Sunday, October 30, 2011

இணைய மையங்கள் அடல்ட்ஸ் ஒன்லியா?

 இணைய மையங்களை காவல்துறையினர் அழைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.சமூக விரோதிகள் பிரௌசிங் சென்டர்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன.நிறைய கட்டுப்பாடுகள்.வாடிக்கையாளர்களின் அடையாள அட்டை சரிபார்ப்பதிலிருந்து கேமரா வைப்பது வரை .பலர் முணுமுணுத்துக்  கொண்டிருக்கிறார்கள்.


இணைய மையங்கள் கால் வைக்கவே கூசுகிறது என்று நண்பர் புலம்பினார்.ஒரு வேளை சுத்தமில்லாமல் பேச்சுலர் ரூம் போல இருந்திருக்கும் என்று நினைத்தேன்.(ஒரு நாளைக்கு மூன்று முறை அறையை சுத்தம் செய்து அற்புதமாக சமைக்கும்பிரம்மச்சாரிகளையும்  நான் பார்த்திருக்கிறேன்.) காலையிலேயே புலம்புகிறானே என்று நினைத்துக் கொண்டு என்னே ஏதென்று விசாரித்தேன்.
மாமியார் வீட்டுக்கு போன இடத்தில் ஒரு பிரௌசிங் சென்டருக்கு போயிருக்கிறான்.அவனுடைய எட்டு வயது மகளும் கூடவே !என்னுடைய பதிவை திறந்து படிக்க ஆரம்பிக்க,அவருடைய மகள் ஆபாச இணைய தளங்களின் பெயர்களை வரிசையாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.நண்பர் ஆடிப் போய்விட்டார்.


அதிர்ச்சியுடன் மகளைப் பார்த்தால் சுவர்களில்,கேபினில் எழுதி வைத்திருப்பதை காட்டியிருக்கிறார்.ஆபாச இணையதள ரசிகர்கள் தளம் மறக்காமலிருக்க எழுதி வைத்துக் கொள்வார்கள் என்று தோன்றியது.நானும் சில இடங்களில் பார்த்திருக்கிறேன்.ஆனால் இணைய மையம் வைத்திருக்கும் ஒருவர் இன்னொரு விஷயத்தை சொன்னார்.சில மையங்களின் முதலாளிகளே அப்படி எழுதி வைத்து விடுவதும் உண்டு என்கிறார்.
ஆர்வத்தில் பார்க்க ஆரம்பித்தால் வியாபாரம் நன்றாக இருக்கும் என்பது எண்ணம்.பேசாமல் அடல்ட்ஸ் ஒன்லி என்று போட்டு விடலாம்.இன்னும் சில மையங்கள் காதலர்களுக்கு உகந்த இடமாகவும் இருந்து கொண்டிருக்கிறது.எல்லா இடங்களிலும் இந்த பிரச்சினை இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு  குறிப்பிட்ட மையத்திலிருந்து அதிகாரி ஒருவருக்கு மிரட்டல் மெயில் போய்விட்டது.காவல்துறையினர் விசாரிக்க வந்தார்கள்.அன்று சர்வர் மோசமாக இருந்ததால் மொத்தமாக மூன்றுபேர் தான் வந்திருந்தார்கள்.எளிதாக ஆளை பிடித்து விட்டார்கள்.அப்போதிருந்து ரகசியமாக கேமரா பொருத்திவிட்டார்.வாடிக்கையாளர்களுக்கு கூட தெரியாது.தனித்தனி கேபின்கள் இல்லாமல் மையங்கள் இருந்தால் இம்மாதிரி பிரச்சினைகள் குறையும்.
இன்று இன்டர்நெட் தேவை அதிகரித்துவிட்ட நிலையில் பெண்கள் ,குழந்தைகள் என்று பலரும் மையங்களை அணுகும் நிலை இருக்கிறது.மையம் நடத்துபவர்கள் இதை உணர்ந்து கால் வைக்க கூசாத இடமாக வைப்பது அவசியம்.
-

Friday, October 28, 2011

ஆங்கிலம் பேச ஆசைப்பட்டும் முடியாமல் போவது ஏன்?

நமக்கு பழக்கமில்லாத எதையாவது செய்யவேண்டிய நிலை வந்தால் பலருக்கு படபடக்கும்.சில நேரங்களில் நான்கு பேர் முன்னால் பேசுவது கூட நெஞ்சு அடித்துக்கொள்ளும்.நேர்முகத்தேர்வுக்கு செல்வது போன்றவற்றைக்கூட உதாரணமாக சொல்ல்லாம்.மனதில் இறுக்கம் ஏற்பட்டு உடலிலும் விளைவுகள் தெரியும்.சிலருக்கு கை நடுங்கும்.மனசு போராடும்.குறிப்பிட்ட நேரத்தில் சில சரியாகப்போய்விடும்.ஒரு கூட்ட்த்தில் பேச வேண்டும் என்றால் அறைகுறையாக பேசிவிட்ட கொஞ்ச நேரத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும்.
                                 தொடர்ந்து சில காலங்கள் மனமும் உடலும் பாதிக்கப்படும் சூழ்நிலைகளும் உண்டு.சில விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்ய பழகிவிடும்.நம்மை மிரட்டும் விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டால் மனம் அமைதியாகிவிடும்.கிராமத்தில் படித்த பலருக்கு ஆங்கிலம் பேசுவது ஒரு பெரிய பிரச்சினை.அது ஒரு பெரிய அறிவாளியை காட்டுவது போல நினைத்துக் கொள்பவர்கள் உண்டு.
                                இன்றும் அரசாங்க கடிதங்கள் பலவும் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.சிலர் நிறுவனத்தில் சேர்ந்து படிப்பார்கள்.வீட்டில் புத்தகம் வாங்கி படிப்பார்கள்.ஆனால் எப்போதும் பேசவே மாட்டார்கள்.ஆனால் வேறுவழியே இல்லை.ஒருவருடன் உரையாட வேண்டும்,அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும்.இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தானாக வார்த்தைகள் வந்து விழும்.பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.அந்த மொழியிலேயே சிந்திப்பது எளிதாக இருக்கும்.
                                இம்மாதிரி சூழ்நிலைகளில் மனதில் ஏற்படும் இறுக்கமான நிலைதான் பிரச்சினை.சரியாக செய்யத் தெரிந்தாலும் முடியாமல் போய்விடுகிறது.தவறாக போய்விட்டால் நாலுபேர் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணத்திலேயே ஒட்டு மொத்தமாக வாய்ப்புகளை தவற விடுபவர்கள் அதிகம்.சமாளிக்கும் திறன் மனதுக்கே இருந்தாலும் சிலரால் முடியாமல் போய்விடுகிறது.தன்னம்பிக்கை குறைவும் ஒரு காரணம்.
                                 எப்போதும் எல்லோராலும் உயர்வாகவே கருதப்படவேண்டும்.அத்தனை பேரும் தன்னை பெருமையாக நினைக்கவேண்டும் என்பதுதான் நிஜ பிரச்சினை.அதிகம் அடிபடாதவர்களுக்கு மனதில் இறுக்கம் அதிகமாகும்.வெளியே தலைகாட்டாமல் உள்ளே இழுத்துக்கொள்ளவே விரும்புவார்கள்.ஆனால் ஆசையும் இருக்கும்.ஆங்கிலம் பேசும் ஆசை இருக்கிறது.ஆனால் முடியவில்லை.
                                 தேவை தன்னம்பிக்கைதான்.அது மட்டுமில்லாமல் நல்ல எண்ணங்களும்கூட! பொறாமை,வெறுப்பு,பழி வாங்கும் எண்ணம் போன்றவை மனதில் இருந்தால் மனம் இயல்பாகவே பாழ்பட்டுவிடுகிறது.இவர்களுக்கு எப்போதும் இறுக்கம் அதிகமாகவே இருக்கும்.உளவியலாளர்கள் பலரும் இதை உறுதி செய்கிறார்கள்.நல்ல எண்ணங்களுடன் இருக்கும்போது நமக்கே நம் மீது மதிப்பும் இருக்கும்.
                                 சுய மதிப்பு இருக்கும்போது நாம் செயல்களை செய்ய தயங்குவதில்லை.தயக்கத்தை விட்டுவிட்டாலே நமக்கு வெற்றி எளிது.ஆங்கிலம் என்ன எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்ளலாம்.பேசலாம்.அறிவு பெறலாம்.வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இவை முக்கியமானவை.தயக்கமும்,கலக்கமும்தான் நம்மை தோற்கடிக்கின்றன.
-

Tuesday, October 25, 2011

பீர் தீபாவளியா? குவார்ட்டர் தீபாவளியா?

