Saturday, October 16, 2010

பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு பெண்களின் எதிர்வினைகள்

பெண்கள் பணிபுரியும் இடங்களில் உடன் இருப்பவர்களால்,அலுவலர்களால் தரப்படும் பாலியல் தொல்லைகள் அமிலம் போல அவர்களது உள்ளத்தை சிதைக்கிறது.இரண்டு நிகழ்வுகளையும் அதன் எதிர்வினையையும் கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரி.அந்நிறுவனத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்தான் .அங்கே பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணிடம் தொடர்ந்து தனது முறையற்ற பாலியல் வேட்கையை வெளிப்படுத்தியவாறு இருந்தான்.அந்தப்பெண் திருமணமானவர்.முடியாமல் போகவேஅந்த பெண்ணைப்பற்றி தலைமை அலுவலகத்துக்கு ஒரு மொட்டைக்கடிதம் எழுதினான் ."ஒழுங்காக பணிபுரிவதில்லை.நேரத்துக்கு வேலையில்இருப்பதில்லை.அலுவலகத்தில் ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்."
மத்திய அரசு திட்டமொன்றின் மேலாளராக சமூக சேவை வந்தவன் அவன்.திருமணமாகாத ஒரு பணியாளர் மீது வெறி கொண்டான்.அவனுக்கு மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.அவனிடம் பணிபுரியும் பணியாளன் ஒருவனும் சேர்ந்து அந்தப்பெண் உடன் பணிபுரியும் பணியாளருடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்வதை செல்போன் கேமராவில் படம்பிடிக்ககளப்பணியாளர் ஒருவரை பணித்தார்கள்.களப்பணியாளர் மறுத்து விட்டார்.தனியாக வீடு எடுத்து தங்கியிருந்த பெண்ணை தொடர்ந்து சுற்றி சுற்றி கழுகுகளை போல கவனிக்கத்துவங்கினார்கள்.அந்த அயோக்கியர்களின் தொல்லைகளுக்கு பயந்து ஐந்து மணிநேரம் பயணம் செய்து தினமும் பணிக்கு வர ஆரம்பித்தார் .அவர்களது கீழ்த்தரமான் நடவடிக்கைகள் வெளியே தெரியவரவே அந்தப்பெண்ணை பற்றி தரமற்ற செய்திகளை பரப்ப ஆரம்பித்தார்கள்.
பெண்ணின் மீதான அவதூறுகளின் பின்னணி
இரண்டு நிகழ்வுகளிலும் முடிவு ஒரே மாதிரிதான் இருந்தது. தனது வெட்கக்கேடான முயற்சிகள் பலிக்கவில்லை என்ற உடன் பெண்களைப்பற்றி மோசமான அவதூறுகளை பரப்பத்துவங்கினார்கள்.தங்களைப்பற்றிய பிம்பம் உடைந்துவிடும் என்று அஞ்சி அப்பெண்களின் மீது சேற்றையிரைத்தார்கள்.பல்வேறு நிகழ்வுகளில் அவனுடன் தொடர்பு ,இவனுடன் தொடர்பு என்று பெண்களை பற்றி ஆண்களின் வார்த்தைகள் இது போன்றவை தான்.
பெண்களின் பதிலுரைகள் என்ன?
அதே குழுவில் பணிபுரிந்ததால் உடன் பணிபுரியும் மற்ற பெண்களிடம் மேற்கண்ட பாலியல் தொல்லைகளைப்பற்றி பேசினேன்.அவர்களது கருத்துரைகள் என்னை சிந்திக்கத்தூண்டியது.பத்து பெண்களிடம் இதைப்பற்றி கருத்துகேட்டபோது அவர்களது கருத்துக்கள்.
  1. ஐயோ!என்னென்னமோ நடக்குதுடா சாமி!
  2. உங்களுக்கு யார் சொன்னது ?
  3. அழகாக வட்டமுகமாக இருக்குமே அந்த பெண்தானே ?
  4. அவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்
  5. பேசாமல் அவருடைய சொந்த ஊரிலேயே மாற்றி விடவேண்டும் (குடும்பத்தை பிரிந்து இருப்பதால் இப்படி நடந்து கொள்கிறான் )
  6. தலைமை அலுவலகத்தில் புகார் செய்யவேண்டும்.
  7. அவன் நிறையபேரிடம் அப்படி நடந்துகொள்கிறான்
  8. நம்முடன் பணிபுரியும் பெண்களே அவனுக்கு சாதகமாக இருக்கிறார்கள்.
  9. பொம்பளையா பொறந்தாவே அப்படித்தான்.
  10. அவனுங்கள நிக்க வச்சி சுடணும்.
பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் குறித்துநிவாரணம் பெற சட்டம் தொடர்பாக இப்போது இருப்பது 1997-ல் விசாகா எதிர் ராஜஸ்தான் அரசு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மட்டுமே. சட்டம் வருவது இழுத்துக்கொண்டிருக்கிறது.ஆனால் சிலர் பட்டதாரிகளாக இருந்தும் அவர்களுக்கு இதைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. சாதாரணமாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெண்ணின் வாழ்க்கை முறையாக இருப்பதாக கருதினார்கள்.அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.
என்ன செய்யலாம்...........................?
பள்ளி,கல்லூரிகளில் தற்போது நுகர்வோர்சங்கங்கள்,செஞ்சுருள் சங்கங்கள்,போன்றவை உள்ளன.அதேபோல பெண்ணுரிமை சங்கங்களை ஏற்படுத்தலாம்.அடிப்படை உரிமைகள்,தீர்வு காண்பது,பாதிக்கப்படும்போது சரியாக இயங்குதல் குறித்து பயிற்சி தரலாம்.அடுத்ததாக,மகளிர் சங்கங்களுக்கும் விழிப்புணர்வும் பயிற்சியும் தரலாம். -

No comments: