Tuesday, December 23, 2014

நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு

நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக பணம் கொடுக்க ஆள் வேண்டும்.பெண் கொடுப்போர் எடுப்போர் எல்லாம் நாலு பேரை விசாரிக்காமல் முடிவு செய்ய மாட்டார்கள்.யாரும் எனக்குத் தேவையில்லை என்று தூக்கி எறிந்து  விட முடியாது.


பணக்காரர்களுக்கு பணத்தை வீசி எறிந்தால் எல்லாம் வரும்.தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயம் நடுத்தர வர்க்கத்துக்கு அதிகம்.அலுவலகத்தில் சம நிலையில் உள்ளவர்கள்,கீழ்நிலையில் உள்ளவர்களைத்தான் தனிமைப்படுத்த முடியும்.அதிகாரியை தனிமைப்படுத்த  முடியாது.பணமும் அதிகாரமும் எல்லாவற்றையும் கொண்டுவந்து விடுகிறது. 

நடுத்தர வர்க்கத்துக்கு உறவுகள் வேண்டும்.அவர்களுடைய பலமும் அதுதான்.என் நண்பன் ஒருவனுக்கு இருபது வயதில் திருமணம் நடந்தது.அவனுக்கு வேறு  கனவுகள் இருந்தன.சொந்தக்காரப் பெண்ணை கல்யாணம் முடிக்கவேண்டும் என்று சிறு வயதிலேயே இரண்டு வீட்டிலும் முடிவு செய்து விட்டிருந்தார்கள்.அவன் தீர்மானமாக மறுத்துப் பார்த்தான்.


ஒரு நாள் அவனுடைய உறவினர்கள் அத்தனைபேரும் கூடி விட்டார்கள்." நாங்களெல்லாம் உனக்கு வேண்டாம் என்றால் உன் விருப்பம் போல செய்!'' என்றார்கள்.சொத்து பத்து கிடைக்காது என்றார்கள்.அடுத்து என்ன வேலை செய்ய வேண்டுமென்று அவர்களே முடிவு செய்தார்கள்.அவனது திறமைகளையும் கனவுகளையும் அந்த சமூகம் தின்று விட்டது.

மனிதன் சமூக விலங்கு என்று அரிஸ்டாட்டில் சொன்னார்.மனிதன் இயல்பு தவறும்போது இடித்துரைப்பது சமூகம்தான்.சமூகக் கட்டுப்பாடுகளுக்குப்  பொருந்திப் போக வேண்டும். திட்டுவது,கேவலமாகப் பேசுவது,தனிமைப்படுத்துவது என்று தண்டனைகள் கிடைக்கும்.சட்டம் தன் கடமையைச் செய்யக்கூடும். 


எப்போதோ படித்த கதை ஒன்று .விட்டில் பூச்சிகள் விளக்கைத் தேடிச்சென்று சிக்கி மடிந்து போகும்.ஒரு விட்டில் பூச்சி மட்டும் வானத்தில் உள்ள நிலாவை நோக்கி பறக்க ஆரம்பித்தது.உடனிருக்கும் அத்தனை பூச்சிகளும் தடுத்தன.அந்த நாலுபேரை(?) மதிக்காமல் பறக்க ஆரம்பித்தது.மேலேமேலே உற்சாகத்துடன் பறந்து சென்றது.நிலவை அடைய முடியாவிட்டாலும் அதிக சந்தோஷத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தது.

பூச்சிக்கு சரி மனிதனுக்கு சாத்தியமா?நாலு பேரை ஒதுக்கிவிட்டு முன்னேறிச்செல்வது அத்தனை எளிதா?
-