Friday, December 31, 2010

செம்மொழியான தமிழ் மீது


செம்மொழியான தமிழ் மீது

பற்று அவனுக்கு

எனக்கும்தான்

ஆங்கிலத்திற்கு எதற்கு

கொண்டாட்டம் என்கிறான்

தமிழோ ஆங்கிலமோ

வாழ்வை கொண்டாடு

அந்நியனோ நம்மவனோ

அடுத்தவனை நேசி

நமதென்றால்

நலமாகும் வாழ்வு
-

Thursday, December 30, 2010

முகம் மாறிப்போன தமிழ் சினிமா


பல தமிழ் சினிமாவை நின்றுகொண்டே பார்த்திருக்கிறேன்.உட்கார இடம் கிடைக்காது.இருக்கைகளின் அளவுக்கு தாண்டி டிக்கெட் கொடுத்து விடுவார்கள்.இரண்டரை மணி நேரமும் நின்றுகொண்டே படம் பார்க்கவேண்டும்.கீழே உட்கார நினைத்தாலும் இடம் இருக்காது.அதுவும் முதல் நாளன்று அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.

மிகப்பல ஆண்டுகளுக்கு முன்பென்று நினைக்கவேண்டாம்.தொண்ணூறுகளின் துவக்கத்தில்கூட இந்நிலை இருந்த்து.அப்புறம் வந்த்து திருட்டு சிடி யுகம்.தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டுவிட்ட்து.நூறு நாட்கள் என்பது சாதாரணமாக இருந்த நாட்கள் போய் இந்த ஆண்டு பன்னிரெண்டு படங்களே பார்த்திருக்கின்றன.

சினிமா டிக்கெட்டுகளின் விலையும் இப்போது வசதியானவர்களும்,காதலர்களும் படம் பார்க்க போகும் அளவுக்கு இருக்கிறது.சாதாரணமானவர்கள் திருட்டு சிடியில் குடும்பத்தோடு பார்த்துவிடுகிறார்கள்.செலவும் குறைவு.நினைத்த நேரத்தில் அணைத்துவிடலாம்.

சினிமாக்களுக்கு சென்று பாதியில் எழுந்து வந்த அனுபவம் எனக்கு இருக்கிறது.உட்காரமுடியாத அளவுக்கு தரத்துடன் அவை இருக்கும்.பணத்தையும் இழந்து நேரத்தையும் இழந்து வெறுத்து வெளியேறும் தர்மசங்கடம் திருட்டு சிடியில் இல்லை.இதனாலேயே மக்களின் ஆதரவு கிடைத்துவிட்ட்து.

கேபிள் சங்கர்,சி.பி.போன்றவர்கள் கஷ்டப்பட்டு சினிமாவை பார்த்து நமக்காக விமர்சனம் எழுதி நம்மையெல்லாம் ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறார்கள்.பிளாக்கில் படித்து விட்டு பல சினிமாக்களை தவிர்த்திருக்கிறேன்.சினிமா விமர்சன்ங்களுக்கு மனமார்ந்த நன்றி.

அடிக்க அடிக்க தாயிடம் ஓடும் குழந்தையை போல சினிமா மீதான கவர்ச்சி குறையவில்லை.எப்போதும் குறையாது.சினிமாவைப்போன்றுபிரபலமும் பணமும்வேறு எந்த தொழிலிலும் கிடைக்காது.குறைந்த முதலீட்டில் நல்ல படங்கள் எடுக்க முடியும் என்பதை பல நேரங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது.நன்கு திட்டமிட்டு உழைத்தால் நம்மாலும் சிகரத்தை தொட முடியும்.அதற்கு நம்மிடமே நல்ல உதாரணங்கள் இருக்கின்றன.வரும் புத்தாண்டு அதற்கான கதவுகளை திறக்கட்டும்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


-

Wednesday, December 29, 2010

அவரவர் கஷ்டம்


அந்தத் தொலைபேசி

உரையாடலுக்குப் பிறகு

பேசும் கருவியை

உடைத்து விட்டான்.

கண்களில் நீர்

கைகளில் நடுக்கம்

சுய நினைவின்றி

புகைத்துக் கொண்டிருந்தான்.

என்ன நடந்தது?

ஏன் கேட்கிறீர்கள்?

யாருடைய கண்ணீரையாவது

துடைக்க

உங்களுக்கு மனமிருந்தால்

உங்கள் அருகே

உங்கள் வீட்டில்

உங்கள் தெருவில்

அதை செய்யுங்கள்.

வம்புக்கு

அலைய வேண்டாம்.

அவரவர் கஷ்டம்

அவரவருக்கு.





-

Tuesday, December 28, 2010

தமிழ்மணம் போட்டியில் இரண்டாம் கட்ட்த்துக்கு தேர்வான கதை.


கடுமையான போட்டியில்!?நான் கூட இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.சென்ற ஆகஸ்டு மாதத்திலிருந்துதான் பதிவுலகில் இருக்கிறேன்.எனக்கு நேரடியாக எந்த பதிவரையும் தெரியாது.(ஈரோட்டிற்கு செல்ல முடியவில்லை.)தமிழ்மணம் விருது அறிவிப்பை பார்த்தவுடன் கலந்துகொண்டால் நான்கு பேர் பார்வை படும் என்று நினைத்து பரிந்துரை செய்தேன்.

முதல் கட்ட வாக்கெடுப்பு துவங்கியவுடன் சில நாட்களில் மங்கை அவர்கள் எனது இடுகை ஒன்றிற்கு பின்னூட்டம் இட்டிருந்தார்.அருமை.வாழ்த்துக்கள்.’-என்று.ஏதேது நாம் கூட கவனிக்கப்படுகிறோம் என்று சந்தோஷமாக இருந்த்து.மீண்டும் ஒரு முறை நன்றி! மங்கை அவர்களே!

தமிழகத்தின் பாரம்பரிய கலையான தெருக்கூத்து தொடர்பான நாட்டுப்புற நம்பிக்கைகள் பற்றியது.ரதி,மன்மதன் கதை.யாரையும் முட்டாளாக்கும் காமத்தை கட்டுப்படுத்துவது பற்றிய நம்பிக்கை அது.இடுகைத்தலைப்பு,

நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காம்ம்.

(தமிழிசை,நடனம்,தமிழ்கிராமியக்கலைகள்-பிரிவில்) கதைக்கு வருகிறேன்.போட்டியில் கலந்துகொள்ளும் எல்லா இடுகைகளையும் எத்தனை பேர் படித்து வாக்களித்து இருப்பார்கள்.?அப்படி யாராவது இருந்தால் அவருக்கு தரலாம் எல்லா விருதையும்!.நாலு பேருக்குக் கூட தெரியாமல் நான் எப்படி இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்கு வந்தேன்?

யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்றால் அந்த ரகசியத்தை சொல்கிறேன்.வேறொன்றுமில்லை.அந்த்த் தலைப்பில் மொத்தம் எட்டு இடுகைகள்தான் முதல் கட்ட போட்டியில் இருந்த்து.எட்டும் இரண்டாம் கட்ட்த்துக்கு வந்து விட்ட்து.எனக்கும் வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்கப் போகிறவர்களுக்கும் மிக்க நன்றி.


-

Sunday, December 26, 2010

இந்தியா நற்பண்புள்ள வல்லரசாக நீங்கள் உதவலாம்.

இந்தியா வல்லரசாவது உறுதி.அதென்ன நற்பண்புள்ள வல்லரசு?பொறுமை,சகிப்புத்தன்மை,
ஆபத்தில் உதவுதல்,தரமற்ற செயல்களில் ஈடுபடாதிருத்தல்,மனிதாபிமானம் போன்ற நற்பண்புகளை கொண்டிருப்பதே நற்பண்புள்ள வல்லரசு.

இந்தியாவில் சுமார் எட்டு மில்லியன் குழந்தைகள் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.குழந்தைகளுக்கு "கல்விக்கான உரிமை"-என்பது இலவசமாக கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்.இது குறித்த விழிப்புணர்வுக்காகவும்,நமது ஆதரவுக்காகவும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம்(UNICEF) Awaaz Do என்னும் இயக்கத்தை துவக்கியுள்ளது .

இந்தியக் குழந்தைகளுக்கு அவர்களது கல்விக்கான உரிமையை பெற நாம் கரம் கொடுத்து வலு சேர்ப்போம்.அறியாமையில் திளைக்கும் ஒரு நாடு வல்லரசாக முடியாது.கீழ்க்கண்ட செய்தியை நண்பர்களுடன்,தெரிந்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Hi,

Recently I came across a startling fact that 8 million children in our country are denied their basic right to education. With the Right to Education Act making education free and compulsory, we must now join hands to help these children exercise this right.

UNICEF has started a movement Awaaz Do that provides us a platform to ensure that no child in this country is denied his/her basic right to education. I have joined this movement and I urge you to pledge your support to the cause.

To join the cause,
SMS AWAAZDO to 53030 or log on to www.AwaazDo.in

Together we can make a difference. So let’s get started.

Awaaz do!
-

Saturday, December 25, 2010

வெடித்து சிதறியது ராக்கெட்தான்!


வெடித்து சிதறியது ராக்கெட்தான்

இந்தியனின் இதயமல்ல

சோதனைகளை சாதனையாக்கும்

நெஞ்சுரம்

எங்களுடையது.

தோல்விகளை கண்டு

துவண்டதில்லை

நாங்கள்

மீண்டு(ம்) வருவோம்

உலகை வெல்ல!

-

Friday, December 24, 2010

கள்ளக்காதல் இயற்கையானதா?


குற்றமாக தண்டனைக்குரியதாக கருதப்பட்ட சில செயல்கள் தற்போது இயல்பானதென்று புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.தனி மனித உரிமைகளாக விவாதிக்கப்பட்டு மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ள சமூகம் தயாராகிவிட்டது.எளிய உதாரணம்.-ஓரினச்சேர்க்கை.இதே போல பாலியல் தொடர்பான இன்னொரு பொருள் கள்ளக்காதல்.

சட்டப்பூர்வ திருமண உறவை தாண்டி ஆணோ,பெண்ணோ வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுவதை கள்ளக்காதல் என்கிறோம்.காமமே இதன் அடிப்படையாக கருதப்படுகிறது "கணவனுக்கு அல்லது மனைவிக்கு போதுமான பாலியல் திறன்கள் இல்லை என்று கருதுவோர் இருக்கிறார்கள்.நாட்டுப்புற நம்பிக்கைகளில் ஒன்றாக இவை இருந்தது.

வாத்ஸ்யாயனார் காம சூத்திரத்தில் கள்ளக்காதலை குறித்துள்ளார்.அவரது காலத்தை கவனியுங்கள்.வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காதலில் விழுபவர்கள்தான் என்கிறார்.மதிக்கப்படாத நிலை,சூழல் போன்றவற்றை முக்கிய காரணமாக கூறுகிறார்.

பரிணாமக்கொள்கையும் ,பிராய்டிசமும் உலகை மாற்றின.தற்போது கள்ளக்காதலுக்கு மரபணுக்களை காரணமாக கருதுவோர் இருக்கிறார்கள்.மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்.ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது முன்னோர்களுக்கு ஏது?விலங்குகளுக்கு குடும்பம்,அவமானம்,கௌரவம் என்று ஏதேனும் உண்டா?மனிதன் கால்களால் நிமிர்ந்து நடந்து சிந்திக்க ஆரம்பித்து என்னென்னவோ கொண்டு வந்தான்.

ஒருவருக்கு மேற்பட்ட காதல் உணர்ச்சிகள் மரபணுக்கள் மூலம் பெறப்பட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தாது.ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.சுய இன்பம்,ஓரினச்சேர்க்கை உள்பட மற்ற வக்கிரங்கள் விலங்குகளிடம் உண்டா என்று யாரும் கேட்கவேண்டாம்.ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மரபணுக்கள் எல்லோருக்கும் இருப்பதில்லை.கள்ளக்காதல் இன்னும் விலங்கு நிலையிலேயே இருப்பவர்களால் நிகழ்த்தப்படுவது என்றும் கொள்ளலாம்.

26.12.2010 அன்றுநடைபெற உள்ள ஈரோடு பதிவர் சங்கமம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்.பெரியார் மண்ணிலிருந்து நாம் சமூக மேம்பாட்டுக்கான கருவியைப் பெறுவோம். -

Tuesday, December 21, 2010

பெண்களுக்கு அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்

அமெரிக்க புற்று நோய் கழகத்தின் அறிவிக்கைப்படி, ஆண்டுதோறும் 1.3 மில்லியன் மார்பு புற்றுநோய்கள் கண்டறியப்படுகிறது.இவற்றில் இறப்பு 465,000.இந்நோய் தொடர்ந்து அதிகரித்து கவலை தரும் ஒன்றாக மாறி வருவதை தொடர்புள்ள துறையினர் சுட்டுகிறார்கள்.ஆரம்ப காலத்தில் கண்டறிவது இழப்பைத்தடுக்கும்.அதிகம் பெண்களையே தாக்கும் இந்நோய் குறித்து விழிப்புணர்வு அவசியம்.
அறிகுறிகள்:
மார்பு இயல்புக்கு மாறாக வீங்கியிருத்தல்,வலிஆகியன தெளிவான முதல் அறிகுறி.சிவப்பு கலராக மாறியிருப்பது,காம்பில் நமைச்சல்,எரிச்சல்,புண்,போன்றவை உடனே மருத்துவரை அணுகத்தக்கவை.
காரணிகள்:
பெண்களின் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை,வயது (வயது அதிகரிக்க அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரிக்கிறது) ,குடும்பத்தில் ஏற்கெனெவே வரலாறு இருப்பது,பருவமடையும் வயது,மரபுக்கூறுகள் போன்றவை தீர்மானிக்கின்றன.மேற்கத்திய வாழ்க்கைமுறையை பின்பற்றி குழந்தை பெறுவது,பாலூட்டுவதில் உள்ள நடத்தைகள் ஈஸ்ட்ராஜன் ஹார்மோனை அதிகரிக்க செய்து மார்பக புற்றை ஏற்படுத்தலாம் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது,அதிக எடை,சுற்றுச்சூழல்(பூச்சிக்கொல்லி மருந்துகள் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுத்தலாம்).மது அருந்துவதால் ரத்தத்தில் ஈஸ்ட்ரோசன் அளவை கல்லீரல்ஒழுங்குபடுத்த முடியாமல் போவது போன்றவை குறிப்பிடத்தக்க காரணங்கள்.மேலும்,இளம் வயதில் கதிர்வீச்சு சிகிச்சை இந்நோய் வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.
முன்னெச்சரிக்கையாக,
  • சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.கண்ணாடி முன் நின்று மார்பில் கைவைத்து கட்டிகள் இருக்கிறதா என்றும்,வீக்கம்,சிவப்பு கலரில் இருத்தல் போன்ற அறிகுறிகளையும் பரிசோதித்துகொள்ளலாம்.ஏதேனும் மாற்றங்கள் காணப்பட்டால் மருத்துவரை அணுகலாம்.
  • உடலில் கொழுப்பு மிகுதியான உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.வயது ஏற ஏற கொழுப்பு உணவுகளை குறைத்துக்கொண்டே போவது பல வகையில் நல்லது.
  • தேசிய புற்று நோய் நிறுவனத்தின் அறிக்கைப்படி,அதிக எடை மார்பு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்கிறது.
  • உடற்பயிற்சியுடன்,ஹார்மோன் சிகிச்சைகளை தவிர்த்து மாற்று வழிகளை கண்டறிவது நல்லது.
வருமுன் காப்பதுநல்லது இரண்டாவது,ஆரம்ப நிலையில் கண்டறிவது இழப்பை தடுக்கும்.இதற்கு சுய பரிசோதனையே சிறந்த வழி!


-

Saturday, December 18, 2010

மூட்டைப்பூச்சியுடன் ஒரு பயண அனுபவம்


சென்னைக்கு செல்ல வேண்டும்.முந்தைய இரவிலிருந்தே தயாராகிக் கொண்டிருந்தேன்.தூங்குவதற்கு வெகு நேரமாகிவிட்டது.அடுத்த நாள் இரவு பேருந்து ஏறினால் காலையில் சென்னை சென்று சேர்வேன்.ஓரளவு தூங்கிக்கொண்டு போகிற மாதிரி பேருந்தாக இருந்தால் நல்லது.உடன் வரும் நண்பனிடம் கூறினேன்."பணம் போனாலும் பரவாயில்லை.நல்ல பஸ்ஸாக இருந்தால் பரவாயில்லை"."முன் பதிவு தீர்ந்து போய்விட்டது".பெங்களூருவிலிருந்து நிறைய பஸ் வருகிறது.எந்த பிரச்சினையும் இல்லை.

பத்து மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறோம்.அவன் சொன்ன மாதிரியே பல பஸ்கள் வந்து நின்றது.எந்த பஸ்சிலும் இடம் இல்லை. இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது.வேலூர் போய் அங்கிருந்து சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.அதற்கும் பஸ் கிடைக்கவில்லை.காஞ்சிபுரம் தாண்டி செல்லும் பேருந்து ஒன்று.வேலூர் வரை போய் விடலாம் என்று ஏறிக்கொண்டோம்.நண்பனுக்கும் எனக்கும் வேறுவேறு இடத்தில் இருக்கை.

அரை மணி நேரம் ஆகியிருக்கும்.ஒரு பயணி எழுந்தார். "யோவ் கண்டக்டர்"என்றொரு சத்தம்.இங்க வாய்யா! என்னா பஸ் வச்சினு இருக்கிறீங்க!காசு மட்டும் மத்த பஸ்ஸ விட ரெண்டு மடங்கு வாங்குறீங்க,ஒரே மூட்டைப்பூச்சியா இருக்குது.ஒரு மூட்டைப்ப்பூச்சியை நசுக்கியிருந்தார்.சீட்டில் ரத்தக்கறை.கண்டக்டருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை."அதுக்கு நான் என்ன பண்றது?"." நீ போய் நிர்வாகத்துகிட்ட சொல்லு".மற்ற பயணிகளும் கண்டக்டரை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

வாக்கு வாதத்திற்குப் பிறகு பயணி கண்டக்டர் சீட்டிலும்,கண்டக்டர் பயணி சீட்டிலும் மாறி உட்கார்ந்தார்கள்.சிறிது நேரத்திற்குப் பிறகு இன்னொருவர் ஆத்திரமாக பேச ஆரம்பித்தார்.போதையில் வேறு இருந்தார்.ஆட்சியாளர்களை திட்டிக்கொண்டு இருந்தார்.அப்புறம் குறட்டையுடன் தூங்கிப்போய் விட்டார்.ஆளாளுக்கு முனகிக் கொண்டிருந்தார்கள்.

நான் தூங்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன்.சீட்டில் சாய்ந்து உட்காருவதற்கு பதிலாக இருக்கையின் நுனியில் இருந்தேன்.துணிப்பையை மடிமீது வைத்துக்கொண்டேன்.கலக்கமாக இருந்தது.பையில் எங்காவது ஏறி அமர்ந்து என் வீடு வரை வந்துவிட்டால்? நினைக்கவே ஒரு மாதிரி இருந்தது.புத்தகங்கள் வேறு நிறைய இருக்கின்றன. மூட்டைப்பூச்சி ஏறிய புத்தகங்களை பார்த்திருக்கிறேன்.பயத்திலேயே புத்தகங்களை இரவல் வாங்குவதை விட்டுவிட்டேன்.இன்னும் ஒரு மணி நேரம்தான்.வேலூர் போய் விட்டால் நிம்மதி.நல்ல பஸ் பார்த்து போகலாம். கொஞ்ச நேரம் தூங்கலாம்.

இருக்கையின் பின்புறமும்,இரண்டு பக்கத்திலும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.எனக்கு எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.எங்காவது கருப்பாக தெரிந்தால் கை வைத்து தடவிப் பார்த்தேன்.நான் மூட்டைப்பூச்சியை பார்க்கவேயில்லை.கடிப்பது நான் உணராமல் இருக்கிறேனோ? மூட்டைப்பூச்சி மூலம் தொற்று நோய் பரவுமா? அப்படி எதுவும் படித்ததாக நினைவில் இல்லை.சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது.வேலூர் கொஞ்ச தூரம்தான்.

வேலூரை நெருங்க நெருங்க மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி.மனம் லேசாகிக் கொண்டிருந்தது.பேருந்து நிலையம் வரும் முன்பே நண்பனிடம் போனேன்."இங்க இல்ல,காஞ்சிபுரத்துக்கு டிக்கட் வாங்கிட்டேன்.கண்டக்டர் சொன்னார்.அங்கிருந்து ஒரு மணி நேரம்தானாம்,கொடுக்கட்டுமா என்று கேட்டார். சரி என்று வாங்கிவிட்டேன்"(புத்திசாலி கண்டக்டர் )."என்கிட்டே ஏன் சொல்லல?"-என்னுடைய முகத்தை பார்த்து"என்னடா ஏதாவது பிரச்சினையா? " ஒண்ணுமில்ல!