                          குடிக்கத் துவங்கும் பலர் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில்தான் ஆரம்பிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.(நிறைஞ்ச அமாவாசை என்பதனாலா?).அதுவும் பீரில் ஆரம்பித்து அடுத்த தீபாவளிக்குள் குவார்ட்டருக்கு வந்து விடுவார்கள். வருடாவருடம் தீபாவளிக்கு மது விற்பனை விண்ணைத்தொடுகிறது.எப்போதாவது குடிப்பவர்களும் இந்த மாதிரி நாட்களை தவரவிடுவதில்லை.ஏன் என்பதற்கான அலசல் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவிலிருந்து...
                           தீபாவளி மட்டுமல்ல,பொங்கல் ,திருவிழாக்கள்,திருமணம்,சடங்குகள் என்று விழா நாட்களில் மது விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கிறது.பண்டிகைகளுக்கும் மதுவிற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை.பின் ஏனிந்த மோகம்?
பெண் வீட்டார் ஒருவர் உறவினர் ஒருவரை கேட்டார்கள் "அந்த பையன் எப்படி?கெட்ட பழக்கம் ஏதாவதுஉண்டா?".பதில்:"இந்தக்காலத்தில் குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?இந்த பதிலில் மாப்பிள்ளை பற்றிய பொய்யும்,சமூகத்தை பற்றியஓரளவு உண்மையும் இருக்கிறது.

நண்பேண்டா -சொல்ல ஆளில்லை!
எல்லா பண்டிகை காலங்களிலும் வழக்கமாகவே நான் தனிமையை அனுபவித்திருக்கிறேன்.எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால்தான் என்பதை வெகு காலம் கழித்து உணர்ந்தேன்.அதேபோல நண்பர்களின் திருமணத்திற்கு காலையில் முகூர்த்தத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.முந்தைய இரவில் சென்றால் தனியாக அலைய வேண்டும்.குடிக்காத சில நண்பர்கள் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் உடன் இருப்பதில்லை. எனக்கு நண்பர்கள் குறைவாக இருப்பதற்கு மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது ஒரு காரணமா என்று தெரியவில்லை.விழாக்காலங்களில் மது மீது அதிக ஆர்வம் உள்ள சிலர் தங்களது குற்ற உணர்வை -சமூகம் தவறென்று சொல்லித்தந்திருக்கிறது-குறைத்துக்கொள்ள குழுவை சேர்த்துவிடுகிறார்கள்.
விழாக்கால மனப்பாங்கு!

விழா நாட்களில் கூட்டம் கூடுவது இயல்பு.அறிமுகமாகாதவர்கள்,உறவினர்கள்,ஊர்க்காரர்கள் என்று பொது இடங்களில் சந்திக்க வேண்டியிருக்கிறது.எல்லோரும் நம்மை முக்கியமாக கவனிக்கவேண்டும் என்ற எண்ணமும்,கவனிப்பார்களா?என்ற கலக்கமும்,அதன் தொடர்ச்சியாக பதட்டமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நாலு பேருக்கு முன்னால் பேசவோ இயங்கவோ நமக்கு எப்போதும் கொஞ்சம் தயக்கம்தான்.பெரும்பாலான குற்றச்செயல்களும் மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளன.மது பதட்டத்தை குறைத்து செயல்பட தூண்டுகிறது.எனக்கு ஒரு நண்பனை தெரியும்.தண்ணி அடித்த பிறகுதான் போனை எடுத்து பெண்களிடம் பல மடங்கு பேசுவான்.அவனே நேரில் அதிகம் பேசாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.மிதமான போதை இருந்தால் விழா நேரங்களில் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் எளிதாக பதட்டமின்றி,என்ன நினைப்பார்களோ?என்ற எண்ணமின்றி இயங்கலாம்.

வேறு என்னதான் செய்வது?
பண்டிகை என்று சொல்கிறார்கள்,விழா என்று சொல்கிறார்கள்.இனிப்பும்,விருந்தும் சாப்பிட்டு விட்டால் போதுமா?மன எழுச்சி குறையவேயில்லை.நண்பர்கள் இலவசமாக வாங்கித்தருவதாக அழைக்கிறார்கள்.வேறு என்னதான் செய்வது?
மாறிவரும் மதிப்பீடுகள்:
அலுவல் தொடர்பான கூட்டங்களில் ,விருந்துகளில் மது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.மிதமான போதையில் பேசிக்கொண்டிருப்பதுதான்பலருக்கு மகிழ்ச்சியாக ,உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்த உதவுவதாக இருக்கிறது.மதுவால் ஏற்படும் சமூகக்கேடுகள்,சீரழிவுகள்,தனிமனிதனுக்கு உடலநல பாதிப்புகள் எல்லாமும் பின்தள்ளப்பட்டு இன்றைய நாகரீகமாக மாறுவதற்கு நுகர்பொருள் கலாச்சாரமும்,அதன் விளைவாக ஏற்பட்ட அடையாள சிக்கல்களும் ஒரு காரணம்.தவிர,இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியும் இல்லை.

-

Monday, October 24, 2011

தும்மல் வந்தால் ஆயுசு நூறா?

மூக்கில் ஏதேனும் வெளிப்பொருட்கள் உள்ளே நுழைந்தால் தும்மல் வரும்.அலர்ஜி காரணமாகவும்,வைரஸ் போன்ற நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டாலும்,சைனஸ் பிரச்சினையாலும் தும்மல் வரும்.இந்த சமயங்களில் ஹிஸ்டமின் தூண்டப்ப்ட்டு மூளைக்கு தகவல் போய் அச் என்று சத்தம்.அதுவும் ஒவ்வொருவருக்கும் தனி சத்தம் இருப்பது போல் தோன்றுகிறது.அப்புறம் ஏதோ இழந்த்தை திரும்ப பெற்றது போல ஒரு உணர்வு.
                                நான் சிறுவனாக இருந்தபோது வெடித்த பட்டாசுகளைவிட இப்போதைய சிறுவர்கள் வெடிப்பது குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.ஒரு சரத்தை பிரித்து சட்டை பாக்கெட்டில்,டிராயர் பாக்கெட்டில் நிரப்பிக்கொள்வோம்.ஊதுபத்தியை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு வெடியாக வெடித்து,ஆஹா ஆனந்தம்! என் நண்பனுக்கு சட்டை பாக்கெட் இருந்த வெடிகள் வெடிக்க ஆரம்பித்து காயம் ஆன சம்பவமும் உண்டு.கரும்புகை கிளம்பும்.

                                விஜய்காந்த் பிரச்சாரக் கூட்ட்த்தில் வெடித்த பட்டாசு என்று ஒரு பதிவு தந்திருக்கிறேன்.(இப்போது அந்த இட்த்தில் “ பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதுஎன்று காவல்துறை பேனர் கட்டியிருக்கிறது)அப்போது ஒருவர்(பெண்)நடந்து போய்க்கொண்டிருந்தார்.கையில் குழந்தை.பட்டாசு வெடித்த கரும்புகையில் குழந்தை தும்மியது.அவர் சொன்னது “நூறு ஆயுசு!
                                குழந்தைக்கு ஏற்பட்ட்து புகையால் வந்த தும்மல் என்று பாவம் அவருக்கு புரிந்திருக்காது.குறைந்த பட்சம் குழந்தைகளையாவது புகை பக்கம் எடுத்துப்போகாமல் இருக்கலாம்.சில மத்தாப்புகள் புகை அதிகமாகத் தரும்.குழந்தைகளுக்கு அருகில் சிகரெட் பிடிப்பவர்களை பார்த்தாலும் மனசு வலிக்கிறது.

