Tuesday, October 5, 2010

ஆண்மைக்குறைவும் நரம்புத்தளர்ச்சியும்

சார்,"எனக்குஉடல் பலவீனமாக இருக்கிறது"-என்ன செய்யலாம்?என்று கேட்டான் அவன்.அவனுக்கு திருமணம் ஆகவில்லை.வயது இருபத்தேழு .ஐம்பது கிலோ மூட்டையை தூக்க சொன்னபோது சாதாரணமாக தூக்கிவிட்டான்! உண்மையில் அவனுடைய பிரச்சினை என்ன? பிறகு பேசப்பேச தெரிந்தது இதுதான் -ஆண்மைக்குறைவு,நரம்புத்தளர்ச்சி,உடல் பலஹினம்,விரைவில் விந்து வெளியேறுதல்,கரப்பழக்கம் என்ற விளம்பரம் அவனிடம் ஏற்படுத்திய தாக்கம் அது.பரம்பரை விடுதி வைத்தியர்களின் புகழ்பெற்ற விளம்பரம் அவை.இவ்விளம்பரங்களில் காணப்படும் அறிகுறிகள் மிக பொதுவானவை.பெரும்பாலான இளைஞர்களிடையே சுய இன்பம் காணும் பழக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.இவற்றை பணமாக்குவதுதான் பரம்பரை வைத்தியர்களுக்கு எளிதாக இருக்கிறது.
உண்மையில் ஆண்மைக்குறைவு என்பதுதான் என்ன?
உடலுறவில் பிறப்புறுப்பு விரைப்புத்தன்மை இல்லாமல் போவதும்,விரைவில் விந்து வெளியாவதும்தான் பொதுவாக ஆண்மைக்குறைவு எனப்படுகிறது.இவற்றில் பெரும்பாலானவை மனம் தொடர்புடைய சிக்கல்கள்.தவறான விளம்பரங்கள் மேலும் சிக்கலாக்குகின்றன.நீரிழிவு,மது,அதிகமாக புகை பிடித்தல்,உட்சுரப்பிகள் தொடர்பானவை உள்ளிட்ட வேறு காரணங்கள் இருந்தாலும் உள்ளம்தான் முதலிடம் வகிக்கிறது.மனநல மருத்துவரை நாடுவதே இதற்குதீர்வு .மனநல மருத்துவர் என்றவுடன் பைத்தியங்கள்தான் அங்கே போகவேண்டும் என்று கருதுவது விடுதி வைத்தியர்களுக்கு வசதியாகிவிடுகிறது. இவர்களுக்கு கொடுக்கும் விலை மிக அதிகம்.
நரம்புத்தளர்ச்சி பற்றிய நம்பிக்கைகள்
நரம்புமண்டலநோய்கள் தவிர்த்து பொதுவாக விளம்பரங்கள் குறிப்பிடும் நரம்புத்தளர்ச்சி மனம் தொடர்பான ஒரு குறைபாடு.ஆங்கிலத்தில் Anxiety disorder என்று குறிப்பிடப்படும் இக்குறைபாடு சமூகத்தை எதிர்கொள்வதில் காணப்படும் கலக்கத்தை குறிக்கிறது. தாழ்வு மனப்பான்மை இதன் பின்னணியில் இருக்கிறது. மற்றவர்களைப்போல் சாதாரணமாக பழக கூச்சப்படுவது போன்றவற்றால் சரியான தகவல்கள் இவர்களுக்கு எட்டாமல் போய்விடுகிறது. பரம்பரை வைத்தியர்களிடம் அடைக்கலமாவது தவிர்க்கமுடியாமல் பணத்தை இழந்தும்,பிரச்சினை சரியாகாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
சர்வரோக நிவாரணி -அஸ்வகந்தா
விடுதி வைத்தியர்கள்சர்வரோக நிவாரணியாக பயன்படுத்துவது அஸ்வகந்தா எனும் மருத்துவ குணம் கொண்ட மூலிகைதான் என்பது பல இந்திய முறை வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.இம்மூலிகை மன இறுக்கத்தை போக்கிவிடுகிறது என்றும் மனநலத்தை மேம்படச்செய்வதால் ஓரளவு உள்ளம் சார்ந்த ஆண்மைக்குறைவும்,நரம்புத்தளர்ச்சியும் சரியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.இதற்காக பல்லாயிரக்கணக்கில் பணத்தை இழக்கத்தேவையில்லை.நல்ல இந்திய முறை மருத்துவர்களை நாடலாம்.எனினும் இப்பிரச்சனைகள் உள்ளம் சார்ந்ததா,உடல் சார்ந்ததா என்பதிலும் தெளிவு வேண்டும்.

-

No comments: