Showing posts with label lifestyle. Show all posts
Showing posts with label lifestyle. Show all posts

Friday, November 25, 2011

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்


                                நாம் வளமாகவும் நலமாகவும் இருக்க எண்ணுகிறோம்.பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்கிறோம்.உடலையும் மனதையும் புதுப்பித்துக்கொள்ள தூங்குகிறோம்.பணம் சம்பாதிப்பது,சாப்பிடுவது,தூங்குவது இதையெல்லாம் தாண்டி பொழுதுபோக்கு என்று இருக்கவே செய்கிறது.
                                ஓய்வும் கிடைக்கத்தான் செய்கிறது.சில நேரங்களில் நேரம் சலிப்படையச் செய்கிறது.போர் அடிக்கிறது என்று சொல்வோம்.அப்போது ஒவ்வொருவரும் சில செயல்களை செய்கிறார்கள்.சிலருக்கு புத்தகம்,சிலருக்கு இசை,தொலைக்காட்சி,சினிமா,நண்பர்கள்,இணையம் என்று பலவாறாக உண்டு.

                                பொழுதுபோக்கு என்று இவற்றை சொல்கிறோம்.ஆனால் உற்று கவனித்தால் மொத்த வாழ்க்கையும் பொழுதை போக்குவதுதான் என்று தோன்றுகிறது.போகட்டும்.இந்த பொழுது போக்குகள் ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு  மாதிரி எப்படி உருவாகின்றன? அவரவர் வாழ்ந்து வந்த சூழல் இதை பெருமளவு தீர்மானிக்கிறது.
                                 வாழ்வில் பொழுதுபோக்குகள் செலுத்தும் ஆதிக்கம் மிக அதிகம்.ஒருவரை சிறப்பாக செயல்பட்த் தூண்டுவதிலும்,நல்ல உறவுகளை வளர்ப்பதிலும் இவை பெருமளவு பங்கு வகிக்கின்றன.நல்ல இசை கேட்பதை பொழுதுபோக்காக கொண்டவர் அமைதியான மனநிலையை பெறுகிறார்.நல்ல மனநிலை உற்சாகமாகவும்,சிறப்பாகவும் செயல்புரியத் தூண்டுகிறது.
                                 புத்தகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம் இருக்கிறதா என்ன? வாசிப்புப் பழக்கம் என்பது வரம்.மனிதனை சீர்படுத்துவதிலும்,ஆளுமையை உருவாக்குவதிலும்,நல்ல உணர்வுகளை மேம்படுத்துவதிலும் புத்தகத்திற்கு நிகர் வேறெதுவுமில்லை.இன்றைய வாசிப்பு புத்தகம்,தாண்டி இணையத்தில் விரிந்து நிற்கிறது.
                                   சினிமா,தொலைக்காட்சி போன்றவையே இன்றைய அதிகமான மக்களின் பொழுதுபோக்கு.சீரியல்கள் நல்ல உணர்வுகளை வளர்ப்பதாக நான் நம்பவில்லை.நல்ல சினிமாவும்,மோசமான சினிமாவும் இருக்கின்றன.தொலைக்காட்சியில் நகைச்சுவை,செய்திகள் என்று பலவாறாக கிடைக்கிறது.
                                  இன்னும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்ல்லாம். ஒவ்வொரு பொழுதுபோக்கும் ஏதோவொரு வித்த்தில் நம் அன்றாட செயல்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.நல்ல பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்வதில் நமது வெற்றியும் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது.எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரம் அன்றாட செயல்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
                                  நல்ல பொழுதுபோக்கு கொண்ட குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.சந்தேகம் எதுவும் வேண்டாம்.குழந்தைகளுக்கு பாடப் புத்த்கங்களைத் தாண்டி வாசிப்பு பழக்கத்தை உருவாக்கலாம்.நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு அவர்களிடம் அந்த பழக்கத்தை வளர்க்க முடியாது.
                                

-

Wednesday, August 3, 2011

விபரீதம் புரியாத பாதையில் இளைஞர்கள்.

இந்தியாவில் 95000 இளைஞர்கள் எச்.அய்.வி கிருமி தொற்று உள்ளவர்கள்.இவர்கள் அத்தனை பேரும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள்.பத்திரிகைகளால் நட்த்தப்படும் பல்வேறு ஆய்வுகளும் இளம் வயது பாலுறவு அதிகரித்து வருவதாக கூறுகின்றன.இன்றைய இளைஞர்கள் திசை தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

                                வளர்ந்து விட்ட தொழில்நுட்பத்திற்கு இதில் பங்கிருக்கிறது.செல்போன் உள்ளீட்ட தகவல் தொடர்பு சாதன்ங்கள்,இணையம் போன்றவை இவற்றில் முக்கிய இடம் வகிக்கின்றன.வளரிளம் பருவத்தில் கட்டற்ற உணர்வுகள் தோன்றுவது இயற்கை.அதை நிறைவேற்றிக்கொள்வதில் இன்றைய இளமைக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.ஆனால் தூண்டுவதற்கு ஏராளமான விஷயங்கள்.

                                பெற்றோர்களுக்கு குழந்தைகளை கண்காணிக்க நேரம் இருப்பதாக தெரியவில்லை.தங்களது குழந்தைகளுக்காக வாழ்வதாக,சம்பாதிப்பதாக சொல்லிக்கொண்டாலும் பல நேரங்களிள் நேரில் சந்திப்பதே குறைவு.குடும்பத்தை விடவும் நெருக்கமான உறவுகள் வெளியில் இருக்கின்றன.அங்கே போதை,பாலுறவு என்று அறிமுகங்கள்தான் கிடைக்கின்றன.

                                இன்றைய இளைஞனுக்கு சரியான முன்னுதாரணம் இல்லை என்பது உற்று நோக்கினால் தெரியும்.சினிமா கிசுகிசுவை படிப்பவனுக்கு தனக்கும் அப்படி ஒரு பிரபலம் வேண்டும் என்றுதான் தோன்றும்.ஆக இது ஒரு பெரிய விஷயமில்லை.நாட்டில் நடப்பதுதானே? பல ட்வீட்டுகள்,வாசகங்கள் பெண்களை ஈவ் டீசிங் செய்ய உதவியாகத்தான் இன்று எழுதப்படுகின்றன..ஃபேஸ்புக் உரையாடல்களில் சுமார் நாற்பத்தைந்து சதவீதம் ஆபாசங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

                                  தமிழகத்தில் தர்மபுரி,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் இளம்வயது திருமணங்கள் அதிகம்.இப்போது ஓரிரு ஆண்டுகளாக பலத்த பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது.பேசி முடிவு செய்து உற்றார்,உறவினர்களை அழைத்து,மண்டபம் பேசி முடிவு செய்த பின்னால் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு விடுகிறது.

                                 திருமண வயது பதினெட்டு என்பதுதான் சட்டம்.அதற்குக்கீழ் மனமோ,உடலோ பக்குவம் அடைந்து விடுவதில்லை.உண்மையில் இருபது வயதுக்கு மேல்தான் சரி என்று தோன்றுகிறது.மத்திய அரசு மசோதா ஒன்றை பற்றி எனது வேறொரு இடுகையில் பகிர்ந்திருக்கிறேன்.16 வயதிலிருந்து 18 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் பரஸ்பரம் ஒப்புதலுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்.

                                  18 வயதுக்கு முன்பு திருமணம் வேண்டாம்,செக்ஸ் சரி என்று நாம் சொல்கிறோமா? இதென்ன கூத்து என்றுதான் தோன்றும்.ஆனால் பல இடங்களில் பதினெட்டு வயதுக்குக்கீழ் உள்ளவர்களை காவல்துறை பிடிக்கும்போது என்ன செய்வதென்று தெரிவதில்லை.அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில் சங்கடம் இருக்கிறது.சாதிக்கும் வயதில் திசை மாறுவது அதிகரிக்கும் என்பதுதான் இப்போதைய கணிப்பு. 

                                   இன்றைய இளைஞர்களை நல்ல விஷயத்துக்காக பயன்படுத்தினால் இந்தியா வளம் பெற்று விடாதா? காரணங்களை கண்டறிந்து களைவதுடன் நல்ல ரோல் மாடல்கள் அவர்களுக்கு  உருவாக வேண்டும்.
-

Saturday, July 23, 2011

காபி குடிப்பீங்களா?

                                 கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு அது.பேராசிரியர் ஒருவரது வீட்டில் கூடினார்கள்.ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருந்தார்கள்.தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.கிட்ட்த்தட்ட எல்லோரும் முணுமுணுத்தார்கள்.அவர்களது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்கள்.வாழ்க்கை எளிதாக இல்லை.

                                  வேலை குடும்பம் என்று மனதில் ஏற்படும் இறுக்கத்தையும்,வலியையும் குறிப்பிட்டார்கள்.டென்ஷன்,டென்ஷன் என்று குரல் கொடுத்தார்கள்.கல்லூரி வாழ்க்கை போன்ற வசந்தகாலத்தை அனுபவிக்கவே முடியவில்லை.இன்றைய அவசர வாழ்வின் பரிமாணங்களை பற்றி விவாதங்கள் போய்க்கொண்டிருந்த்து.பேராசிரியர் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

                                  மனதளவில் பழைய மாணவர்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு காபி தரவேண்டுமென்று முடிவு செய்து அவரே தயாரிக்க கிளம்பினார்.மற்றவர்கள் தங்கள் மலரும் நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருந்தார்கள்.பேராசிரியர் காபி தயாரித்து முடித்துவிட்டார்.வந்திருக்கும் அனைவருக்கும் வீட்டிலிருக்கும் காபி கப்,தம்ளர்கள் போதாது.

                                   பேப்பர் கப்போ,பிளாஸ்டிக் கப்போ வாங்கிவரலாமென்றால் கடையும் வெகு தூரம்.வீட்டில் இருப்பதை வைத்தே சமாளித்து விடலாமென்று முடிவு செய்து விட்டார்.பீரோவில் இரண்டு வெள்ளித்தம்ளர்கள் இருந்த்து.சில கண்ணாடி தம்ளர்கள்,சில்வர்,மண் குவளை என்று விதம்விதமான கப்களையும்,தம்ளர்களையும் பிடித்து விட்டார்.ஒரு வழியாக வந்திருக்கும் அனைவருக்கும் ஏற்பாடு செய்தாகிவிட்ட்து.

                                   காபியை கப்களிலும்,தம்ளர்களிலும் அவரே ஊற்றி அனைவரையும் எடுத்துக்கொள்ளச்சொன்னார்.மாணவர்களும் ஆளுக்கொன்றை எடுத்துக்கொண்டார்கள்.சிலர் காபி குடிக்கும் பழக்கம் இல்லை என்று மறுத்து விட்டார்கள்.அதனால் சில கப்களும்,தம்ளர்கள் மட்டும் டேபிளிலேயே இருந்த்து.டேபிளில் மீதமிருக்கும் கப்களை கவனியுங்கள்’’ என்றார் பேராசிரியர்.

                                   யாரும் எடுக்காத மிச்சமிருக்கும் குவளைகள் விலை குறைவானவை மற்றும் அழகில்லாதவை.பேராசிரியர் பேசினார்.நான் கவனித்துக்கொண்டிருந்தேன்,முதலில் எடுக்க வந்தவர்கள் அதிக விலையுள்ள கப்களையும்,அழகானவற்றையும் எடுத்தார்கள்.அனைவரது கையும் அவற்றுக்குத்தான் நீண்டன! ஏன்? நீங்கள் குடிக்கப்போவது காபியத்தானே? கப்பையோ,தம்ளரையோ இல்லையே?

                                  பெரும்பாலானவர்களுக்கு வரும் மன இறுக்கமும்,கவலைகளும் இந்த வகைதான்.காபியை மறந்து விட்டு கப்பை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.வாழ்க்கையை வாழ்வதை விட்டுவிட்டு வறட்டு கௌவரவத்துக்காக அவசியமில்லாத்தை தேடி டென்ஷன் ஆகிறீர்கள்.தூக்கம்கெட்டு தவிக்கிறீர்கள்.அப்புறம் மன அழுத்தம்,கவலை என்று போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை.

                                   எளிதாக புரியும் விஷயம்தான்.கொஞ்சம் யோசித்தால் நாமும் சந்தோஷத்தை வரவழைத்துக்கொள்ளலாம்.கப்பை விட்டுவிட்டு நாம் காபியை கவனிப்போம்.(எனக்கு மெயிலில் வந்த்து)
-

Friday, July 1, 2011

கணவன்,மனைவி வளைந்து கொடுத்து போகவேண்டுமா?

                               நம் அனைவருக்கும் பொதுவான எண்ணம் ஒன்று உண்டு.நான் புத்திசாலி என்பதும் எனக்கு தெரியாத்து என்ன இருக்கிறது என்பதும்தான் அது.நம்மைவிட வெற்றிகரமான மனிதர்களை பார்க்கும்போதும் அவனுக்கு அதிர்ஷ்டம் என்போமே தவிர திறமை பற்றி பேசுவதில்லை.ஏதேதோ காரணங்களை மனம் தேடும்.

                               இந்த எண்ணங்களால் கொஞ்சம் நன்மையும் இருக்கிறது.தாழ்வு மனப்பான்மையில் விழாமல் இருக்க உதவும்.ஆனால் இது ஓரளவுக்கு இருந்தால் சரி.நான் சொல்வது மட்டுமே சரி என்பதுதான் பல நேரங்களில் பிரச்சினை.என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற பிடிவாதம் உறவுகளில் சிக்கல்களை தோற்றுவித்து விடுகிறது.

                               நான் இவ்வளவு படித்திருக்கிறேன்,என் நண்பனோ,மனைவியோ மற்ற உறவுகளோ உலகம் தெரியாதவர்கள் என்று கருதுபவர்கள் இருக்கிறார்கள்.அது சரியாக கூட இருக்கலாம்.ஆனாலும் யாரும் எப்போதும் அறிவாளியாக இருப்பது சாத்தியமில்லை.அதே சமயம் மற்றவர்கள் உங்களைப்போலவே எல்லாம் தெரிந்த ஆட்களாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை.

                               ஒரு பிரபல மனநல மருத்துவமனைக்கு உடன் வருமாறு தெரிந்தவர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.அவரது தம்பி அங்கே உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.நாங்கள் சென்று பார்த்த போது சாதாரண மனிதர்களை போலவே அமைதியாக பேசிக்கொண்டிருந்தார்.சுமார் இருபத்தைந்து வயது இருக்கும்.பைத்தியம் என்று சொல்ல முடியாது.

                                 வெளியில் வந்து என்னதான் பிரச்சினை? என்றேன். வீட்டில் பணம் தராவிட்டால் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறான், அடிக்கடி இப்படி ஆகிவிடுகிறது.எங்காவது வேலைக்கு சேர்த்தாலும் சில நாட்கள்கூட நிற்பதில்லை.நம்மைப்போல இல்லை.இங்கே வந்து சில வாரங்கள் ஆகிவிட்ட்து.மருத்துவரை பார்த்து பேசவேண்டும்’’ என்றார்.

                                  நீண்ட நேரம் காத்திருந்து மருத்துவரை சந்தித்தோம்.கிட்ட்த்தட்ட கையை விரித்து விட்டார்கள் என்று சொல்லவேண்டும்.பல நாட்கள் ஆலோசனைகளுக்கு பிறகு அவர்களது முடிவு,அவருடைய திறன் அவ்வளவுதான்,வேறு எதுவும் செய்யமுடியாது.இனி சிகிச்சை இல்லை.அவரை இருக்கும் நிலையில் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.அவர் மன நோயாளி அல்ல! அவருடைய சிந்திக்கும் திறன்,உணரும்,பகுத்தறியும் திறன் அவ்வளவுதான்.  

                              வெளியில் வந்து அவரது பெற்றோரிடம் கூறியபோது தந்தை சோர்ந்து போனார்.பையனின் தாயார் கூறியது,இருந்து விட்டு போகட்டும்,நான் பார்த்துக்கொள்கிறேன்,அவனும் என் பிள்ளைதான்”. திறனில்லாத ஒருவரை எந்த தாயும் ஒதுக்கிவிடுவதில்லை.பல பெண்களும் திறனில்லாத கணவனுடன் வெற்றிகரமாக குடும்பம் நட்த்திக்கொண்டு இருக்கிறார்கள்.

