Thursday, January 13, 2011

காமராஜர், எம்.ஜி.ஆர்.வழியில் ..........

காமராஜரும்,எம்.ஜி.ஆரும் எளிய,ஏழை உள்ளங்களிலும் புகழ் பெற்றவர்களில் முக்கியமானவர்கள்.அவர்களது மங்காத புகழுக்கு காரணம் அனைவரும் அறிந்ததுதான்.அவர்களது தொண்டுள்ளத்தில் முக்கியமான திட்டம் உணவு.காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார்.எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம்.பசித்த வயிறுகளை கவனத்தில் கொண்டோர் என்றும் இறப்பதில்லை.அதுவும் குழந்தைகளின் பசி என்பது கொடூரமான வெளியில் வராத நெருப்பு.பசி வந்திட பத்தும் பறந்து போக கல்வி எங்கே நிற்கும்?

இந்து மத சடங்குகளில் ,பரிகாரங்களில் அன்னதானம் முதலிடத்தை வகிக்கிறது.கோயில் சந்நிதியில் அன்னதானம் செய்வதாக கடவுளிடம் பேரம் பேசுபவர்கள் (வேண்டுதல்) நம்மிடையே உண்டு.பல தோஷ நிவர்த்திகளுக்கு அன்னதானம் பரிந்துரைக்கப்படுகிறது.மற்றவர்களுக்கு உணவளிப்பது நமது பண்பாட்டில் கலந்திருக்கும் ஒரு செயல்.

பெங்களூரு பதிவர் சந்திப்பு பற்றி முன்பே எழுதியிருக்கிறேன்.அக்ஷய பாத்திரம் என்பது பற்றிய பொருள் என்ன என்பது ஒருவர் கேட்டார்.அள்ள அள்ள குறையாத பாத்திரம் என்று விளக்கி மகாபாரதத்தை உதாரணமாக காட்டினார்அந்நிறுவன தலைவர்.நம்மிடையே மணிமேகலையும்,ஆபுத்திரனும் உண்டு.நல்ல விசயங்களுக்கு மற்ற இடத்தில் ஒரு உதாரணம் இருந்தால் தமிழில் இரண்டு உதாரணம் இருக்கிறது.

பசியில் முறைமுகப்பசி(indirect Hunger) என்றொரு வார்த்தை எனக்கு தோன்றுகிறது.உடலுக்கும்,மன நலனுக்கும் தேவையான சத்துக்கள் இல்லாத நிலை.ஏதோ ஒன்றை வயிற்றை நிரப்பினால் மட்டும் போதாது.உயிர்ச்சத்துக்கள்,தாதுக்கள் என நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு மனதிற்கும் உடலுக்கும் அவசியம்.ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் இந்தியாவில் அதிகம்.

அக்ஷய பாத்ரா தொண்டு நிறுவனம்-பெங்களூரு 1,281,664 குழந்தைகளுக்கு பல்வேறு மாநிலங்களில் சத்துணவை வழங்கிக்கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாட்டுக்கு தேவைப்படவும் இல்லை.முதல்வரின் முட்டைகள் முக்கியமானது.மாநில அரசு மான்யங்கள் உள்ளிட்ட நிதியுதவி இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.நன்கொடைகள் எதிர்பார்க்கும் இந்நிறுவனத்தை http://www.akshayapatra.org சென்று பார்க்கலாம்.ஆம்.உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!தமிழர் திருநாளில் நமது பண்பாட்டை நினைவு கூறவே இப்பதிவு.

இதயங்கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் -

2 comments:

பத்மநாபன் said...

//உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!தமிழர் திருநாளில் நமது பண்பாட்டை நினைவு கூறவே // இந்த பொங்கல் திரு நாளில் இனிய சிந்தனையை விதைத்தற்கு நன்றி...

இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துகள்....

shanmugavel said...

உங்களுக்கு நன்றி,பத்மநாபன்.பொங்கல் போல பொங்கட்டும் உங்கள் சந்தோஷம்.