Tuesday, May 31, 2011

கற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை இவ்ளோதான்!


கிருஷ்ணகிரி அருகே ஒரு கிராமத்தில் நடந்த விஷயம் இது.உறவினர் பெண் ஒருவரை அவரது கணவர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த கோயில் பூசாரி ஒருவர் இரவில் வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.அந்த பெண் சப்தமிட்டு தப்பித்து விட்டார்.

                                                             
நல்ல வேளை அந்த பெண் கல்லாகபோக  யாரும் சாபமிடவில்லை.காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.அதற்குப்பிறகு நடந்த சம்பவம்தான் பெண்ணின் சமூக தகுதி நிலையை நமக்கு உணர்த்தும் ஒன்று.ஆமாம் இந்தியா இது போன்ற கிராமங்களில்தான் வாழ்கிறது.
 

                                                             
கிராமத்தில் பெரியவர்கள் ,முக்கியஸ்தர்கள் எல்லாம் கூடி பஞ்சாயத்து பேசினார்கள்.சினிமாக்களில் வரும் பஞ்சாயத்து போலத்தான்! பூசாரிக்கு 42,000  ரூபாய் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.ச்சே இவ்வளுவுதானாசரி என்ன இருந்தாலும் கோவில் பூசாரி இல்லையா?

                                                               
போகட்டும் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எல்லாம் தனது தொழிலை சமீப காலமாக விட்டுவிட்டார்கள் என்று சொல்கிறார்கள்.ஆனால் மேற்கண்ட விஷயம் கட்டப்பஞ்சாயத்து அல்ல.கிராமங்களில் மரபாக இருந்து வரும் ஒன்று தான்.நீதிமன்றத்தின் மிகப்பழைய வடிவம் இந்த பஞ்சாயத்துக்கள்.
 

                                                             
கிராமங்களில் இரண்டு பேருக்கு அல்லது இரண்டு குடும்பத்துக்கு பிரச்சினை என்றால் அதற்கென்று உள்ள பெரியவரிடம் புகார் கொடுப்பார்.அவர் குறிப்பிட்ட நாளில் பஞ்சாயத்தை கூட்டுவார்.பக்கத்து கிராமங்களில் இருந்து கூட பெரிய மனிதர்கள் அழைக்கப்படுவார்கள்.

                                                              
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்பார்கள்.ஒருவர் பேசும்போது குறுக்கே பேசக்கூடாது என்று அடிக்கடி யாராவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.ஆனாலும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.ஒரு வழியாக இரண்டு தரப்பும் உணர்ச்சியை கொட்டியிருப்பார்கள்.
 

                                                             
தீர்ப்புக்கு இருதரப்பும் கட்டுப்படுவதாக உறுதியளிக்க வேண்டும்.சற்று நேரத்திற்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்படும்.அதன் பிறகு கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டு முக்கியஸ்தர்கள் கொஞ்சம் தூரமாக போய் விவாதிப்பார்கள்.ஊர் மக்கள் ஆவலோடு காத்திருப்பார்கள்.பின்னர் தீர்ப்பு வெளியாகும்.தீர்ப்பை விமசித்துக்கொண்டே ஆட்கள் கலைந்து செல்வார்கள்.

                                                              
கிராமங்களில் வழங்கும் இந்த தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் கஷ்டம்.ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடவும்,ஒத்துழைப்பு இல்லாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.ஆனால் இன்றும் இப்படியெல்லாம் சாத்தியம் என்பதுதான் புரியவில்லை.
-

Monday, May 30, 2011

அமாவாசையில் சுபகாரியம் செய்யலாமா? கூடாதா?


                                அமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வதை கேட்டிருக்கிறேன்.ஆனால் மிகத்தாமதாமாக இதைக் கேள்விப்பட்டேன்.எனக்கு தெரிந்து எங்கள் வீட்டிலோ,ஊரிலோ அமாவாசை நாளில் சுபகாரியங்களை செய்யாமல் தவிர்ப்பதை பார்த்திருக்கிறேன்.

                                 அமாவாசை மட்டுமல்ல அதற்கு அடுத்த தினத்தில் எந்த நல்ல செயல்களையும் செய்யமாட்டார்கள்.வெறும்வானம் என்பார்கள்.திருவண்ணாமலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் வீட்டுக்கு முன்பணம் கொடுக்கப்போனபோது இன்று அரைமுட்டை அதனால் நாளை கொடுங்கள் என்றார் உரிமையாளர்.