                                 தும்முவதன் மூலம் நோய்களும் பரவலாம்.சில வைரஸ் தொற்றுகளும்,காசநோயும் இப்படி பரவும்.பொது இடங்களில் தும்முபவர்கள் ஏதாவது கைக்குட்டை பிடித்து தும்மினால் சமுதாயத்துக்கு நல்லது.ஆனால் இதெல்லாம் குழந்தையிலிருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டும்.திடீரென்று ஒரு பழக்கத்தை ஏற்படுத்துவது கஷ்டம்.
                               சிறு வயதில் பள்ளிக்கு போகும்போது ஒரு செடி இருக்கும்.அதன் இலையை கிள்ளி முகர்ந்தால் ஓயாத தும்மல் வரும்.விளையாட்டாக தும்மிக் கொண்டிருப்போம்.யுனானியில் ஒரு பொடி இருக்கிறது.புகையிலை சேர்க்கப்பட்ட்தல்ல! நோயாளிகளுக்கு தருவதை பார்த்திருக்கிறேன்.சோர்வு,தலைவலி எல்லாம் போய்விடும் என்று போட்டிருப்பார்கள்.கொஞ்சம் போட்டுப்பாருங்கள் என்று தம்பி ஒருவன் கொடுத்தான்.நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன்.
                                தும்மலை சகுனமாக பார்ப்பது இன்னமும்  இருந்து வருகிறது.பஞ்சாங்கங்கத்திலும் இடம் பெற்றிருக்கிறது.பெண்ணுக்கு ஆண் தும்மினால்,ஆணுக்கு பெண் தும்மினால் நல்லது என்று எங்கள் பகுதியில் சொல்வார்கள்.இன்றைய தலைமுறை இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.தும்மலுக்கான காரணத்தை அறிவியல் ரீதியாக பார்ப்பதுதான் அதிகம்.
                                 தலைப்புக்கு வருவோம்.யாராவது வீட்டில் தும்மினால் ஆயுள் நூறு என்று வீட்டில் சொல்வார்கள்.சிலர் தும்மினால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு ஆயுள் குறையவும் வாய்ப்பு உண்டு.
         இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
-

Sunday, October 23, 2011

தீபாவளிக்கு இனிப்பு சாப்பிடுவீங்களா?



                                                                     அலர்ஜி முதல் ஆண்மைக்குறைவு வரை இனிப்புகள் நோயைக் கொண்டுவரலாம் என்பதே நிஜம்.  தீபாவளிக்கு பட்டாசுக்கு அடுத்து இனிப்புகள்தான் நினைவுக்கு வரும்.பட்டாசுகளின் விலையேற்றத்தால் இப்போது வெடிச்சத்தம் குறைவாகத்தான் இருக்கிறது.நகரத்தில் அல்ல! கிராமத்தில் சொல்கிறேன்.

நகரத்தில் மட்டுமே அதிகம் முக்கியத்துவம் பெற்ற இனிப்புகள் இப்போது கிராமத்திலும் அதிகம் இடம் பெற்றிருக்கிறது.விதம்விதமான இனிப்புகள்.கிராமத்து ஆட்களுக்கு அதன் பெயரைக் கூட அவ்வளவாக தெரியாது.தீபாவளி சீட்டுகள்தான் இதை கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நகையுடன்,பட்டாசு பெட்டியும்,இனிப்பும் காரமும் சேர்த்துக் கொடுப்பதுதான் தீபாவளி சீட்டு.கிராமங்களில் இந்த கலாச்சாரம் பரவி விட்டது.

இனிப்பு விசயத்துக்கு வருவோம்.முதலாவதாக அதில் சேர்க்கப்படும் நிறமிகள் .முதல் வரியில் உள்ள தொந்தரவுகளை உருவாக்குவதில் இதற்கு முக்கிய பங்குண்டு.நாம் உண்ணும் உணவுப்பொருட்களில் காணப்படும் அத்தனை கலர்களை உருவாக்குவதும் வேதிப்பொருட்கள்.மாத்திரை ,மருந்துகளிளும்தான்.இவை அனுமதிக்கப்பட்ட தரமானவையாய் இருந்தால் பிரச்சினை எதுவுமில்லை.பல இடங்களில் அப்படி இருப்பதில்லை என்பதே நிஜம்.

மக்களின் மனோபாவம் விலை குறைவென்றால் அங்கே கூட்டம் கூடிவிடுகிறது.தரமும் அதற்கு தக்கபடிதான் இருக்கும்.இன்னொன்று நெய் என்பதை பெயருக்கு சேர்த்திருப்பார்கள்.இல்லாவிட்டால் அப்படி வாசனைக்கு இருக்கும்.மற்ற சேர்க்கைகளில் வயிற்று உபாதைகள் நிச்சயம்.