இருவர் தொடர்புள்ள ஒரு விஷயத்தில் மற்றவருடன் கலந்து பேசாமல் முடிவெடுப்பது நாகரீகமா? சென்னை சென்ற பிறகு அவனிடம் இது பற்றி பேசவேண்டும்.தவிர நாம் விருப்பப்படுவது எல்லாம் நடந்து விடுவதில்லை.பையை நண்பனிடம் கொடுத்து விட்டு வேகமாக இறங்கி சிறுநீர் கழிக்க சென்றேன்.திரும்பியதும் நண்பன்சிரித்த முகத்துடன் கேட்டான்."இதுக்குத்தானா? பஸ் இங்க பத்து நிமிஷம் நிக்கும்டா" -

Saturday, December 11, 2010

ஓநாயும் வீட்டு நாயும் -பாரதி


ஓநாய்:- ஹே சகோதரா,நான் உன்னைச்சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.எனக்குத் தயவு செய்து விடைகள் அளிப்பாயா?

வீட்டு நாய்:-அடா ஓநாயே,நாம் நம்முடைய அந்தஸ்துக்கு குறைவான எந்த நாயோடும் சினேஹம் பாராட்டுவதில்லை.ஆயினும்,உன் மேல் நம்மையறியாமலே நமக்குப்பிரீதி ஏற்படுகிற படியால் நீ கேட்கும் கேள்விகளுக்கு ஜவாப் சொல்ல சம்மதித்தோம்.

ஓநாய்:-ஐயா,உம்முடைய அந்தஸ்தென்ன?நீ வசிக்கும் இடமெங்கே?இக்காட்டிற்கு வந்த காரணமென்ன?உமக்கு இவ்வளவு சுகமான வாழ்க்கை எங்கனம் ஏற்பட்டது?

வீட்டுநாய்:-நாம் உக்கிரேச பாண்டியநிடத்தில் இருக்கிறோம் அவர் நமக்கு ராஜோபசாரஞ் செய்து வருகிறார்.நமக்கும் அவரிடத்தில் பக்தியுண்டு.நம்மை அவர் மற்றெந்த நாய்களைக்காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.

ஓநாய்:-அண்ணா,என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?காற்றிலும் மழையிலும் வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியிருக்கிறது.பசியின் கொடுமையை சகிக்க முடியாததாய் இருக்கிறது.

வீட்டுநாய்:-தம்பி,உன்னுடைய ஊழ் வினைப்பயனை நீயே அனுபவித்து தீர வேண்டும்.பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாய் நமக்கு இப்போது இப்பதவி கிடைத்தது.

ஓநாய்:-நாயாரே,நானும் உக்கிர சேனனின் நட்பை நாடி வரலாமா?சுக துக்கங்களே சமரசமாய் இருந்தால் மாத்திரமே இவ்வுலக வாழ்வு சகிக்கத்தக்கது.என்னுடைய கஷ்டகாலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.

வீட்டுநாய்:-நல்லதப்பா,என் கூட வா.

இருவரும் சம்பாஷித்துக்கொண்டே வழி நடந்தார்கள்.திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுதாயம் தோன்றிற்று.பகதூரின் கழுத்தைச்சுற்றி அகலமான தழும்பு இருந்தது.ஓநாய் அதைப்பார்த்தவுடன் ஒரு கேள்வி கேட்டது.

ஓநாய்:-பகதூர்,உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

பகதூர்(வீட்டு நாய் ):-ஓ,அது ஒன்றுமில்லை.எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது.அதன் தடம் தெரியலாம்.

ஓநாய்:-அந்தப் பொன் பதக்கம் எங்கே? நீர் ஏன் அதைப் போட்டுக்கொண்டு வரவில்லை.

பகதூர்:-என்னை வெள்ளி சங்கலியால் கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.

ஓநாய்:-உம்மை ஏன் கட்ட வேண்டும்?யார் கட்டுகிறார்கள்?

பகதூர்:-என்னுடைய எஜமானன் என்னைக் கட்டுவார்.அவரைப் பார்க்க வரும் மனிதர்கள் என்னைக் கண்டு அஞ்சாதிருக்கும்படி என்னைக் கட்டி வைப்பார்.

