Monday, May 26, 2014

மழையைப்பற்றிய குறிப்புகள்



பெருமழைக்குப்பிறகு மனித முகங்கள் உயிர் பெற்றுவிடுகின்றன.மனிதன் என்றில்லை,புவியின் அத்தனை உயிர்களும்தான்.மழை செழிப்பைக் கொண்டு வருகிறது.மனித மனத்தின் ஆழத்தில் மழைக்கான ஏக்கம் இருந்து கொண்டிருக்கிறது.பூமி மட்டுமல்லாமல் மனித மனமும் குளிர்ந்து உவகை அடைகிறது.மனிதர்கள் சந்தோஷமான வார்த்தைகள் பேசுவதை நீங்கள் கவனிக்கமுடியும்.

மழை மனங்களில் அமைதியைக்கொண்டு வருகிறது.அமைதியான மனம் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.நல்ல கோடை மழைக்கு அடுத்தநாள் காலை.`` இரவு நன்றாக தூங்கியிருப்பீர்களே``என்று நண்பர் கேட்டார்.அவரது முகமெல்லாம் சந்தோஷம்.அது உண்மைதான்.புழுக்கமும் வியர்வையும் காணாமல் போய் இதமான சூழல் நிலவியது.

நிறைய முறை மழையில் நனைந்திருக்கிறேன்.நிலத்திலிருந்து வீட்டுக்கு வந்து சேர இரண்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும்.விட்டுவிட்டு தொடர் மழை பெய்து கொண்டிருந்தது.குடைபிடித்து நடந்து கொண்டிருக்கிறேன்.தூறல் பெருமழையாக மாறிவிட்டது.வழியில் அரைகிலோமீட்டருக்கு ஒரு வீடுதான் இருக்கும்.ஒதுங்குவதற்கு இடமில்லை.குடையைத்தாண்டி நனைந்துவிட்டேன்.

வழியில் ஏரியைக் கடந்து செல்லவேண்டும்.ஏரி முழுக்க நீர் நிரம்பிவிட்டது.கிட்டத்தட்ட இடுப்பளவு நீரில் ஏரியைக்கடந்து சென்றேன்.ஏரியிலிருந்து நீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது.ஊரை நெருங்கும்போது ``ஏரி கோடி போய்விட்டதா?`` என்று கேட்டார்கள்.ஆமாம்,அந்த மகிழ்ச்சியான செய்தியை நான் தான் சொன்னேன்.

அந்த மழையில் பல ஏரிகள் நிரம்பிவிட்டதாகச் சொன்னார்கள்.ஒரு ஏரி நிரம்பினால் அடுத்த ஏரியை நிரப்ப தண்ணீர் பாய்ந்தோடும்.இன்று பல இடங்களில் அந்த வாய்க்கால்கள் ஏன் ஏரியே காணாமல் போய்விட்டது.அதற்குப்பிறகும் ஒரு முறை ஏரி நிரம்பி வழிந்தது.ஒருநாள்இரவிலேயே அந்த அதிசயம் நடந்தது.ஓர் இரவு முழுக்கப்பெய்த கன மழையில் அந்த அற்புதம் வாய்த்தது.அதற்குப்பிறகு இன்றுவரை அந்தக்காட்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.

ஏரி நிரம்பிவிட்டால் பக்கத்தில் உள்ள கிணறுகளும் வேகமாக நிறையத்துவங்கும்.நீர் இறைக்கும் மோட்டார்கள் பெரும்பாலும் கிணற்றின் நடுவே இருக்கும்.மோட்டார்களை மேலே தூக்கிப்போட ஆள் தேடுவார்கள். இப்போது இதெல்லாம் பார்க்க முடியவில்லை.கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் மோட்டார்களுக்கு வேலை இல்லை.

மழை பெய்தால் எனக்கு இன்னொரு சந்தோஷம்.வீட்டில் நிலக்கடலை வறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.மழைநேரத்தில் வறுத்த நிலக்கடலையை உரித்துத் தின்பதில் அத்தனை சுகம்.சில நேரங்களில் போண்டா சுட ஆரம்பித்து விடுவார்கள்.குழந்தைகளுக்கு காகிதத்தில் கப்பல் செய்து ஓடும் மழை நீரில் விட வேண்டும்.அதிலும் கத்திக்கப்பலாக இருந்தால் இரட்டை சந்தோஷம்.

கருமேகத்தைப்பார்த்தாலே பள்ளியை முடித்துவிடுவார்கள்.குழந்தைகள் வெகுதூரம் நடந்து செல்லவேண்டியிருக்கும்.பள்ளி விட்டு வீட்டுக்கு வருவதற்குள் பல நாட்கள் நனைந்திருக்கிறேன்.வழியில் எங்காவது மரம்தான் ஒதுங்கக்கிடைக்கும்.மழையில் மரத்தின் கீழ் நிற்கவேண்டாம் என்று சொல்வார்கள்.இன்று மழையில் நனைய யாருக்கும் விருப்பமில்லை.சிறு தூறலென்றாலும் உடனே ஒதுங்க மனம் அலைகிறது.செல்போன் நனைந்துவிடுமென்ற பயம்தான் காரணம்.

மழை செழிப்பைக்கொண்டு வருகிறது.மழை மட்டும்தான் செழிப்பைக் கொண்டுவருகிறது.மழைநீர் சேகரிப்பு பற்றி பொதுமக்களிடம் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை.சேவை செய்ய பலருக்கு ஆர்வம் இருக்கிறது.அவர்கள் இந்தப்பணியில் ஈடுபட்டால் பெரிய புண்ணியம்.
-

No comments: