Wednesday, July 17, 2013

குழந்தை வளர்ப்பில் முக்கியமானவை!



லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்கிறார்கள்.எதிரில் நிற்பவன் ஏழை என்று தெரியும்.அவன் கடன் வாங்கித்தான் கொடுக்கவேண்டும்.அடுத்தவன் கஷ்டம் நமக்கு முக்கியமல்ல்! பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.வன்கொடுமைகளுக்கு முடிவில்லை.தங்களது கீழ்த்தரமான ஆசைகளுக்காக உயிர்களைப் பலியாக்குவது பற்றி கவலைப்படுவதேயில்லை.இன்னும் இன்னும் இருக்கிறது.இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள விஷயம் இதுதான் –நாம் சக மனிதனை எந்திரமாகவே பார்க்கிறோம்.நமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டுமென்று கருதுகிறோம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்திரமாக நினைத்துக்கொள்வதில் பிரச்சினை துவங்குகிறது.நான் விரும்பும் படிப்பை படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.தாங்கள் சொல்லும் பையனை,பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.அவர்களுக்கு நல்லது எது என்று எனக்குத்தெரியும் என்பார்கள்.குடும்பங்களைக் கவனிக்கும் பலருக்குத்தெரியும்.பெரும்பாலும் இவையெல்லாம் தந்தையால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். தனது மனைவிக்கு,குழந்தைகளுக்கு மனம் என்று ஒன்று இருக்கிறது என்பது அவர்களுக்கு பொருட்டே அல்ல!

மனத்தினை மறுத்து எந்திரமாக மட்டுமே கருதி வளர்க்கப்பட்ட ஒருவர் சக மனிதனையும் அப்படியே கருதுகிறார்.இன்னொரு மனிதனை புரிந்து கொள்வதில் பிரச்சினை இருக்கிறது.இதன் முதல்படியாக கவனமாக கேட்பது பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.நம்மைச்சுற்றி உள்ளவர்களை புரிந்து கொள்ள அவர்களது உணர்வுகளை நாமும் உணரவேண்டும்.இன்றைய மனிதனின் ஆகப்பெரிய துக்கமெல்லாம் என் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதாக இருக்கிறது.

ஆங்கிலத்தில் empathy என்ற சொல்வார்கள்.தமிழ் அகராதிகளில் சில இடங்களில் பச்சாதாபம் என்று போட்டிருக்கிறார்கள்.கற்பனையாக இன்னொருவரின் உள்ளக்கிளர்ச்சியை உணர்தல் என்று சில இடங்களில் இருக்கிறது.இன்று வளர்த்தெடுக்க வேண்டிய திறமை என்பது இதுதான்.குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு திறமை.I feel how you feel என்று புரிந்து கொள்ளலாம்.கணவன்,மனைவி ஆகட்டும்,பெற்றோர் குழந்தைகள் ஆகட்டும்,நண்பர்கள்,உடன் பிறந்தவர்கள்என எல்லா உறவுகளிலும் இதுவே முக்கியமானது.ஆமாம்,நீங்கள் உணர்வதை நானும் உணர்ந்தால்? பிரச்சினைகளின் தீர்வு இங்கேதான் இருக்கிறது.நம்மால் அப்படி உணரமுடியாமல்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

கற்பனையாக மற்றவர் உணர்வதை உணரும் திறமையை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். அப்படியானால் நாம் கற்பனைவளத்தை குழந்தைகளிடம் உருவாக்கவேண்டும்.ஏழை,எளியவர்களுக்காக பரிந்து பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.அவர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு பேசுகிறார்கள்.சமூகத்தின் பல விஷயங்களை விவாதிக்கிறார்கள்.அவர்கள் எங்கிருந்து அந்த்த் திறமையை பெற்றார்கள்? அவர்கள் பாடப்புத்தகங்களைத்தாண்டி பல்வேறு விஷயங்களை படிக்கிறார்கள்.


Empathy  என்பதை கூடுவிட்டுக்கூடு பாய்வது என்றும் நாம் சொல்லலாம்.நம்முடைய எழுத்தாளர்களை நாம் இப்படி சொல்கிறோம்.அவர்கள் இத்திறமையை எங்கிருந்து பெற்றார்கள்? கவனித்துக்கேட்பதன் மூலமாகவும்,பள்ளிப்படிப்பைத்தாண்டி ஏராளமான நூல்களைப் படித்தும் பெற்றார்கள்.கலை இலக்கியம் தவிர்த்து இத்திறமையை வளர்த்துக்கொள்வது சாத்தியமானதல்ல! பலருக்கு இந்த அனுபவம் இருக்க முடியும்.சினிமா பார்த்து உணர்ச்சிவசப்படுகிறோம்.நடிப்பவரின் துயரத்தில் நாமும் பங்குபெறுகிறோம்.நாவலில் கதை மாந்தர்களின் உணர்ச்சியை நாமும் அனுபவிக்கிறோம்.நிஜத்தில் அப்படி ஒரு சூழ்நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு கதை சொல்வதுதான் முதல்படி.அத்தைகளும் பாட்டிகளும் இதை சிறப்பாக செய்து வந்தார்கள்.இன்றைய சூழல் அப்படி இல்லை.சிறுவர்களுக்கான இலக்கியம்,கலை வளராத சமூகம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.உரிய நேரத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.பாதி கதை சொல்லிவிட்டு மீதி கதையை அவர்களாக உருவாக்கத் தூண்ட வேண்டும்.குழந்தைகள் கற்கும் திறனில் கற்பனை வளம் நல்ல மாற்றத்தைக்கொண்டு வரும்.சென்ற பதிவில் கூறியவாறு கவனித்துக்கேட்கவும்,சக மனிதர்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளும் திறனும் பெற்றுவிட்டால் போதுமானது.எத்தகைய சூழ்நிலையிலும் ஒருவரால் சிறப்பாக இயங்க முடியும்.

ஆனந்த விகடனில் ஒரு வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.சிறுவர்களுக்கு கதை தேடி அலையவேண்டாம். http://www.tamilsirukathaigal.com/
-

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

empathy பற்றி விளக்கம் நன்று... நன்றி...

ராஜி said...

empathy பற்றி முழுமையாய் அறிந்துக் கொண்டேன். நன்றி

கூடல் பாலா said...

சிறந்ததொரு வலைத்தளத்தை அறியச் செய்தீர்கள்....நன்றி!

Dinu DK said...

எனது வலைதளத்தை பிரபல படுத்தியதற்கு நன்றி!

http://www.tamilsirukathaigal.com

இராஜராஜேஸ்வரி said...

அருமையான வலைத்தள அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
இனிய அன்பு நன்றிகள்..!