Showing posts with label மணவாழ்க்கை. Show all posts
Showing posts with label மணவாழ்க்கை. Show all posts

Sunday, April 20, 2014

பெண்ணுக்கு வீடே கதியென்று இருக்கலாமா?



அந்தப்பெண்ணுக்கு இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கலாம்.பேருந்தில் தனது அருகில் இருந்தவரிடம் பேசிக்கொண்டு வந்தார்.கல்யாணமானதிலிருந்து எங்கேயும் வெளியே கூட்டிட்டுப் போகவே இல்லையாம்! அவரது குரலில் ஆச்சர்யமும் பயமும் கலந்திருந்தன.திருமணகாத பெண்ணுக்கு தனது எதிர்காலம் குறித்த கலக்கத்தை ஏற்படுத்திருக்கூடும்.

இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான்.நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைப்பதையே சிறை என்கிறோம்.பெண்களில் சிலருக்கு வீடு அப்படி ஆகிவிடுகிறது.அவர்களின் மனதைப் பாழ்படுத்திவிடுகிறது.அதுவும் மணமான புதுப்பெண்ணிற்கு இது அதிர்ச்சியை அளித்திருக்க வாய்ப்புண்டு.மணவாழ்வில் தொடர்ந்து ஒட்டாத அணுகுமுறை வளர வளரக்கூடும்.


பெரியவர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணமாக இருக்கவேண்டும்.தோஷத்திற்கு தகுந்தது என்றோ,பணம்,வரதட்சணை போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தந்திருக்கலாம்.ஆணுக்கு விருப்பமில்லாவிட்டாலும் சமாதானப்படுத்தியிருக்கலாம்.இன்னமும் வீட்டுக்கு அடங்கிய பையன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.அல்லது ஏதாவது மனக்குறை இருக்கலாம்.பேசியபடி வரதட்சணை முழுமையாக கொடுக்காமலும் இருக்கலாம்.

தம்பதிகள் இரண்டு ஆண்டுகளாக குழந்தை இல்லை என்று மருத்துவரிடம் வந்தார்கள்.அவர்களுக்கு உடல் அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை.மணவாழ்வில் இருவருக்கும் மனதளவில் நெருக்கம் இல்லாததே குழந்தையின்மைக்கு காரணமாக இருந்தது.கல்யாண நாளில் ஏற்பட்ட சம்பவம் பெண்ணுக்கு மனதில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.உரிய ஆலோசனைக்குப் பிறகு பிரச்சினை முடிவுக்கு வந்தது.


புதிதாக மணமானவர்கள் என்றில்லை,மற்றவர்களுக்கும் அவசியம்தான்.எத்தனை காலம் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடக்கமுடியும்? மனைவி குழந்தைகளை எங்காவது வெளியில் அழைத்துச்செல்லவேண்டும் என்று சொல்பவ்ர்களும் இருக்கிறார்கள்.பலர் பணக்கஷ்டத்தைச் சொல்கிறார்கள்.உண்மையில் நடுத்தரவர்க்கத்தினர் நிலை சிரமமானதுதான்.கோடை விடுமுறை என்றால் அடுத்து பள்ளித் திறப்பே பலருக்குக் கவலையைத்தந்துவிடுகிறது.

மலைவாசஸ்தலமான ஏலகிரிக்குப் போயிருந்தேன்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை இரயில் சந்திப்புக்கு அருகில் இருக்கிறது.வேலூர்,திருப்பத்தூரிலிருந்து பேருந்து மூலமும் செல்லலாம்.கோடையில் மலைவாசஸ்தலங்களில் ஏழை,நடுத்தரவர்க்கம் ஓய்வெடுக்க முடியும் என்று தோன்றவில்லை.எல்லாவற்றிற்கும் இரட்டைவிலை கொடுக்கவேண்டி இருக்கும்.


சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள்தான் அதிகமாக பார்த்தேன்.இன்றைய விலைவாசி அவர்களுக்குத்தான் சரிப்பட்டுவரும் என்று தோன்றுகிறது. பூங்காவில் குழந்தைகள் விளையாடலாம்.ஏலகிரியில்,நிலாவூரிலுமாக இரண்டு படகு இல்லங்கள் இருக்கின்றன.படகு சவாரி போகலாம்.நிலாவூரில் தண்ணீர் இல்லாததால் படகு இல்லம் வெறுமையாக இருந்தது.