                                  ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு மாதிரி அழைத்தாலும் அமாவாசைக்கு அடுத்த தினம் மட்டும் ஆகாத தினமே!இது எங்கும் இருக்கும் நம்பிக்கை.பஞ்சாங்களில் அது பிரதமை திதி.அமாவாசையும் ஒரு திதிதான்.மாதந்தோறும் ஏற்படும் நிகழ்வு.இரண்டு தின்ங்களும் பெரும்பான்மையோருக்கு முக்கியமானவை.

                                   வானியல்படி சூரியனுக்கும்,சந்திரனுக்கும் பூமி இடையில் வரும் நாள் தான் அமாவாசை.சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டுவிடுவதால் கண்ணுக்கு தெரிவதில்லை.சூரியனின் ஒளி பட்டே சந்திரன் பிரகாசிக்கிறது.இது அறிவியல்.அமாவாசை எப்போது ஏற்படும் என்பதை பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும்.

                                   தலைப்புக்கான விஷயத்துக்கு வருவோம்.பல்வேறு சுபகாரியங்களை குறிப்பிட்ட திதிகளில் செய்யலாம் என்று பஞ்சாங்கம் சொல்கிறது.அதில் அமாவாசை திதி எந்தவொரு நல்ல செயல்களுக்கும் குறிப்பிடப்படவில்லை.ஆனால் சில பகுதிகளில் நல்ல நாளாக தெரிவு செய்தார்கள் என்பது விளங்காத ஒன்று.


                                   சந்திரன் மறைந்திருக்கும் நாள் என்பதால் சந்திரனுக்கு உரிய விஷயங்கள் பாதிப்புக்குள்ளாகத்தான் செய்யும்.மனமும் உடலும் சந்திரனுக்குரியவை.எனவே மனநிலையும் உடல்நிலையிலும் பாதிப்புகள் இருக்க வாய்ப்பிருக்கிறது.அன்றைய தினம் எப்படி நல்ல காரியங்களை தொடங்குவது சரியாக இருக்கமுடியும்?

                                   தவிர்க்க முடியாத சமயங்களில் இதையும் சொல்ல கேட்டிருக்கிறேன்.அமாவாசையில் செய்தாலும் செய்யலாம் வெறும்வானத்தில்(அடுத்த நாளான பிரதமையில்) செய்யக்கூடாது! வேறு வழியில்லாத நேரத்தில் செய்தாலும் செய்யலாம் என்பது அமாவாசையில் மேற்கொள்ளலாம் என்று உருவாகிவிட்ட்து என்று தோன்றுகிறது.

                                   சந்திரன் நல்ல நிலையில் அமையப்பெற்ற ஜாதகம் உள்ளவர்கள் ,உச்சம் பெறும் ரிஷபம்,ஆட்சி வீடான கடகத்தில் ஜனித்தவர்கள் ,இவற்றோடு குரு போன்ற சுபர் பார்வை பெற்றவர்கள் அமாவாசை தினத்தில் சுப காரியம் செய்தால் அதிக பாதிப்பு இருக்காது என்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

                                   முன்னோர்களை வணங்குதல்,கோயிலுக்கு செல்வது ஆகியவையே மரபாக இருந்துவரும் ஒன்று.அமாவாசை நல்ல நாள் என்பது இப்போது ஏற்பட்ட ஒன்று என்றே தோன்றுகிறது.எனக்கு தோன்றும் ஒரு விஷயம் நல்லவர்களுக்கு எல்லா நாளும் நல்ல நாளே!

-

Sunday, May 29, 2011

ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா?


  வாரத்துக்கு ஒருநாளேனும் வெளியில் சென்று சாப்பிடும் பழக்கம் இப்போது அதிகரித்து வருகிறது.குடும்பத்தில் இருவரும் வேலையில் இருப்பவர்கள் என்றால் எல்லா நாளும் சமைப்பது சிரமமாக இருப்பதாக சொல்கிறார்கள்.இன்னொன்று சுவைக்காக ஒரு சேஞ்சுக்காக சாப்பிடுவது.எப்படியோ இந்தப்பழக்கம் அதிகரித்து வருகிறது.

                                                             நடுத்தரமான ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வந்த தந்தையிடம் அவரது குழந்தை " அப்பா கையெல்லாம் கருப்பாயிடுச்சி" என்றான் சாதாரணமாக! அப்பாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை."வீட்டில் போய் கழுவிக்கொள்ளலாம் வாடா" என்றார் .


                                                             பையன் கையெல்லாம் கருப்பாக காரணம் அவன் துடைத்த நியுஸ் பேப்பர்.அதில் உள்ள ஆபத்து தந்தைக்கு தெரியவில்லை.கையில் உள்ள காரீயம் மூளை வளர்ச்சியிலிருந்து ,நரம்பு மண்டலம்,உடலியக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கடுமையாக பாதிக்கக்கூடியது.

                                                             பெரும்பாலான உணவகங்களிலும் பழைய நியூஸ் பேப்பர்களை கையைத்துடைக்க கிழித்து வைத்திருக்கிறார்கள்.அதில் துடப்பவர்களே அதிகம்.சாப்பிட்டுவிட்டு கையை கழுவியவுடன் ஈரக்கையில் துடைப்பதால் வேதிப்பொருட்கள் உடலுக்கு செல்வதை தவிர்க்க முடியாது.

                                                             உணவகங்களில் கையத்துடைக்கத்தான் என்றில்லை.சாலையோரங்களில் ,பலகார கடைகளில் வடை,பஜ்ஜி,போண்டா உள்ளிட்ட உணவுப்போருட்களுக்கும் பழைய செய்தித்தாள்களையும்,சஞ்சிகைகளையுமே பயன்படுத்துகிறார்கள்.எண்ணையுடன் சூடாக இருப்பதால் அதிக காரீயத்தை உறிஞ்சி நம் உடலுக்குள் சேர்க்கிறது.

                                                            போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இப்படி ஏராளமான பழக்கங்கள் நம்மிடம் இருக்கின்றன.கையைக்கழுவி விட்டு துடைக்காமல் உலர்த்துவதே சரியான முறை.பொதுமக்கள் நலன் கருதி அச்சிட்ட தாள்களை உணவு வைத்து வழங்கவும்,கையைத்துடைக்க உணவகங்களில் வைக்கவும் சுகாதாரத்துறை தடை செய்ய வேண்டும்.பல்வேறு உடல் நல பிரச்சினைகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.

                                                             தற்போது மாம்பழ சீசன் .மாம்பழங்கள் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதை கண்டறிந்து டன் டன்னாக ஆங்காங்கே கொட்டி அழிக்கப்படுகிறது.விரைவாக பழுக்க வைத்து விற்று பணம் பார்ப்பதற்காக வியாபாரிகள் மக்கள் நலனை மறந்து விடுகிறார்கள்.

                                                            கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் பழங்கள் வயிற்றுப் பிரச்சினையை உடனடியாக கொண்டு வரும்.குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களும் உண்டு.பழங்கள் வாங்குபவர்கள் பழக்கப்பட்ட கடையிலேயே வாங்குவது நல்லது.இயற்கையாக பழுத்த பழங்களில் சீராக மஞ்சள் நிறம் இருக்காது.பலத்தின் சில பகுதிகள் பச்சை நிறத்தில் இருக்கும்.கல் வைத்து பழுக்க வைத்தால் இயல்பான ருசி இருக்காது.தெரியாத இடத்தில் வாங்கினால் முடிந்தவரை தோலை தவிர்த்து விடவும்.

கணவன் மனைவி ஜோக் ஒன்று.மனைவி கேட்டார் ,"டியர் இன்று என்னுடைய பிறந்த நாள் !நான் இதுவரை பார்க்காத இடத்துக்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் " 

கணவர்:வா டியர் நாம கிச்சனுக்கு போகலாம்.

-

Friday, May 27, 2011

குடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்

இன்றைய சூழலில் படித்த அனைவருக்கும் பாதுகாப்பான அரசு வேலை கிடைப்பது சாத்தியமில்லை.தனியார் துறையும் மாத சம்பளத்திற்கு எல்லோருக்கும் வேலை கொடுத்துவிட முடியாது.ஏதேனும் சொந்தமாக தொழில் துவங்கி முன்னேறுவதே வழி.திருமணமான ஆண்கள் இத்தகைய முயற்சி எடுப்பதை பெண்கள் ஆதரிப்பதில்லை.

                            ’’இங்கு வரும் பெண்களில் பெரும்பாலானோர் எதிர்மறை சிந்தனை(Negative thinking) கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் சுய தொழில் துவங்க ஆலோசனை வழங்கும் நண்பர் ஒருவர்.பெண்கள் திரும்பத்திரும்ப நஷ்டம் ஆகி விட்டால் என்ன செய்வது?என்பதையே அதிகம் கேட்கிறார்கள். ஒரு உதாரணத்தையும் கூறினார்:


                                                                                              சாதாரண அரசுப்பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றவரின் மகன் அவர்.படிப்பு,தந்தை சொத்து இவ்ற்றை வைத்து திருமணமும் ஆகி விட்ட்து.ஒரு தனியார் கம்பெனியில் வேலையில் இருந்தார்.நாளாக நாளாக வருமானம் போதவில்லை.இப்போது தந்தையும் இல்லை.