                              உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கலாம் என்பது உண்மைதான்.இருக்கட்டும்.ஆனால் மனிதர்கள் அனைவரும் ஒன்று போலவே படைக்கப்பட்டவர்கள் அல்ல!ஒவ்வொருவருக்கும் சிந்திக்கும் திறன்,புரிந்துகொள்ளும் திறனில் வேறுபாடு இருக்கிறது.நான் சொல்வதே சரி என்பது எப்போதும் இருக்காது.சில காலங்களில் அது மாறிப்போகலாம்.வளைந்து கொடுப்பது சரியானதுதான்.ஆனால் அது தனிமனிதனுக்கோ,சமூகத்துக்கோ கெடுதலை ஏற்படுத்தக்கூடாது.
-

Monday, June 6, 2011

என் கம்யூனிஸ்ட் நண்பருக்கு என்ன ஆச்சு?

  உறவினர் மூலமாக  என்னுடைய இருபதாவது வயதில் அந்த நண்பரை சந்தித்தேன்..ரொம்ப தைரியம்.நாட்டைப்பற்றியும் ,ஏழைகள் படும் பாடு பற்றியும் அவர் பேசும்போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும்.அவர் வீட்டுக்கு போனபோது ஒரு அலமாரி முழுக்க புத்தகங்கள் ,புத்தகங்கள்.!

                                                       குழந்தைகளை தூக்குவது போல ஒவ்வொன்றாக எடுத்து பார்த்தேன்.''படிக்கணும்னு ஆசை இருந்தா எடுத்துக்கோங்க!'' படித்த பின்னால் திருப்பிக்கொடுத்துவிடுங்கள் ".எனக்கு சந்தோஷமாகிவிட்டது.நான் எடுத்து வந்த புத்தகத்தில் ஒன்று மக்சீம்கார்க்கியின் "தாய் ".உலகப்புகழ்பெற்ற காவியம் என்று எனக்கு அப்போது தெரியாது.படித்து முடித்தபின்னால் எனக்கு நாவல்கள் படிக்கும் ஆர்வம் அதிகமாகி விட்டது.மனசுக்குள் எதையோ கலந்து விட்டது.இன்னதென்று உணரமுடியவில்லை.



                                                     அவரிடமிருந்து ஏராளமான புத்தகங்களை எடுத்து வந்திருக்கிறேன்.படித்திருக்கி
ேன்.அவரிடம் அடிக்கடி இந்திய அரசியலையும் ,நாட்டு நடப்பையும் கேட்டு விவாதிப்பது எனக்கு பிடித்தமான ஒன்றாக ஆகிவிட்டது.பல மாதங்கள் இது தொடர்ந்தது.வெகு  காலத்துக்கு அவரை சந்திக்க முடியவில்லை.

                                                      ஒரு வருடம் கழித்து என் உறவினரை சந்தித்தபோது அவர் பெற்றோரின் அனுமதி இல்லாமல் காதல் திருமணம் செய்து கொண்டுவிட்டார் என்ற தகவலை சொன்னார்.மனைவியுடன் கோவைக்கு குடிபெயர்ந்து விட்டார் என்றார்.

                                                     எனக்கு ஓட்டு மொத்தமாக பெற்றோர்கள் மீது இருந்த ஆத்திரம் இன்னும் அதிகமாகிவிட்டது.இந்த காதலை ஏன்தான் பெற்றோருக்கு பிடிக்காமல் போகிறது?அதற்குப்பிறகு பல ஆண்டுகள் கழித்து எதேச்சையாக சேலம் பேருந்து நிலையத்தில் அவரை சந்தித்தேன்.நல்ல தொப்பையுடன் வளமாக இருந்தார்.



                                                      ஒருவருக்கொருவர் நலம் விசாரித்த்பிறகு நான் எதிர்பாராத அந்த வார்த்தையை சொன்னார்."ஏதாவது உருட்டி புரட்டினாத்தான் இந்தக்காலத்தில் பிழைக்க முடியும் .என்ன சொல்கிறீர்கள்? அவரை உற்றுப்பார்த்தேன்.யோசனையுடனே தலையாட்டினேன்.இருவரும் காபி குடித்தோம்.அப்போது அவர் மேலும் பேசியதை வைத்து நான் முடிவு செய்துவிட்டேன்.

                                                       சமுதாயத்தின் மீது அக்கறை,நாட்டுப்பற்று எல்லாமும் அவரிடம் காணாமல் போயிருந்தது.பிழைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலைக்கு அவர் வந்திருந்தார். அவருக்கு என்ன ஆனது? சில பேரைக்கேட்டால் கல்யாணம் ஆகிவிட்டது என்பார்கள்.அது மட்டுமே உண்மையா?