ஒரு கடையில் பார்த்தேன்.இனிப்புகள் அதிக விற்பனை ஆகும் என்பதால் கண்ணாடிப் பெட்டிகளுக்கு மேலே அடுக்கி வைத்திருக்கிறார்கள்.சில இடங்களில் அரைகுறையாக பாலிதீன் கவர்கள் மூடப்பட்டுள்ளன.காற்றில் வீதியில் இருக்கும் அழுக்குகள் பெரும்பாலும் அதில் விழுகிறது.பேருந்து செல்லும்போது ஏற்படும் புழுதியும் அதில் சேர்ந்து கொள்கிறது.ஆனாலும் வாங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்புறம் மருத்துவமனைகளுக்கும் அலைகிறார்கள்.

அரசாங்கம் கவனமாக செயல்பட்டால் இவையெல்லாம் தவிர்க்கக் கூடியவை.தீபாவளிக்கு வீட்டில் செய்யும் சிறப்பு இனிப்பு ஒன்று உண்டு.கௌரி விரதத்தில் படைப்பார்கள்.கொஞ்சம் அதிகமாக வேலை வாங்கும்.அரிசிமாவு இடித்து,பாகு எடுத்து எண்ணெய்யில் பொரிக்கும் அதிரசம்.வெல்லம் சேர்ப்பதால் இரும்பு சத்து நிறைந்த பலகாரம்.கடையில் விற்கும் இனிப்புகளை விடவும் இதெல்லாம் பரவாயில்லை.
-

Saturday, October 22, 2011

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.

                              தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந்தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று நினைக்கத்தோன்றுகிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மருத்துவர்கள்.சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு.சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.இதெல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.தாய்ப்பாலுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனையில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம்.

                             பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும்,அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்கவேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும்.குழந்தையின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் முழு உடலையும் தாயின் கை தாங்குவது போல் வைக்கப்படவேண்டும்.
                             தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கும்போது தாய் குழந்தையின்  உதடுகளால் மார்பக காம்பைத் தொடவைக்க வேண்டும்.குழந்தை வாய் திறக்கும் வரை காத்திருந்து கீழ் உதடு மார்பக காம்பின் அடிப்பகுதியை நன்கு பிடித்துக்கொள்ளுமாறு செய்யவேண்டும்.

                             குழந்தை மார்பகத்தைநன்கு கவ்வியிருக்கிறதா சரியாக சப்பிக் குடிக்கிறதா என்பதை தாய் கவனிக்க வேண்டும்.குழந்தையின் முகவாய்க்கட்டை மார்பகத்தை தொடவேண்டும்.வாய் நன்றாக திறந்திருக்க வேண்டும்.கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும்.மார்பக காம்பின் கீழ்பகுதி முழுவதும் குழந்தையின் வாயினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
                             முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு வேறு எந்த திரவமும் தேவைப்படாது.கிரைப் வாட்டர்,தண்ணீர் எல்லாம் அவசியமேயில்லை.தேவையான் தண்ணீர் தாய்ப்பாலில் இருக்கிறது.ஒரு நாளில் எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.குழந்தை ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

                             குழந்தைக்கு மாட்டுப்பாலை கொடுப்பதும்,சில நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதும் பலர் செய்யும் தவறு.இது குழந்தையின் ஜீரண மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.இன்றைய முறையற்ற வணிகர்களால் சுத்தமான பால் கிடைப்பது எளிதல்ல! அதிக பாலுக்காக ஹார்மோன் ஊசி போடுவதாலும் நிறைய பிரச்சினைகள்.
                             தாய்ப்பாலை விட பாதுகாப்பானது வேறெதுவும் இல்லை.மருத்துவர் அறிவுரையின் பேரில் மாட்டுப்பால் கொடுத்தாலும் நிறைய தண்ணீர் கலக்கவேண்டும்.அதுவும் சுத்தமான நீராக இருக்கவேண்டும்.கடையில் பவுடர் வாங்கினாலும் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும்.பாலாடை அல்லது தேக்கரண்டி பயன்படுத்துவதே சிறந்த்து.புட்டி பயன்படுத்தும்போது அழுக்கு சேர்ந்து நோய்த்தொற்றை உருவாக்கலாம்.ஆறு மாதம் கழித்து பிறகு இணை உணவுகள் தர ஆரம்பிக்கலாம்.
(யுனிசெப் பிரசுரம் ஒன்றின் உதவியுடன்)
-