ஓநாய்:-தூ! பிரஷ்டப்பயலே!என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய்.உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய் பேசினாய்;நான் சுதந்திரப்பிரியன்.எனக்கு எஜமானனும் இல்லை.சங்கிலியும் இல்லை.கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன்.யதேச்சையாய் எங்கும் செல்வேன்.எதையும் தின்பேன்.எதையும் சொல்வேன்.எவரோடும் சேர்வேன்.பராதீனம் பிராண சங்கடம்.ஒருவருடைய ஆக்கினைப்படி வரவோ,போகவோ,உண்ணவோ,உறங்கவோ,மலம் ஜலம் கழிக்கவோ சம்மதித்து இருப்பவன் மகா நீசனாய் இருக்க வேண்டும்.

இவ் வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப்போய்விட்டது.

-பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட பாரதியார் கட்டுரைகளிலிருந்து.
-

Monday, December 6, 2010

சாகித்ய அகாதமி மீது ஏனிந்த காட்டம்?

சென்னை தரமணியில் இயங்கி வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தை வெளியேற்ற தமிழக அரசின் சில துறைகள் தொடர்ந்து கடிதம் அனுப்பி நெருக்கடி தருவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.இது முதல்வருக்கு தெரிந்து நடக்கிறதா என்பது தெரியவில்லை.இலக்கியம் தொடர்பான ஒரு மத்திய அரசு நிறுவனம் தமிழகத்துக்கு வேண்டாம் என்று ஏன் நினைக்கவேண்டும்?அதனால் அவர்களுக்கு என்ன லாபம்?

சுதந்திரம் பெற்ற பின் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது சாகித்ய அகாதமி.ஞான பீட விருதுக்கு அடுத்து தேசம் தரும் உயரிய அங்கீகாரமாக சாகித்ய அகாதமி விருது கருதப்படுகிறது.சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளானபோதும் தகுதியானவர்களுக்கே கிடைத்து வந்திருக்கிறது.தமிழ் இலக்கியங்கள் மற்ற மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.சகோதர மொழிகளின் இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன.

எதிரிகள் யாரோ உள்ளே நுழைந்து விட்டதைப்போல காலிசெய்!காலிசெய்!என்று தொடர்ந்து கடிதம் மேல் கடிதம் எழுதுவது நமது மதிப்பீட்டை குறிக்கிறது.தெரியாமல் புத்தகத்தை மிதித்து விட்டதற்காக என் அத்தையிடம் அடி வாங்கியதும்,அவரது அறிவுரை ஏற்று வணங்கியதும் இப்போது நினைவுக்கு வருகிறது.நூலகம் வணக்கத்துக்கு உரியதல்லவா?என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றவேண்டாமா?

மண்டல அலுவலகம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்ததே நமது தவறு.சென்னையில் இல்லாத இடமா?பல்வேறு முயற்சிகளுக்கு பிறகே இந்த பிரிவு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போதுஇலக்கிய முயற்சிகளில் நாம் பின்தங்கி இருப்பதற்கு நமது மதிப்பீடுகளே காரணம்.புத்தகங்களை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?கலையும் இலக்கியமும்தான் நமது அடையாளம்.

உனக்கு வேறு போக்கிடம் இல்லையா என்பதற்கும்,நீ என்னுடன் இருந்துவிடு என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.நாம் கொடுக்கும் மரியாதை அது.நமது விழுமியங்களை காட்டுகிறது.பெருமைக்குரிய இடத்தை வழங்கி நாம் மரியாதை செய்யவேண்டும்.புத்தகங்களும் அவை சார்ந்த நிறுவனங்களும் வணங்கப்படவேண்டும்.
-

Friday, December 3, 2010

உலகில் துயரங்கள் அதிகமாக இருப்பது ஏன்?

மைனா திரைப்படத்தில் ஏன் பிரபு சாலமன் நாயகனையும்,நாயகியையும் சாகடித்து துயரமான முடிவைத்தந்தார்?ஏன் சந்தோஷமாக வாழ விடவில்லை? உலகின் மிகச்சிறந்த இலக்கியங்கள் துயரச்சுவை கொண்டவையாக உள்ளன.(ஷெல்லி என்று நினைக்கிறேன்).ஏன்?துயரம் மனிதர்களுக்கு பிடித்துப்போகிறதா?அதில் என்ன ஆனந்தம் இருக்கிறது?துக்கத்தில் மனிதன் தன்னை உணர்கிறானா?அல்லது பிரபஞ்சம் பற்றிய சிந்தனையில் விழுந்து உழல்கிறானா? துயரம்தான் மனிதனை மனிதனாக பார்க்கச்செய்கிறதா?

துக்கத்தில் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்.கடவுளை நிந்திக்கிறான்.அல்லது அடி மனதிலிருந்து கெஞ்சுகிறான்.கோரிக்கை வைக்கிறான்.சமாதானத்தை தேடுகிறான்.சிலர் குழந்தையை போல ஆகி விடுகிறார்கள்.ஏதேனும் போதையை தேடி ஓடுகிறார்கள்."நடப்பதெல்லாம் நன்மைக்கே" "எல்லாம் கடவுள் செயல்""முன் ஜென்மத்தில் செய்த பாவம்"-ஏதேதோ சமாதானங்கள்.கடவுள் ஏன் கருணையின்றி இருக்கிறார்?

கோமல் சுவாமிநாதன் சுபமங்களா பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார்.நான் அதன் வாசகனாக இருந்தேன்.எனக்கு தமிழின் சமகால இலக்கியம் பற்றி ஓரளவு அறிமுகம் கிடைத்தது.சுந்தர ராமசாமியின் நாடகம் ஒன்றை படித்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதினேன்.அஞ்சல் அட்டையில் எழுதிய கடிதம்.நாடகத்தை பற்றி சிலவரிகள் எழுதிவிட்டு கொஞ்சமும் தொடர்பில்லாமல் இதை எழுதினேன்."துயரமான முடிவைக்கொண்ட கலை இலக்கியங்களே உலகின் சிறந்த இலக்கியமாக திகழ்கிறது "என்று சொல்லப்படுகிறது.உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் கடவுள் படைக்கும் இலக்கியம்தானே உலகம்? அவரது படைப்பு மட்டும் எப்படி துயரம் இல்லாமல் இருக்கும்?

நான் எதிர்பார்க்கவில்லை! சில தினங்களில் சுந்தர ராமசாமி அவர்களிடமிருந்து அஞ்சல் அட்டை வந்திருந்தது.அதில் இருந்த வரிகள் "அந்த வரிகள் என்னைக்கவர்ந்தன.உங்களுக்கு சில பத்திரிக்கைகளையும்,சஞ்சிகைகளையும் அனுப்புகிறேன் ".எனக்கு இரண்டு காலச்சுவடு பிரதிகளை அனுப்பியிருந்தார்.முக்கியமான அறிமுகம்.ஒருநாள் நேரில் சந்திக்க நினைத்திருந்தேன்.முடியாமலேயே போய்விட்டது.

நாம் ஏதேதோ காரணங்களை தேடுகிறோம் அவ்வளவுதான்.ஏனென்று தெரியாமலேயே எல்லாவற்றையும் அனுபவித்து ஆகவேண்டும்.ஜோதிட நண்பன் இன்னொரு காரணம் சொன்னான்.குரு நல்ல கிரகம்.ஐந்து இடங்களில் தான் நல்லது செய்வார்.ஏழு இடங்களில் நல்ல பலன்கள் இல்லை.சனி மூன்று இடங்களில் தான் நல்லது செய்வார்.குரு சுக்கிரன்,புதன் நல்ல கோள்கள்.சந்திரன் வளர்பிறையில் நல்லவர்.சனி,செவ்வாய் சூரியன்,ராகு கேது என்று மற்ற கிரகங்கள் பொதுவாக நல்லதாக இல்லை.எனவே உலகில் நன்மை குறைவுதான்.அவர் வழியில் இது ஒரு காரணம்.

கலை,இலக்கியங்கள் துயரங்களை சொல்வது மூலம் நம்மை மென்மையாக்குகின்றன.மற்றவர்களை புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது.உதவும் மனப்பான்மை உருவாகிறது.மனிதர்களாக அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.நண்பர்களின்,உறவினர்களின் துயரங்களில் நாம் முழுமையாக உதவுவோம்.
-