                             சில லட்சங்கள் கையில் இருந்த்து.சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான எதிர்பார்ப்புகள்.திறமையான ஆள்.எவ்வளவோ முயற்சி செய்தும் அவர் மனைவி தொழில் துவங்க மறுத்து விட்டார்.அவர் மனைவி சொன்ன காரணம் எதற்கு ரிஸ்க் என்பதுதான்.
                      இதை பாதுகாப்பு உணர்வு என்று சொல்ல முடியாது.எதையும் பாசிடிவ்வாக எண்ணாமல் இருப்பதுதான்.எத்தனையோ பேர் தொழில் துவங்கி இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.அவர்களில் பெண்களும் உண்டு.அவர்களை உதாரணமாக கொள்ளாமல் அவநம்பிக்கையுடன் சிந்திப்பது குடும்பத்திற்கு மட்டும் அல்ல,நாட்டிற்கும் இழப்புதான்.

                        சுயமாக தொழில் துவங்குவது போன்ற ரிஸ்க் எடுக்கும்போது உடனிருப்பவர்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவு தேவை.கூட்டுக்குடும்பங்கள் மறைந்து போனதன் கெடு பலன்களில் இது முக்கியமானது.தைரியம் சொல்லவும்,புரிந்து கொள்ளவும் இப்போது யாரும் இல்லை.மனைவி மட்டுமே உடன் இருக்கிறார்.அவரும் அவநம்பிக்கையுடன் இருக்கிறார்.

                            பொதுவாகவே பெண்கள் ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் பாதுகாப்பான நிலையையே தேர்ந்தெடுப்பார்கள் என்கிறார்கள்.சுயமாக தொழில் துவங்கி முன்னேறிய பெண்களுக்கு பின்னணி நல்ல விதமாக இருக்கலாம். இதில் விதிவிலக்கு இருக்கவும் வாய்ப்புண்டு.பெண்களுக்கு தைரியத்தையும்,தன்னம்பிக்கையையும் கற்றுத்தராமல் ஜாக்கிரதை,ஜாக்கிரதை என்றே சமூகம் சொல்லிக்கொண்டிருக்கிறது.


                             பெண்களிடம் எதிர்மறை சிந்தனையை தொலைக்காட்சித்தொடர்கள்தான் வளர்த்துக்கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.ஒரு தன்னம்பிக்கை தரும் நூல்  நல்ல முயற்சிகளை,எண்ணங்களை ஏற்படுத்துவது போல சீரியலகள் நஞ்சை மனதில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன.அவற்றில் மோசமான திருப்பங்களையும்,சோகங்களையுமே பார்க்கும் மனம் புதிதாக துவங்கும் எந்த முயற்சியையும் நெகடிவ்வாகவே பார்க்கும்.இது ஒரு மோசமான நிலை.பெரும் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.

-

Thursday, May 26, 2011

உங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா? தெரிந்து கொள்வது எப்படி?

உள்ளம்.கிட்ட்த்தட்ட உங்கள் வாழ்க்கை அதுதான்.மனம் நலமுடன் இருந்தால் மட்டுமே வாழ்வும் இனிதாக இருக்கும்.இது பல்வேறு காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது.பலருக்கும் உள்ளம் பிரச்சினையாக இருப்பது வெளியில் தெரிவதில்லை.மனம் என்றவுடன் அதன் சீர்கேடு மன நோய்தான் என்று  நினைப்பது தவறு.

                                ஒருவருடைய எண்ணங்கள்தான் அவருடைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது.தான் வளர்ந்து வந்த சூழல்,பழகிய உறவுகள்,கற்றுக்கொண்ட விஷயத்துக்கேற்ப எண்ணங்கள் உருவாகின்றன.வெற்றியையும்,தோல்வியையும் தீர்மானித்து உங்கள் வாழ்க்கையை முடிவுசெய்வது இவைதான்.


                                                                      சிலர் எப்போதும் எதைப்பற்றியாவது புலம்பிக்கொண்டிருப்பார்கள்.இவர்கள் மனம் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள் அல்ல.ஒருவர் தன்னைப்பற்றி நல்லவிதமாக உணர்ந்தால் அவர் மனம் நலமாக இருப்பதாக கொள்ளலாம்.நன்றாக சிந்தித்து வெற்றிகரமான செயல்களை செய்யக்கூடியவராகவும் இருப்பார்.புலம்புபவர் பைத்தியம் என்று அர்த்தமல்ல!அவருக்கு ஆலோசனை தேவை.

                               தன்னை சார்ந்த அனைவருடனும் நல்ல உறவுகளை பேணுவது நலமான மனதிற்கு இன்னொரு அடையாளம்.இனிய உறவுகளில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.பொறாமை,கோபம் போன்ற உணர்ச்சிகளை கையாளத்தெரியாதவர்கள் உறவுகளை இழந்து விடுகிறார்கள்.

                                 ஆரோக்கியமான மனதுள்ள ஒருவர் மாற்றங்களுக்கு தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்கிறார்.கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போங்க! என்பது இதுதான்.ஆனால் புரிந்து கொண்டு மாற்றிக்கொள்ளவேண்டும்.வேறு வழியில்லாமல் தன்னை மாற்றிக்கொண்டால் அது மனதில் தங்கி பிரச்சினையை ஏற்படுத்தும்.

                                 வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள்,கஷ்டங்கள் இயல்பானவை.தவிர்க்க முடியாதவை.இழப்புகள்,தோல்விகள் அனைவருக்கும் பொதுவானது.நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை.ஆனால் நலமான உள்ளத்தை பெற்றிருக்கும் ஒருவர் அதை வெற்றிகரமாக சமாளிக்கிறார்.முடியாதவர் மனச்சோர்வுக்கு ஆளாகி,தூக்கமிழந்து துன்பங்களில் வீழ்கிறார்.

                                  தன்னம்பிக்கையுடன் ஒருவர் தன்னைப்பற்றி நல்ல விதமாக நினைத்தால் அவர் நல்ல மன நலம் பெற்றவர் என்று சொல்ல்லாம்.தன்னம்பிக்கை உள்ளவர் எல்லவற்றிலும் வெற்றியடைகிறார்.தோல்விகளும்,கடந்தகால கசப்பான அனுபவங்களுமே ஒருவரது தன்னம்பிக்கை இழக்க காரணமாக அமைந்து விடுவதுண்டு.ஆரோக்கியமான உள்ளம் படைத்தவர் மாட்டிக்கொள்வதில்லை.

                                  ஒருவருடைய கஷ்டங்களில்தான் அவரது உண்மையான மன நலத்தை அறிய முடியும்.அதை எப்படி சமாளிக்கிறார் என்பதை பொருத்து அவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.பெரும்பாலான நேரங்களில் மகிழ்ச்சியுடன் இருப்பது,படுத்தவுடன் தூங்கிவிடுவது போன்றவை மனம் ஆரோக்கியமாக இருப்பதன் அடையாளம்.மற்றவர்களுக்கு ஆலோசனையோ,சிகிச்சையோ தேவைப்படும்.
-

Tuesday, May 24, 2011

அடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது?


அலுவலகத்தில்,வீட்டில் மற்றும் சில இடங்களில் காட்ட முடியாத கோபத்தை வேறெங்கோ வீசி எறிகிறோம்.கோபம் அமிலம் போன்றது.யாரோ நம்மைவிட எளியவர்கள் பாதிக்கப்படுவது பற்றி நாம் கவலைப்படுவதில்லை.அடக்கிவைப்பதும் ஏதோ ஒருநாள் வெடிக்கவே செய்யும்.வெளியே கொட்டும்வரை உடலையும்,மனதையும் அரித்துக்கொண்டே இருக்கும்.முகம் மாற, உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

                         ஒருவர் தனது குழந்தையை கடைத்தெருவில் போட்டு அடித்துக்கொண்டிருந்தார்.அவருடைய பையன் தான்.சுமார் எட்டு வயது இருக்கும்.அவ்வளவு பெரிய குற்றம் எதுவும் செய்திருக்க வாய்ப்பில்லை.எவர் ஒருவரும் உலகில் எந்த உறவையும் விட தனது குழந்தைகளை நேசிக்கிறான்.இருந்தும் ஏன்?

                         எல்லா நேரங்களிலும் ஒருவர் இப்படி நடந்து கொள்வதில்லை.ஏதேதோ சிக்கல்கள்.போராட்டங்கள் எங்கோ காட்ட வேண்டிய கோபம்.எரிச்சல்.அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.சாதாரண சளி பிடித்தால் கூட எரிச்சலான மன நிலையில் இருப்பது பற்றி நினைத்தேன்.?

                                 கோபம் ஒரு இயல்பான உணர்வு.இயலாமையில்,எதிர்பார்ப்புகள் சிதறும்போது சூழ்நிலைகளில் ஏற்படுவதைவிட,வலியவர்களிடம் வெளிப்படுத்த முடியாத கோபம் கொடுமையானது.பல நேரங்களில் நம் மீது கோபப்படும்போது நம்மை அவர்கள் நேசிக்கவில்லை என்று நினைத்து விடுகிறோம்.அதிகமாக பாதிக்கப்படுகிறோம்.