Thursday, October 20, 2011

வயிற்றில் பொங்கும் அமிலத்தின் அவஸ்தை

வழியில் கிடைத்த எதாவதொன்றை விழுங்கி விட்டு பறக்கும் இன்றைய அவசர யுகத்தில் இழந்தவற்றுள் முக்கியமானது நமது உடல்நலம்.ஆம்.சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்.உணவுக் குழாய் சுவர்களை அரிக்கும் ஒரு உடல் நலக்கோளாறு நெஞ்செரிச்சல்.உணவு செல்லும் பாதையில் அமிலம் பொங்கும் அவஸ்தை.

                                                                             வயிற்றில் உற்பத்தியாகும் அமிலம் உணவுப்பாதையில் நெஞ்சு வரை பயணித்து இதயத்தில் பிரச்சனையா என்று கவலைப்படும் அளவுக்கு வாட்டும்.உண்மையில் நெஞ்சுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.அப்பகுதியில் எரிச்சலும்,அரிக்கும் உணர்வு ஏற்படும் அவ்வளவே.


வழக்கமாக செரிமானம் ஆகாத உணவுகள்,-இவை பெரும்பாலும் மசாலா,துரித உணவுகள்-இக்கோளாறை உருவாக்கும்.புகை பிடித்தல்,மது,அளவுக்கதிகமான உணவு,கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகள்,அதிக எடை போன்றவையும் காரணம்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாத உண்வுகளை உண்பதாலும் ஏற்படும்.


பொதுவாக, தொண்டை,நெஞ்சு பகுதியில் எரிச்சல்,வயிற்றின் உணவு நுழையும் பகுதியில் வலி,வாந்தி,குமட்டல்,இருமல்,உடலின் பின் பகுதியில் கூட சிலருக்கு வலி இருக்கலாம்.இத்தகைய அறிகுறிகள் இருக்குமானால் உடனே கவனிக்க வேண்டும்.

நெஞ்செரிச்சலில் இருந்து காத்துக்கொள்ள


• புகை பிடித்தல்,மதுவை தவிர்ப்பது(ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும்)
• போதுமான அளவுக்கு நீர் அருந்துங்கள்.
• துரித உணவுகளை தவிர்க்கவும்
• அமிலம் சேர்க்கப்பட்ட குளிர்பான்ங்களை தவிர்த்து பழச்சாறுகளை தேர்ந்தெடுக்கவும்.
• வறுக்கப்பட்ட உணவு,எரித்த இறைச்சி போன்றவை செரிமானத்தின் எதிரி.
• காபி அதிக அமிலத்தை உற்பத்தி செய்யும்.


வயிற்றில் ஒரு பங்கு உணவு,ஒருபங்கு நீர்,ஒரு பங்கு காலியாக இருப்பது என்று தீர்மானித்துக்கொண்டால் அதிகம் தின்பதை தவிர்க்கலாம்.

சிலருக்கு குறிப்பிட்ட சில உணவுகள் ஒவ்வாமையை உருவாக்கலாம்.இது ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அத்தகைய உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபடலாம்.(தலைப்பு மாற்றப்பட்ட மீள்பதிவு)
-

Tuesday, October 18, 2011

நிரூபனின் இன்னொரு பக்கம்.

