் இருக்குமிடத்தின் பலன்களுக்கு ஏற்றவாறு சுபபலன்கள் கூடவோ குறையவோ செய்யும்.குரு மீனத்தில் இருக்கும் காலம் முழுதும் சனி கன்னியில்தான் இருக்கிறார்.எனவே அடுத்து வரும் நான்கைந்து மாதங்கள் கடந்த மே மாதத்தில் இருந்து நீங்கள் அனுபவித்து வரும் பலன்களில் பேரளவு மாற்றங்கள் இருக்குமா என்பதை உங்கள் ஜனன கால ஜாதகம்தான் முடிவு செய்யவேண்டும்.
கோச்சாரமும் ஜனன ஜாதகமும்
நவகிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம்பெயர்வது கோச்சாரம் எனப்படும்.சூரியன் ஓராண்டுகாலத்திற்கு பன்னிரண்டு ராசிகளை கடக்கிறார்.ஜனன கால ஜாதகத்தில் சூரியன் ஆட்சி ,உச்சம் பெற்றோ,கேந்திர,திரிகோணங்களில் நற்சாரம் பெற்று அமைந்தால் கோச்சாரத்தில் சூரியன் மாறுவது பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை.திருமணத்திற்கு குருபலன் வேண்டும் என்பார்கள்.எனது நண்பன் ஒருவனுக்கு ஏழரை சனி, குரு பனிரெண்டில் இருக்கும்போது திருமணம் நடந்தது.அனுபவத்தில் கோச்சாரம் சந்திரனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.எனவே,கோச்சார கிரக பெயர்ச்சிகளை மனதுக்கும் ,உடலுக்கும் தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.உதாரணமாக,எனது நண்பனின் திருமணத்தை ஜனனகால ஜாதகம் முடிவு செய்ய,கோச்சாரத்தில் குருவும்,சனியும் பல சங்கடங்களை உருவாக்கினார்கள்.வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஜனன கால ஜாதகப்படி நடக்கும்.
கவலை வேண்டாம்
குரு 2,5,7,9,11, ஆகிய இடங்களில் நற்பலன் தருவார்.நான்கு,பத்தாம் இடங்களில்மத்திம பலன் தருவார்.மற்றவர்களும் குருப்பெயர்ச்சி பற்றிய அதிக கவலை வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்கள் செய்யலாம். குருவை வழிபடலாம்.குலதெய்வத்தை வணங்கலாம்.குரு உங்களை கைவிடமாட்டார்.கவலையின்றி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
இத இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் -

Sunday, October 31, 2010

தீபாவளிக்கு மது விற்பனை அதிகரிப்பது ஏன்?

தீபாவளி மட்டுமல்ல,பொங்கல் ,திருவிழாக்கள்,திருமணம்,சடங்குகள் என்று விழா நாட்களில் மது விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கிறது.பண்டிகைகளுக்கும் மதுவிற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை.பின் ஏனிந்த மோகம்?
பெண் வீட்டார் ஒருவர் உறவினர் ஒருவரை கேட்டார்கள் "அந்த பையன் எப்படி?கெட்ட பழக்கம் ஏதாவதுஉண்டா?".பதில்:"இந்தக்காலத்தில் குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?இந்த பதிலில் மாப்பிள்ளை பற்றிய பொய்யும்,சமூகத்தை பற்றியஓரளவு உண்மையும் இருக்கிறது.
நண்பேண்டா -சொல்ல ஆளில்லை!
எல்லா பண்டிகை காலங்களிலும் வழக்கமாகவே நான் தனிமையை அனுபவித்திருக்கிறேன்.எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால்தான் என்பதை வெகு காலம் கழித்து உணர்ந்தேன்.அதேபோல நண்பர்களின் திருமணத்திற்கு காலையில் முகூர்த்தத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.முந்தைய இரவில் சென்றால் தனியாக அலைய வேண்டும்.குடிக்காத சில நண்பர்கள் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் உடன் இருப்பதில்லை. எனக்கு நண்பர்கள் குறைவாக இருப்பதற்கு மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது ஒரு காரணமா என்று தெரியவில்லை.விழாக்காலங்களில் மது மீது அதிக ஆர்வம் உள்ள சிலர் தங்களது குற்ற உணர்வை -சமூகம் தவறென்று சொல்லித்தந்திருக்கிறது-குறைத்துக்கொள்ள குழுவை சேர்த்துவிடுகிறார்கள்.
விழாக்கால மனப்பாங்கு!
விழா நாட்களில் கூட்டம் கூடுவது இயல்பு.அறிமுகமாகாதவர்கள்,உறவினர்கள்,ஊர்க்காரர்கள் என்று பொது இடங்களில் சந்திக்க வேண்டியிருக்கிறது.எல்லோரும் நம்மை முக்கியமாக கவனிக்கவேண்டும் என்ற எண்ணமும்,கவனிப்பார்களா?என்ற கலக்கமும்,அதன் தொடர்ச்சியாக பதட்டமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நாலு பேருக்கு முன்னால் பேசவோ இயங்கவோ நமக்கு எப்போதும் கொஞ்சம் தயக்கம்தான்.பெரும்பாலான குற்றச்செயல்களும் மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளன.மது பதட்டத்தை குறைத்து செயல்பட தூண்டுகிறது.எனக்கு ஒரு நண்பனை தெரியும்.தண்ணி அடித்த பிறகுதான் போனை எடுத்து பெண்களிடம் பல மடங்கு பேசுவான்.அவனே நேரில் அதிகம் பேசாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.மிதமான போதை இருந்தால் விழா நேரங்களில் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் எளிதாக பதட்டமின்றி,என்ன நினைப்பார்களோ?என்ற எண்ணமின்றி இயங்கலாம்.
வேறு என்னதான் செய்வது?
பண்டிகை என்று சொல்கிறார்கள்,விழா என்று சொல்கிறார்கள்.இனிப்பும்,விருந்தும் சாப்பிட்டு விட்டால் போதுமா?மன எழுச்சி குறையவேயில்லை.நண்பர்கள் இலவசமாக வாங்கித்தருவதாக அழைக்கிறார்கள்.வேறு என்னதான் செய்வது?
மாறிவரும் மதிப்பீடுகள்:
அலுவல் தொடர்பான கூட்டங்களில் ,விருந்துகளில் மது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.மிதமான போதையில் பேசிக்கொண்டிருப்பதுதான்பலருக்கு மகிழ்ச்சியாக ,உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்த உதவுவதாக இருக்கிறது.மதுவால் ஏற்படும் சமூகக்கேடுகள்,சீரழிவுகள்,தனிமனிதனுக்கு உடலநல பாதிப்புகள் எல்லாமும் பின்தள்ளப்பட்டு இன்றைய நாகரீகமாக மாறுவதற்கு நுகர்பொருள் கலாச்சாரமும்,அதன் விளைவாக ஏற்பட்ட அடையாள சிக்கல்களும் ஒரு காரணம்.தவிர,இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியும் இல்லை.
-

Thursday, October 28, 2010

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது எப்படி?

காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார்.காதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.
மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரை உற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
உண்மையை உணர்த்தும் உடல்மொழி !
படிப்பெதுவும் தேவையில்லை.கண்களை உற்று கவனியுங்கள்.உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்.அவரது கைகள்,கால்கள்,முகபாவம் என்னசொல்கிறது என்பதை பொறுமையாக கவனியுங்கள்.ஒருவரை பார்த்தவுடன் சோகமாகஇருப்பதை,கோபமாக இருப்பதை நம்மால் சொல்லமுடியும்தானே!அசட்டுச்சிரிப்பா?சந்தோஷ சிரிப்பா?சோக சிரிப்பா?என்பதை உணர உங்களால் முடியும்.சில நேரங்களில்யாரையோ ஏன் டென்ஷனாக இருக்கிறீர்கள்?என்று கேட்டிருக்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்கு தெரிந்தது?இன்னும் இன்னும் கவனம் செலுத்துங்கள்.ஒருவரது உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.சரியான எதிர்வினையும் உங்களிடம் உருவாகும்.
கவனமாக கேளுங்கள் :
உடல் மொழிகளுக்கு அடுத்து ஒருவரது வார்த்தைகள்தான் அவரை நமக்கு உணர்த்துகிறது.காது கொடுத்து கேளுங்கள் கடவுள் ஆகலாம் -தலைப்பிட்ட எனது பதிவைஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்.வார்த்தைகளில் உள்ள உணர்ச்சியை அடையாளம் காணுங்கள்.அதற்கு ஏற்றவாறு சரியான வார்த்தைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.ஒருவர் துக்ககரமான வார்த்தைகளை பேசும்போது நீங்கள் சிரிக்கமாட்டீர்கள் இல்லையா?
ஒருவர் எப்படி உணர்கிறார்?
ஒரே சம்பவம் உங்களிடத்திலும்,உங்கள் நண்பரிடத்திலும் ஒரே உணச்சியைத்தான் தோற்றுவிக்கும் என்பது நிச்சயமல்ல!இருவருக்கும் வேறுவேறு நம்பிக்கைகள்,கொள்கைகள் உள்ளன.எனவே,அவரது உணர்வுகளை கவனியுங்கள்,அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் அவரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.நீங்கள் புரிந்து கொண்ட அந்த உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.ஆங்கிலத்தில் Empathy என்றொரு சொல் இருக்கிறது.நீங்கள் உணர்வதையே நானும் உணர்வது.கொஞ்சம் அக்கறையும்,மனிதநேயமும் இருந்தால் சாத்தியம்தான்.இருவரும் ஒரே மாதிரி உணர்ந்தால் குழப்பத்துக்கும்,பிளவுக்கும் அங்கே என்ன வேலை?
மேலும் சில துளிகள் ..............
  • ஆம்.கண்களை கவனிக்கவும்.
  • கவனமாக கேட்கவும்
  • அவரும் உங்களைப்போல மனிதர்தான்.
  • ஒவ்வொருவருக்கும் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.
  • உணர்வுகளை கண்டறியுங்கள்
  • ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களால் புரிந்து கொள்ள முடியும்.முயற்சி செய்யுங்கள்.மதிப்பு மிக்க உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.அமைதியும்,சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிலை பெறும். -

Monday, October 25, 2010

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய எனது பதிவை படித்துவிட்டு ஒருவர் கேட்டார்.ஆண்களுக்கு இவையெல்லாம் ஏற்படாதா?.விதி விலக்குகள் விதிகள் ஆகுமா என்று தெரியவில்லை.சில ஆண்களுக்கு பெண்கள் மீது தீராத ஆத்திரம் உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.எங்கேயாவது ஆணுக்கு இப்படிப்பட்ட தொல்லைகள் நேர்ந்தால் அவன் பாவம்.அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த சந்தோஷமும் இல்லை.பெண்களைப்போல அவனால் வெளியே சொல்லவும் முடியாது.அடேயப்பா என்று மேலும் கீழும் பார்ப்பார்கள்.
ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெண்களுக்கு கிடைக்கும் சமூக ஆதரவு ஆண்களுக்கு கிடைக்காது.பெண்களுக்கு மற்ற பெண்கள் ஆதரவாக இருக்கும்போது,ஆண்கள் இன்னொரு ஆணுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்.எதிர்பாலினர் அங்கீகாரம் ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாவதால்பெண் தனக்கு ஆதரவாக திசைதிருப்புவது எளிது.ஆண்களைப்போல பெண்களின் தொல்லைகள் வெளிப்படையாக இருக்காது.பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆண்,தனது நண்பர்களை இழக்க வேண்டியிருக்கலாம்.அந்த இடத்தை விட்டு மாறுதல் பெற்றுக்கொள்வதுதான் நல்லது.
எனக்கொரு நண்பன் இருந்தான்.அவனுக்கு திருமணமாகவில்லை.அவனுடைய அலுவலகத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு -திருமணமானவர்-அவனை பிடித்துப்போனது.சாப்பாடு எடுத்து வரத்தொடங்கினார்.கணவர் பற்றி தொடர்ந்து குறை கூறுவது,கணவர் வீட்டில் இல்லைஎன்பதை அழுத்தமாக தெரிவிப்பது.அடிக்கடி போனில் பேசுவது என்று ஆரம்பித்தார்.அவனுக்கு பிடிக்கவில்லை.நேரில் பார்ப்பதை தவிர்த்தான்.போனை எடுக்கவில்லை.யாரிடமும் வெளியே சொல்லாமல் எனக்கு போன் செய்தான்.அந்த பெண்,நிறுவன தலைமையிடம் நெருக்கமாக இருந்தார்.அமைதி காக்குமாறு கூறினேன்.மற்ற பெண்களும் இவனை பார்த்தாலே குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.அப்பெண்ணின் திட்டமிட்ட அணுகுமுறையால் அலுவலக நண்பர்கள் இவனை விட்டுவிட்டு பெண்களிடமே அதிகம் பேசிக்கொண்டிருக்க தனிமைப்படுத்தப்பட்டான்.ஒரு கட்டத்தில் மாறுதல் பெற்று வெளியேறினான்.
பெண் என்னதான் செய்வாள் ?
  • நண்பர்களை பிரித்து தனிமைப்படுத்துவது.
  • செல்வாக்கை குறைக்க முயற்சி செய்வது.
  • அதிகாரிகளிடம் பொய்யான காரணங்களை சொல்லி முறையிடுவது.
  • மற்ற பெண்களையும் தனக்கு ஆதரவாக மாற்றுவது.
  • பணியில் ஒத்துழைக்க மறுப்பது
  • நண்பர்களை விட்டே பின்தொடர்வது.
  • தொடர்ந்து இமேஜை கெடுக்கும் விதத்தில் அவதூறு பரப்புவது.
  • செயலையும்,நோக்கங்களையும் முடக்க நினைப்பது.
பொதுவாக ஆணுக்கு நடப்பதெல்லாம் அபூர்வமாக நடப்பதுதான் .விபத்துபோல.ஆனால் பெண்ணுக்கு நடக்கும் தொல்லைகள் வாழ்க்கை முறையாக உள்ளது.ஆணுக்கு நஷ்டஈடு கொடுக்கலாம்.ஆனால் ஆண்களால் நேரும் பெண்களின் தொல்லைகளுக்கு சட்டமும்,இயக்கமும் தேவை.இது பாலியல் தொல்லைகள் என்றில்லாமல் அனைத்து பிரச்சினைகளுக்கும் பொருந்தும். -

Saturday, October 23, 2010

உங்களை உலுக்கும் பிரச்சினைகள் குறித்து .......