சிவன்,பெருமாள்,முருகன்,அம்மன் கோயில்கள் இருக்கின்றன.நடந்து சுற்றுவதெல்லாம் சாத்தியம் இல்லை.வாகனம் இருப்பதுதான் நல்லது.இரவு தங்கினால்தான் இயற்கையையும்,நல்ல குளுமையான காற்றையும் அனுபவிக்கமுடியும்.ஆனால் பணம் கொஞ்சம் அதிகம் செலவாகும்.வெளியில் செல்லவேண்டுமென்றால் மலைவாசஸ்தலம்தான் போகவேண்டுமென்றில்லை.அருகில் ஏதேனும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
-

Wednesday, July 20, 2011

சந்தேகத்தால் சிதறும் தாம்பத்யம்.


சம அந்தஸ்து,படிப்பு,சொந்தவீடு,அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பையனின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெண்னுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷம்.குறை வைக்காமல் பார்த்து பார்த்து செய்தார்கள்.

                                ஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்த பெண் அம்மாவைக்கட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தார்.எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறார்.வெளியே எட்டிப்பார்த்தால் யாரைப்பார்க்கிறாய் என்கிறார்.என்னுடைய செல்போனை எடுத்து யார்யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்க்கிறார், வாழ்க்கையை நினைத்தால் பயமாயிருக்கிறது’’

                                 மேலே சொல்லப்பட்ட்து கொஞ்சம்தான்.தன்னை விட அழகான மனைவி அமைந்த்தால் சந்தேகம் ஏற்பட்டு மனநோயாளியானதை சினிமாவில் பார்த்திருக்கிறோம்.நிஜத்திலும் உண்மையில் மனநோய் ஏற்படும் அளவுக்கு பிரச்சினையை தரும் ஒன்றுதான் இந்த சந்தேகம்.தீவிரமான உணர்ச்சிப்போராட்ட்த்தை தரும் பயங்கரம் இது.

                                 ஆண் மட்டுமல்ல கணவன் மீது சந்தேகம் கொள்ளும் மனைவியும் உண்டு.இரு பாலருக்கும் பொதுவான இந்த பிரச்சினைக்கு அழகான மனைவி,அழகான கணவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் காரணமல்ல! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.ஒரு வகை மனநோயிலும் இந்த பிரச்சினை வரலாம்.

                                  தனது பாலியல் திறன் மீது அவநம்பிக்கை உள்ளவர்கள்,உண்மையிலேயே பாலியல் குறைபாடு கொண்டவர்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.பருவ வயதில் திருமணமான நபர்களின் கள்ளக்காதல் பற்றி நண்பர்கள் சொன்ன பல விஷயங்களும் இப்போது மனதைக்குழப்பும்.சில விஷயங்களை இவர்களே பார்த்திருப்பார்கள்.கடந்த கால சம்பவங்களோடு மனம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்.

                                  பாலியல் குறைபாடு உள்ளவர்கள் கூட தனது இணை தனக்கு மட்டுமே உரியவர் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.பல எண்ணங்கள் தவறு என்றாலும்  அவர்களது மனம் படும்பாடு கொடூரமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.சந்தேகமும்,பொறாமையும்,கோபமும் அதிகரிக்கும்போது பாலியல் உணர்வும் மூர்க்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.

                                  பலரது சந்தேகங்கள் உண்மையல்ல என்பதே நிஜம்.உணர்ச்சி அளவில் அதிகம் பாதிக்கப்படுவது சந்தேக புத்தி உள்ளவர்கள்தான்.அவர்களது கணவனோ,மனைவியோ ஒரு பைத்தியத்தை பார்ப்பதுபோலவே பார்ப்பார்கள்.ஆனால் கலாச்சாரம் சார்ந்து மனதளவில் சந்தேகப்படும் கணவனைப்பெற்ற பெண் அதிகளவு பாதிக்கப்படுகிறார்.

                                  கொலை செய்யும் அளவுக்கு,தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு.கவனமாக கையாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடியும்.

-