                              பதிவை வெளியிட்டாரோ இல்லையோ மளமளவென்று ஓட்டு விழுகிறது.கருத்துரைகளும் அப்படியே!தொடர்ந்து மகுடம் பெற்று வியக்க வைத்தவர்.பேஸ்புக்கில் அதிக அளவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.எப்படி இவருக்கு மட்டும் முடிகிறது? அவர் நிறைய பேருக்கு ஓட்டு போடுகிறார்.அதனாலா? ஆனால் அது மட்டும் உண்மையல்ல
                            குழு அமைத்து ஓட்டு போடுவது பற்றிய அவரது பதிவுதான் நான் முதன்முதலில் படித்த பதிவு.இப்போது அவர் மீதே அந்த குற்றச்சாட்டு விழுந்த்து வேடிக்கையான விஷயம்.பிரௌசிங் செண்டரில் இருந்து படித்த்தால் கருத்துரை இடவில்லை.பின் தொடரவும் இல்லை.                                 ஆரம்பத்தில் காத்திரமாக பல பதிவுகளையும் எழுதியவர்.அதிகம் வெளித்தெரியவில்லை.


                              நல்ல இடுகைகளுக்கும் பாலியல் சம்பந்தமாக தலைப்புகள் வந்து பிய்த்துக்கொண்டு போனது.தொடர்ந்து தினமும் பதிவிடும்போது அனைத்தும் சிறப்பாகவே இருக்கும் என்று சொல்ல முடியாது.சில நேரங்களில் விளையாட்டாகவும் இயங்கினார்.இக்பால்செல்வன்,நிரூபன்,நீங்களுமா? என்று கருத்துரையிட்ட்து நினைவுக்கு வருகிறது.
                                 என்னை தன்னுடைய தளத்தில் அறிமுகப்படுத்துகிறேன் என்றபோது அவசியம் என்பதாக எனக்கு தோன்றவில்லை.250 பதிவுக்கு மேல் ஆகிவிட்ட்து.இண்ட்லி,தமிழ்மணம்,தமிழ்வெளி,தமிழ்10 என்று திரட்டிகளில் பல பதிவுகள் அதிக ஹிட்ஸும் வாங்கி விட்ட்து.என் நம்பிக்கை தவறு என்பது பிறகு தெரிந்த்து.தூங்கி எழுந்து பார்த்தபோது நிரூபன் தளத்தில் பார்த்து வந்தேன் என்று கமெண்ட் விழுந்திருந்த்து.நாற்று மூலம் எனக்கு வாசகர்களும் கிடைத்தார்கள்.இணையவெளி மிகப்பெரியது,அளவிட முடியாதது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

                                 பதிவுலகில் பல பதிவர்களுடனும் நெருக்கமான உறவுகளை பேணி வருபவர் நிரூபன்.தொழில்நுட்பம் குறித்து பலருக்கும் உதவுபவர்.நேற்று பதிவுலகில் இருந்து விலகிக்கொள்வதாக எழுதியிருந்த்தை படிக்க சங்கடமாக இருந்த்து.ஆனால் அவரால் அப்படியெல்லாம் முடியாது என்பது எனக்குத் தெரியும்.இயல்பாகவே நிரூபனிடம் தகுதிகள் இருக்கின்றன.நிரூபன்,நீங்களுமா? என்ற கேள்வியில் அவரது தகுதியும் மறைந்திருக்கிறது.அவரால் எழுதாமலிருக்க முடியாது.
                                 அன்பு என்ற சொல் சில நேரங்களில் நடிப்பாக,பொய்யாக திரிந்து ஏமாற்றத்தை தரும் விஷயமாக இருக்கிறது.இக்பால் செல்வன் இப்போதைக்கு எழுத முடியாது என்று விளக்கம் கொடுத்து நிறுத்திக் கொண்டார்.பதிவுக்காக உழைத்து தேடிதேடி பதிவெழுதியவர்.பதிவுலகில் இப்படி எழுதுபவர்கள் மிகச்சிலர்.வெகு நாட்கள் இக்பால் செல்வன் ஒரு பதிவெழுதியபோது நிரூபன் கருத்துரை இட்டார்.சகோ! உங்களுக்கு மெயில் அனுப்பினேனே நீங்கள் பதில் தரவில்லை”.

                                  தனக்கு வந்து ஓட்டும் கமெண்டும் போட வேண்டும் என்பதற்காக அனுப்பிய மின்ன்ஞ்சல் அல்ல அது! பிரதி பலன் எதிர்பாராத அன்பு.இன்றைய பதிவர்கள் பலருக்கும் நிரூபனின் உணர்வுகள் தெரியும்.நிரூபனின் வெற்றி ரகசியம் இதுதான்.
-