வாழ்வில் பிரச்சினைகள் ஓர் அங்கம்.உள்ளங்களில்,உறவுகளில்,பணியிடங்களில்,குடும்பத்தில் என்று உள்ளத்தை தைக்கும் சிக்கல்கள் நமக்கு இயல்பானவை.இயற்கை மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்புத்திறனை வழங்கியிருப்பது போலவே மனதிற்கும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கியிருக்கிறது.நோய் எதிர்ப்பு திறனை தாண்டி நோய்கள் உண்டாவது போலவே உங்கள் சிந்திக்கும் திறனை தாண்டி தீர்க்கமுடியாத பிரச்சினைகள் உருவாகின்றன.நமது மதிப்பீடுகள் தந்த நம்பிக்கைகள் வழியாக நாம் எப்போதும் அன்றாட பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டே இருக்கிறோம்.நமது ஆற்றலால் முடியாமல் சில நமது உள்ளத்தை பாதித்து நம்மால் எதிர்கொள்ளமுடியாதபோது வழக்கமாக செய்யும் செயல்கள் என்ன?மர
மரபு சார்ந்த வழிகளில் .................
நமது வாழ்க்கைமுறைக்கு உட்பட்டு மரபு சார்ந்து சில வழிகளை மேற்கொள்கிறோம்.அவை.
  • கோவிலுக்கு செல்கிறோம் :கடவுளிடத்தில் கோரிக்கை வைக்கிறோம்.பிரச்சினைகள் தீர்ந்தால் காணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொள்கிறோம்
  • மத குருமார்களை சந்திக்கிறோம்:நமது சிரமங்களை கூறி ஆலோசனை கேட்கிறோம்.
  • ஜோதிடர்களை சந்திக்கிறோம்:எதுவும் கூறாமலேயே நல்ல நேரத்தை கேட்கிறோம்.சிலர் வெளிப்படையாக பேசுகிறார்கள்.குரு மாறினால் ,சனிப்பெயர்ச்சி அடுத்து அல்லது திசை மாறியவுடன் உங்கள் தொல்லைகள் தீரும் என்கிறார். நம்பிக்கையுடன் திரும்புகிறீர்கள்.
  • நல்ல நண்பர்கள் ,உறவினர்கள் உங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தால் அவர்களிடம் ஆலோசனை கேட்கிறோம்.
  • டாஸ்மாக்கை தேடிப்போகிறோம்.
  • எதுவும் செய்யாமல் மனநலம் பாதிக்கும் அளவுக்கு சிக்கலாக்குகிறோம்.
தற்கொலையை தேர்ந்தெடுப்பது,மற்றவர்களை துன்புறுத்துவது என்ற அளவில் ஆளுமைகளுக்கு தகுந்தவாறு பிரச்சினைகளை அணுகி வந்திருக்கிறோம்.
நவீன வழிமுறைகள் என்ன?
சமீபத்தில் பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றை திரையரங்கத்தில் பார்த்தேன்.உங்கள் பிரச்சினைகளுக்கு குறுந்தகவல் மூலம் தீர்வு தரப்படும் என்று தெரிவித்தது.அந்நிறுவன சந்தாதாரர் ராகுலை எல்லோரும் தேடுகிறார்கள்,விரும்புகிறார்கள்.SMS COUNSELLING சிலருக்கு தீர்வை தரலாம்.பொதுவாக counselling எனப்படுவது நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்று அழைக்கப்படுகிறது.சில இடங்களில் மன நல ஆலோசனை.உளவியலில் பயிற்சி பெற்ற ஒருவரிடம் நிகழ்வுகளையும்,உங்கள் உணர்வுகளையும் தெரிவித்தால் அவர் பிரச்சினை தீர்க்க வாய்ப்புகளை வழங்குவார்.நீங்கள் சரியான முடிவை தேர்ந்தெடுக்கலாம்.யாரிடமும் சொல்ல முடியாத தனிநபர் பிரச்சினைகளுக்கு இவை நல்ல தீர்வு.அயல் நாடுகளில் பிரபலமடைந்த போதிலும் நம்மிடையே இன்னும் போதுமான வாய்ப்புகள் இல்லை.உங்களுக்கு யாரேனும் தெரிந்தால் பயன்படுத்தலாம்.இல்லையெனில் மனநல மருத்துவரை அணுக வேண்டும்.
சுயமாகவே தீர்வை அணுகும் முயற்சி .......
அமைதியாக தனிமையில் அமர்ந்து உங்கள் பிரச்சினைகளை தாளில் எழுதுங்கள்.அது உங்களிடம் தோற்றுவித்த உணர்வுகளை குறிப்பிடுங்கள்.சிந்தியுங்கள்.பிரச்சினை தொடர்பான அனைத்து தகவல்களையும் தேடி கண்டுபிடிக்கவும்.உதாரணமாக தூக்கமின்மை என்றால் அதைப்பற்றி இணையத்தில்,புத்தகத்தில் தேடி சேகரிக்கவும்.புதிய தகவல்களை கொண்டு என்னென்ன தீர்வுகள் உள்ளன என்பதை எழுதவும்.தீர்வுக்குள்ள சாதகமான,பாதகமான விசயங்களையும் எழுதுங்கள்.அதிக நன்மையுள்ள தீர்வை தேர்ந்தெடுக்கவும்.வழக்கமாக,பிரச்சினைகள் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் நம்மை சிந்திக்கவிடாது.இன்னொருவருடன்(ஆலோசகர்,நண்பர்,உறவினர்,குருமார்கள்)
பேசி தீர்ப்பதே சிறந்தது என்றபோதிலும் முயற்சி செய்யுங்கள்.உரிய தீர்வுகளை கண்டடைந்தால் நாளை வாழ்வு நலமாகும். -