                                                        பின்னர் இதெல்லாம் சாதாரணம் என்று ஆகிவிட்டது.அதற்குப்பிறகு நான் பலரை பார்த்தேன்.குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் ஆர்வமும்,நல்லகுணமும் எப்படியோ காணாமல் போய் விடுகின்றன.அவர்கள் சும்மா இருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் விடுவதில்லை.

                                                        உடற்பயிற்சியாக இருக்கும் என்று ஒரு கிலோ மீட்டர் உள்ள அலுவலகத்துக்கு நடந்தே போக ஆரம்பித்தார் அந்த அதிகாரி.இருபதடி தூரத்துக்குள் மூன்று பேர் கேட்டுவிட்டார்கள்."அய்யா வண்டி ரிப்பேரா?" அடுத்த இரண்டடியில் பணியாளர் ஒருவர் "அய்யா உட்காருங்க ! வண்டி ரிப்பேரா? ஆட்டோல போயிருக்கலாமில்ல சார்!

                                                         பலருக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பதைவிட இந்த பழக்கத்தையே விட்டுவிடலாம் என்று தோன்றிவிடுகிறது.நான் இப்படித்தான் இருப்பேன் என்று உறுதியுடன் சமூகத்தை எதிர்கொள்ள ரொம்ப தைரியம் தேவை.அது எல்லோருக்குமா வாய்த்து விடுகிறது?
-

Wednesday, June 1, 2011

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி?

மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!

                                நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!

                                 மனிதனாக நீங்கள் பிறந்துள்ளதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இல்லையா? உலகம் எதற்காக இருக்கிறது அதை யார் படைத்தார்கள்? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? நாம் என்னவாகப்போகிறோம்? இதெல்லாம் விடை இல்லாத கேள்விகள் தான்.ஆனால் நீங்கள் பிறந்துள்ளதன் காரணம் எனக்கு தெரியும்.அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு! அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு!

                                  எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான்.நூறு சதவீதம் என்பது ஒரு மாயை! அது முழுதும் உண்மையல்ல! அதனால் பெரும்பாலான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.எப்போதும் என்பது அதுதான்.என்னால் முடியவில்லை என்பவர்கள் முதலில் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவும்.உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கவும்.

                                   மகிழ்ச்சிதான் உங்கள் நோக்கமென்று முடிவு செய்துவிட்டால் அதை பெறுவது எளிது.முதலில் நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.இல்லையென்றால் உங்களை சங்கடப்படுத்தும்,கவலைக்குள்ளாக்கும் விஷயம் எது என்று கண்டுபிடிக்கவும்.இப்போதே நீங்கள் பாதி வெற்றியடைந்த்து போலத்தான்.

                                    உறுத்தும் விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டாலே அதை தீர்க்கும் வழிகளும் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.இயற்கை அனைவருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியை கொடுத்திருக்கிறது.தீர்க்க முடியாவிட்டால் உறவினரையோ,நண்பர்களையோ,அதற்கென உள்ள நிபுணர்களையோ அணுக வேண்டும்.பிரச்சினை தீர்ந்தால் மகிழ்ச்சிதானே வரும்.

                                    முக்கியமான விஷயம் உங்களை சுற்றி உள்ள  மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.நமது பக்கத்தில் நான்குபேர் அழுது கொண்டிருந்தால் உங்கள் மனநிலையும் பாதிக்கவே செய்யும்.அல்லது மற்றவர்கள் கஷ்ட்த்தில் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை.

                                    பிரபல பதிவர் ஒருவர் குறிப்பிட்ட சிலரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அன்று முழுக்க சாப்பாடு,தூக்கம் எதுவும் இல்லையாம்.இந்த மாதிரி விஷயங்களால் உங்கள் சந்தோஷம் பாதிக்கப்படுவது கஷ்டம்.மகிழ்ச்சி சட்ட்த்துக்கும்,நெறிகளுக்கும் உட்பட்ட பொருள்களில் இருக்கவேண்டும்.நிகழ்காலத்தில் வாழ்வது,தவறுகளை திருத்திக்கொள்வது போன்றவை முக்கியம்.குழந்தையாக இருங்கள் .வாழ்வு எளிதாகும்.

-