Wednesday, September 10, 2014

யார்கிட்டேயாவது பேசுனாவே சந்தேகப்படறார்



ஆத்திரமும் வேதனையும் தொனிக்கும் குரலில் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.அவர் அனுபவித்துக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் உணர்ச்சிகள் நிஜம். ``அவருக்கு சந்தேகப்புத்தி சார்!யார்கிட்டயாவது பேசுனாவே சந்தேகப்படறார்``.நான் புன்னகைத்திருக்கவேண்டும்!.இருவரும் திருமணமாகாதவர்கள்.ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.

என்னுடைய கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. ``அவர் அப்படி நினைப்பதாக உங்களுக்கு யார் சொன்னது?``.அவர் எதுவும் பேசாமல் கிளம்பிப் போய்விட்டார்.ஆண் பெண் நட்பு பற்றிய எண்ணங்கள் உருவானாலும் அந்தப்பெண்ணின் கதை கொஞ்சம் சிக்கலான விஷயம்.அந்தப்பையனை அவர் விரும்புகிறார்.பையனிடமிருந்து எதிர்பார்த்த எதிர்வினை இல்லை.

இன்னொரு பையனுடன் நெருங்கிப் பழகுவதன் மூலம் அவனது எண்ணத்தை அறிய முயற்சி செய்தார்.அவன் சாதாரணமாக பேசுவதை,நடப்பதை, நிற்பதையெல்லாம் தனக்கு சாதகமான விஷயங்களாக மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வார்.பல மாதங்கள் இப்படிச்செய்து பார்த்துவிட்டு ``அவன் சந்தேகப்படுவதாக அவருக்குத் தோன்றியது.இந்த எண்ணத்தை மனம் தன்னிச்சையாக உருவாக்குகிறது.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அணுகுவதில் இது எதிர்மறை அணுகுமுறை.நிறைய திரைப்படங்களில் இந்தக்காட்சியைப் பார்த்திருக்கலாம்.காதலி வேறொருவனுடன் பழகும்போது காதலன் பொங்குவான்.ஆனால் இந்த அணுகுமுறை தவறானது.ஒருவரை புரிந்து கொள்வதைத் தவிர்த்து பொறாமை உணர்ச்சியைத்தூண்டி கீழே விழச்செய்கிறது.இது வலைவீசிப் பிடிப்பதற்குச் சமமானது.மனித உயிரை உடலாக மட்டுமே காண்பதுதான் காரணம்.

ஆணும் பெண்ணும் பேசினாலே சந்தேகம் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பெண்ணை உடலாகக் கருதும் வரை இந்த எண்ணங்களைத் தவிர்த்துவிட முடியாது.ஆணும் பெண்ணும் பேசித்தான் ஆகவேண்டும்.இன்றையப் பணிச்சூழலில் இதெல்லாம் தவிர்க்கமுடியாத ஒன்று.ஆனாலும் உற்றுப்பார்ப்பவர்கள்தான் அதிகம்.பெண் வதந்திகளையும்,விமர்சனங்களையும் கடந்தாகவேண்டும்.

ஆண்,பெண் நட்பை ஆரோக்கியமாகக் கருதுபவர்கள் குறைவு.ஆரோக்கியமான உறவை அவர்களது ஆளுமையே தீர்மானிக்கிறது.ஒரு பெண் சிரித்துப்பேசினாலே கற்பனையில் மிதப்பவர்கள் இருக்கிறார்கள்.அந்தப்பெண்ணுடன் இணைத்து வதந்தி பரப்புபவர்கள் இருக்கிறார்கள்.பெண்கள் தங்களது பணிச்சூழலில் நோக்கம் தெரிந்தும் கவனிக்காதது போலக் கடந்து செல்பவர்கள் அதிகம்.பலவீனத்தைப்பயன்படுத்தி ஆதாயம் அடைபவர்களும் உண்டு.

ஒருவரது பலவீனங்கள் உறவைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.எதைக்கொடுத்து சரிக்கட்டலாம்? எப்படி விழ வைக்கலாம் என்று அணுகுபவர்களே அதிகம்.அறியாமை,ஏழ்மை போன்றவை ஒருவரை வீழ்த்தப் பயன்படுத்தப்படுகின்றன.நாம் சொல்லும் பொய்யை நம்புபவர் நமக்குப் பிடித்தமானவராக இருக்கக்கூடும்.நாம் சொல்வதையெல்லாம் நம்புபவர் நமது தன்முனைப்பைத் திருப்தி செய்கிறார்.அவரது அறியாமை நமக்குப் பலம்.

மேலே சொல்லப்பட்டபெண் விஷயத்தில் அவரது நோக்கம் நிறைவேறியிருந்தால் என்ன நடக்கும்? ஆணின் பலவீனத்தைப் பிடித்தாகி விட்டது.தான் காரியம் சாதிக்க நினைக்கும் போதெல்லாம் இந்த உத்தியை பயன்படுத்தக்கூடும்.திருமணத்திற்குப்பின் தம்பதிகள் வாழ்வில் பெரும்பாதிப்பைக் கொண்டுவரலாம்.பலவீனத்தைப்பயன்படுத்தி வெற்றி கொள்வது தற்காலிகமானது.இந்த அணுகுமுறை இன்றைய உறவுச்சிக்கல்களில் பெரும்பங்கு வகிக்கிறது.
-