                            தண்ணீர் குடிப்பது,ஒன்றிரண்டு எண்ணுவது,இடத்தை விட்டு வெளியேறுவது ,வேறு எண்ணங்களை விட மனிதர்களையும்,கோபத்தையும் புரிந்து கொள்வது சரியானது.உங்கள் கோபத்தை எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா?ஏனென்று? எனது கோபம் சரியானதா? ஏன் நான் கோபப்பட்டேன்?கோபத்தை புரிந்துகொள்வதே அதை வெல்ல சரியான வழி.

                                 நம்மைப்போலத்தான் மற்றவர்களும்.தவிர,மனிதர்கள் எப்போதும் ஒரே மன நிலையில் இருப்பதில்லை.மாத விலக்கு நாட்களில் பெண்களின் மனநிலையில் மாற்றம் இருக்கலாம்.உடல்நலம் இல்லாதபோது சிடுசிடுவென்று இருக்கலாம்.ஏமாற்றங்கள்,தோல்விகள் போன்றவையும்,இயலாமையும் தன் மீதோ,மற்றவர்கள் மீதோ கோபத்தை தூண்ட்த்தான் செய்கின்றன.

                                விலங்குகளுக்குக் கூட கோபம் உண்டு.ஏன் கடவுளுக்கும் உண்டு.ஆனால்,சிந்திக்கத்திறன் பெற்ற மனிதன் அதை மேலாண்மை செய்ய முடியும்.ஏற்கனவே நமக்கு கோபத்தால் ஏற்பட்ட இழப்புகளை நினைத்துப்பார்த்தால்,தொடர்ந்து அதன் தீமையைப் பற்றி எண்ணிவந்தால் மனம் பக்குவமடைந்துவிடும்.

                                 நியாயமான கோபமும் இருக்கத்தான் செய்கிறது.அநீதிக்கு எதிரான கோபம் தேவையானது.கோபம் உள்ளிட்ட உணர்வுகளுக்கு சிந்திக்க துவங்குவதுதான் வெளியே வர சரியான வழி.சிந்திப்பது மூலம் நம்மையும் பிறரையும் பாதிக்காமல் காத்துக்கொள்வது சாத்தியம்தான்.மனிதர்கள் அனைவருக்கும் சிந்திக்கும் திறன் இருக்கிறது.

-

Monday, May 23, 2011

துயரம் மனிதனை கவர்வது ஏன்?


மைனா திரைப்படத்தில் ஏன் பிரபு சாலமன் நாயகனையும்,நாயகியையும் சாகடித்து துயரமான முடிவைத்தந்தார்?ஏன் சந்தோஷமாக வாழ விடவில்லை? உலகின் மிகச்சிறந்த இலக்கியங்கள் துயரச்சுவை கொண்டவையாக உள்ளன.(ஷெல்லி என்று நினைக்கிறேன்).ஏன்?துயரம் மனிதர்களுக்கு பிடித்துப்போகிறதா?அதில் என்ன ஆனந்தம் இருக்கிறது?துக்கத்தில் மனிதன் தன்னை உணர்கிறானா?அல்லது பிரபஞ்சம் பற்றிய சிந்தனையில் விழுந்து உழல்கிறானா? துயரம்தான் மனிதனை மனிதனாக பார்க்கச்செய்கிறதா?


துக்கத்தில் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்.கடவுளை நிந்திக்கிறான்.அல்லது அடி மனதிலிருந்து கெஞ்சுகிறான்.கோரிக்கை வைக்கிறான்.சமாதானத்தை தேடுகிறான்.சிலர் குழந்தையை போல ஆகி விடுகிறார்கள்.ஏதேனும் போதையை தேடி ஓடுகிறார்கள்."நடப்பதெல்லாம் நன்மைக்கே" "எல்லாம் கடவுள் செயல்""முன் ஜென்மத்தில் செய்த பாவம்"-ஏதேதோ சமாதானங்கள்.கடவுள் ஏன் கருணையின்றி இருக்கிறார்?

கோமல் சுவாமிநாதன் சுபமங்களா பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார்.நான் அதன் வாசகனாக இருந்தேன்.எனக்கு தமிழின் சமகால இலக்கியம் பற்றி ஓரளவு அறிமுகம் கிடைத்தது.சுந்தர ராமசாமியின் நாடகம் ஒன்றை படித்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதினேன்.அஞ்சல் அட்டையில் எழுதிய கடிதம்.நாடகத்தை பற்றி சிலவரிகள் எழுதிவிட்டு கொஞ்சமும் தொடர்பில்லாமல் இதை எழுதினேன்."துயரமான முடிவைக்கொண்ட கலை இலக்கியங்களே உலகின் சிறந்த இலக்கியமாக திகழ்கிறது "என்று சொல்லப்படுகிறது.உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் கடவுள் படைக்கும் இலக்கியம்தானே உலகம்? அவரது படைப்பு மட்டும் எப்படி துயரம் இல்லாமல் இருக்கும்?


