ஆனந்த விகடனில் வலைப்பதிவுகளில் எழுதிக்குவிப்பதைப் பற்றி
அசோகமித்திரனிடம் கேட்டார்கள்.அவரது பதிலில் ஒரு கேள்வி,’’ஏன் எழுத்தாளராக வேண்டும்? வேறு ஏதாவது ஆகலாமே!’’ அவருக்கு பதில் தெரியாமல் இல்லை.அங்கீகாரம் பெறவே எழுதுவதாக
சொல்கிறார்கள்.எழுதினால்தான் சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்குமா? அப்புறம் ஏன்
பலரும் முகத்தை மறைத்துக்கொள்கிறார்கள்?
மனிதனுக்கு எல்லாவற்றையும் விட தன்னை அறிவாளியாக காட்டிக்கொள்ளத்தான்
பெரிதும் ஆசை.இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நாமே நம்மை அறிவாளியாக நினைத்துக்
கொள்ளலாம்.உன்னிடம் வசதியில்லை என்று சொன்னால் ஒப்புக்கொள்வார்கள்,கார்
இல்லை,பங்களா இல்லை,ஏன் வீரம் இல்லை என்று சொன்னால் கூட
ஒப்புக்கொள்வார்கள்.யாரையாவது உனக்கு அறிவில்லை என்று சொல்லிப்பாருங்கள்,அப்புறம்
இருக்கிறது உங்களுக்கு!
அறிவுக்குறைவை மட்டும்
உண்மையாக இருந்தாலும் ஒருவன் ஏற்றுக்கொள்வதில்லை.இதில் உள்ள இன்னொரு சிக்கல் பலர்
யாரிடமும் தெரியாத்தை கேட்க்க் கூட மாட்டார்கள்.இதுகூட தெரியாதா என்று
கேட்டுவிடுவார்கள் என்ற பயம்.தன்னை விட ஒன்றும் தெரியாதவனிடம் கேட்பார்கள்.அவனும்
எல்லாம் தெரிந்த மாதிரி எதையாவது சொல்வான்.
ஒரு நல்ல தீர்வாக இணையம் வந்து சேர்ந்த்து.தேடினால் பெரும்பாலும்
அதைப்பற்றி கிடைத்து விடுகிறது.கூகுள் புண்ணியத்தில் இப்போது பதிவுகள்.கல்லூரியில்
கையெழுத்துப் பத்திரிகைகளை பார்க்க முடியும்.ஸ்கெட்ச்சில் அழகாக படம் வரைபவர்கள்
வரைவார்கள்,கவிதை எழுதுவார்கள்,கதை,கட்டுரை எல்லாம் இருக்கும்.மாணவர்கள் மட்டும்
மாற்றி மாற்றி படிப்பார்கள்.இதையெல்லாம் எதற்காக செய்கிறார்கள்?
ஏன் எழுதிகிறேன் என்பதற்கு பிச்சமூர்த்தி சொன்ன பதில் எனக்கு மிகவும்
பிடித்துப்போனது.முழுமையான வார்த்தைகள் எனக்கு நினைவில் இல்லை.ஒரு பூண்டு செடி
எதற்காக இருக்கிறது? இயற்கையின் படைப்பில் விஷச் செடியும் இருக்கிறது.பயனுள்ள
கீரையும்,மரங்களும் இருக்கிறது.எந்த ஒன்றும் இன்ன காரணத்திற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது
என்று எப்படி சொல்ல முடியும்?
’’உள்ளே வார்த்தைகள் நிரம்பியிருக்கிறது,வெளிப்படுத்தி ஆக வேண்டும்” மக்சீம் கார்க்கி சொன்னது என்று நினைக்கிறேன்.இப்படியும்
இருப்பதுண்டு.சில நேரங்களில் இதை எழுதியே ஆக வேண்டும் என்று தோன்றிவிடுகிறது.அது
டைரியாக கூட இருக்கலாம்.ட்வீட்டுகளில் கொட்டுவது,ஃபேஸ்புக்கில் பகிர்வது எத்தனையோ
வசதி வந்து விட்ட்து.
எல்லாவற்றுக்கும் மேலாக அங்கீகாரம் என்பது ஒரு முக்கிய விஷயம்தான்.பலர்
இதற்காக கஷ்டப்பட்டு எதையாவது செய்கிறார்கள்.இவையல்லாமல் ஓட்டு,கமெண்ட்,ஹிட்ஸ்
என்று கவலையின்றி எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் அங்கீகாரம் பற்றி நினைக்க
மாட்டார்களா? நினைப்பார்கள்.இது மனிதனுக்கு பொதுவானது.ஆனால் எத்தனை பேர்
பாராட்டுகிறார்கள் என்பதைவிட யார் பாராட்டுகிறார்கள் என்பது முக்கியம்.நிஜமான
அங்கீகாரமும் அதுதான்.


