Showing posts with label Manorama year book. Show all posts
Showing posts with label Manorama year book. Show all posts

Friday, March 18, 2011

வலைப்பதிவுகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா?

“ ஒரு காலத்தில் அச்சுப்பத்திரிகைகள் மட்டுமே எழுத்துத் துறையில் கோலோச்சிக்கொண் டிருந்தன.எதையேனும் வாசிக்கவேண்டுமெனில் அச்சுப் பத்திரிகைகளையே சார்ந்து இருக்கவேண்டிய சூழல் நிலவியது.இணையம் வந்தபின் அந்த நிலை மாறியது.இணையப் பக்கங்கள் தகவல்களைப் பரிமாற்றும் தளங்களாக உருவெடுக்கத்துவங்கின.பத்திரிகைகளும்,அதன் ஆசிரியர்களும் தரும் செய்திகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை மாறியது.’’

                              மலையாள மனோரமா இவ்வாண்டு வெளியிட்டுள்ள இயர் புக்கில் சேவியர் என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் உள்ள வரிகள்தான் நீங்கள் மேலே படித்த்து.கோட்டயத்திலிருந்து மலையாள மனோரமா பத்திரிகை குழும்ம் 21 ஆண்டுகளாக நல்ல தமிழில் பொது அறிவு தகவல்களை தாங்கி வரும் புத்தகத்தை வெளியிட்டு வருகிறது.தமிழில் பெரும் வரவேற்பு பெற்றதும்கூட.விலை-110 ரூபாய்.


                              வலைப்பதிவுகள் தோற்றம்,தற்போதைய நிலை,திரட்டிகள்,வகைகள் உள்ளிட்ட ஆழமான அலசலை தகவல் யுகம் என்ற தலைப்பில் வலைப்பதிவுகள் கட்டுரை இடம் பெற்றிருக்கிறது.தேடு பொறிகள்,சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரைகளும் சிறப்பானவை.போட்டித்தேர்வு எழுதுபவர்கள் அவசியம் படிக்க வேண்டியது.

                                வலைப்பதிவுகளுக்கு எதிர்காலம் இருக்கிறதா?இல்லையா? என்பதெல்லாம் அதில் இல்லை.முதல் பத்தியை நினைவூட்டுகிறேன்.பத்திரிகைகளுக்கு எழுதுவது பிரசுரம் ஆவதென்பது எளிதல்ல.நன்றாக இருப்பதாக நீங்கள் கருதினாலும்(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு)அவை பிரசுரம் ஆகாமல் போகலாம்.எனக்கு பத்திரிகைகளுக்கு எழுதி பழக்கமில்லை.அதிசயமாக தினமலரில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டுரை பிரசுரமானது.இதுநாள்வரை அதுவே என்னுடைய முதலும்,கடைசியுமான பிரசுரம்.  

                                ஒவ்வொரு பத்திரிகைக்கும் தனித்தனி கொள்கைகள் இருக்கின்றன.அதனோடு ஒத்துப்போகவேண்டும்.பல பிரபலங்களும் தங்களுடைய படைப்புகள் வெட்டப்பட்ட்தற்கு(edit) வேதனைப்பட்டவர்கள் உண்டு.சொல்ல வந்த கருத்துக்களே அடிபட்டு தொடர்பில்லாமல் ஏதாவது வெளியே வரும்.இதற்கு மாற்றாக சுதந்திர ஊடகமாக பார்க்கப்படுவது வலைப்பதிவுகள்.தேவையானபோது நாமே மாற்றிக்கொள்ளலாம்.


                            முதல் பத்தியில் உள்ளது மனோரமா இயர் புக்கில் உள்ள கட்டுரையின் ஆரம்ப வரிகள்.அதில் உள்ள இறுதிப்பத்தியையும் தருகிறேன்.

                            “வலைப்பதிவுகள் இப்போதெல்லாம் அச்சுப் பத்திரிகைகளாலும்,எழுத்தாளர்களாலும்,விமர்சகர்களாலும் கவனமாய் பார்க்கப்படுகின்றன.வலைப்பதிவில் வரும் நல்ல படைப்புகள் அச்சுப்பத்திரிகைகளுக்கு தாவி விடுகின்றன.இதனால் அச்சுப் பத்திரிகைகளை சிலர் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலை மாறிவருகிறது.


                              சி.பி.பற்றிய பதிவின் பின்னூட்ட்த்தில் குறிப்பிட்ட்துதான்.கணினி விற்பனைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்குன்செல்லும்போது பார்க்கிறேன்.டேட்டா கார்டுகள் வேகமாக விற்றுத்தீர்கின்றன.வீட்டுக்குவீடு கம்ப்யூட்டர்கள் வந்துவிடும்.கணினி மூலம் வாசிப்பவர்கள்,தகவல் தேடுபவர்கள் அதிகம் இருப்பார்கள்.

                              வலைப்பதிவுகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பது என்னுடைய கணிப்பு. Copy,paste  சமாச்சாரமெல்லாம் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும்.அரசியலோ,சினிமா விமர்சனமோ,நகைச்சுவையோ,கவிதையோ எதுவாயினும் சுயமான,தரமான எழுத்துக்களுக்கு நல்ல வாழ்வு இருக்கிறது.
-