நான் எதிர்பார்க்கவில்லை! சில தினங்களில் சுந்தர ராமசாமி அவர்களிடமிருந்து அஞ்சல் அட்டை வந்திருந்தது.அதில் இருந்த வரிகள் "அந்த வரிகள் என்னைக்கவர்ந்தன.உங்களுக்கு சில பத்திரிக்கைகளையும்,சஞ்சிகைகளையும் அனுப்புகிறேன் ".எனக்கு இரண்டு காலச்சுவடு பிரதிகளை அனுப்பியிருந்தார்.முக்கியமான அறிமுகம்.ஒருநாள் நேரில் சந்திக்க நினைத்திருந்தேன்.முடியாமலேயே போய்விட்டது.

நாம் ஏதேதோ காரணங்களை தேடுகிறோம் அவ்வளவுதான்.ஏனென்று தெரியாமலேயே எல்லாவற்றையும் அனுபவித்து ஆகவேண்டும்.ஜோதிட நண்பன் இன்னொரு காரணம் சொன்னான்.குரு நல்ல கிரகம்.ஐந்து இடங்களில் தான் நல்லது செய்வார்.ஏழு இடங்களில் நல்ல பலன்கள் இல்லை.சனி மூன்று இடங்களில் தான் நல்லது செய்வார்.குரு சுக்கிரன்,புதன் நல்ல கோள்கள்.சந்திரன் வளர்பிறையில் நல்லவர்.சனி,செவ்வாய் சூரியன்,ராகு கேது என்று மற்ற கிரகங்கள் பொதுவாக நல்லதாக இல்லை.எனவே உலகில் நன்மை குறைவுதான்.அவர் வழியில் இது ஒரு காரணம்.

கலை,இலக்கியங்கள் துயரங்களை சொல்வது மூலம் நம்மை மென்மையாக்குகின்றன.மற்றவர்களை புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது.உதவும் மனப்பான்மை உருவாகிறது.மனிதர்களாக அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.நண்பர்களின்,உறவினர்களின் துயரங்களில் நாம் முழுமையாக உதவுவோம்.


-

இந்தியா-பாலியலும் பரிதவிப்பும்


                               இன்னும் பாடபுத்தகங்களில் அப்படித்தான் இருக்கிறது.இந்தியக் கலாச்சாரம் பெருமை வாய்ந்த்து.அது ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம்.உலகில் வேறெங்கும் இல்லாத பெருமைதான்.ஆனால்,உலகம் நம்மை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்ட்து! ஏன்?

                               ஓரினச்சேர்க்கையாளர்களை புரிந்து கொள்ளவேண்டும் என்றார்கள்.தொண்டு நிறுவன்ங்கள்,சமூக சேவையாளர்கள் அவர்களும் மனிதர்கள் தான் என்றார்கள்.அதில் தவறில்லை என்றார்கள்.அரசாங்கமும் அப்படியே சொல்கிறது.மனித நேயம் வளர்ந்துவிட்ட்து.கடந்த பத்தாண்டுகளாகத்தான் இதெல்லாம்! போகட்டும் ஏன் இப்படி?


                                பெண் பாலியல் தொழிலாளர்களை கைது செய்ய வேண்டாம் என்று காவல் துறை அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள்.அவர்களுக்காக வாதாடுவதற்கு சமூக சேவை அமைப்புகள் போட்டியிடுகின்றன.அரசாங்கம் அவர்களுக்கு ஆணுறையும்,பெண்ணுறையும் வழங்குகிறது.முன்னுரிமை அளித்து மருத்துவ வசதிகள் செய்து தருகின்றன.

                                 அப்படியென்ன அவர்கள் நாட்டுக்கு செய்தார்கள் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? அவ்ர்கள் வேறு வேலை செய்யலாம்! சீச்சீ தானே? ஆனால் அவர்களுக்கு ஆணுறை வழங்குவதன் மூலம் அரசாங்கம் பாலியல் தொழிலை ஊக்குவிக்கிறதா? அல்லது மனித நேயமா? என்ன பண்பாடு இதெல்லாம்? போகட்டும் ஏன் இப்படி?

                                ஆம்.இனிமே அப்படித்தான்! நீங்கள் அபச்சாரம் என்றாலும்,சீச்சீ என்றாலும்,வெட்க்க்கேடு என்றாலும் இனிமே அப்படித்தான்! நீங்கள் ஆள்வோரை மாற்றினாலும் அவர்களும் செய்துதான் ஆக வேண்டும்.வேறு வழியில்லை.மனிதநேயம் எல்லோருக்கும்தானே இருக்கிறது.

                                 அரசுகளுக்கு இருக்கும்போது சாதரண குடிமகன் நான் எனக்கு மட்டும் இருக்க்க்கூடாதா என்ன? நானும் பரிவைத்தூண்டும் வகையில் பெண் பாலியல் தொழிலாளியின் வாக்குமூலம்,ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றி வசீகரமான தலைப்பு வைத்து(நன்றி,சி.பி) ஒரு பதிவு என்று எழுதினேன்.இதுவும் போகட்டும்!

                                  அநேகமாக 2004 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன்.முன்னாள் அமெரிக்க அதிபர் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள நான்கு விஷயங்களை குறிப்பிட்டார்.மற்ற மூன்றை விட்டுவிடுவோம்! அதில் ஒன்றுதான் மேற்கண்ட மன மாற்றங்களுக்கெல்லாம் காரணம்.அது எய்ட்ஸ்.

                                  ஆம்,உலகம் இந்தியாவைப் பார்த்து கேலி செய்து சிரித்த்து,ஒருவன் ஒருத்தி கலாச்சாரத்துடன் வாழும் நாடு அதிக எய்ட்ஸ் நோயாளிகளை கொண்டுள்ள உலகில் இரண்டாவது பெரிய நாடு! என்னே நம் பெருமை! இத்தனைக்கும் பாலுறவு மூலம் எய்ட்ஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு 0.1 சதவீதம்தான்.ஆனால் இந்தியாவில் 85 சதவீதம் செக்ஸ் மூலமேபரவுகிறது.கொஞ்சம் யோசித்தால் நம்மவர்களின் நடவடிக்கைகளை புரிந்துகொள்ள முடியும்.

                                                                           சரி,கிளிண்டன் சொன்ன வார்த்தைகள் சரியா? ஆமாம்.இந்தியா மூழ்கிப்போகும் என்றுஅஞ்சிய காலம் அது.வேகமாக பரவிக்கொண்டிருந்த்து எய்ட்ஸ்.எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு செய்யும் செலவு குறைந்த பட்சம் ஒருமாத்த்திற்கு ஆயிரம் ரூபாய்.இது மருந்துகளுக்கான செலவு மட்டும்.இவை தவிர மறைமுக செலவுகள் ஏராளம்.

                               இந்தியாவில் உள்ள எச்.அய்.வி.யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களுக்கு வாழ்நாள் முழுக்க மருந்துகள் தரப்படவேண்டும்.பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்களை இழந்து நிற்கிறார்கள்.லட்சங்களில் விதவைகள்.கட்டுப்படுத்தபடாமல் விட்டிருந்தால் மோசமான நிலையை சந்தித்திருக்கும் இந்தியா!அதன் வல்லரசுக்கனவு சிதறியிருக்கும்.பரவிக்கொண்டிருக்கும் இக்கிருமியை கட்டுப்படுத்த அதன் மூலத்தை தேடினார்கள்.

                               பாலியல் தொழிலாளர்களையும்,ஓரினச்சேர்க்கையாளர்களையும் தேடிப்போனார்கள்.அவர்களுடன் நல்லுறவு கொண்டார்கள்.அவர்களை புரிந்து கொண்டார்கள்.அவர்கள் மீது பரிவு வளர்ந்த்து.அவர்களும் மனிதர்களே என்ற நேயம் துளிர்த்த்து.அது வரை அவர்கள் உலகம் இருட்டில் இருந்த்து.அவர்களை புரிந்துகொண்டு அன்பு செலுத்தப்பட்ட பின்பு அவர்களூம் ஒத்துழைக்க ஆரம்பித்தார்கள்.

                               ரொம்ப தாமதமாகவே இந்தியா விழித்துக்கொண்ட்து.எண்பதுகளில் எய்ட்ஸ் பற்றிய பேச்சுக்கள் வந்தபோது நமது கலாச்சாரம் ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரம்.நாம் அதைப்பற்றி கவலைப்பட்த்தேவையில்லை என்ற கருத்து நம்முடைய ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட்து.ஓரளவு உண்மைதான்.ஆனால் முழுதும் உண்மையல்ல!

                               சரியான புரிந்துணர்வு இல்லாத்தால் நம்மால் உரிய நடவடிக்கை எடுக்கமுடியாமல் போனது.இன்று எச்.அய்.விக்காக செலவு செய்து கொண்டிருக்கும் பல்லாயிரம் கோடிகளை வேறு திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தியிருக்க முடியும்.இன்னும் நமக்கு புரிதல் தேவைப்படுகிறது.

-

Sunday, May 22, 2011

மத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா?

  மற்றவர்களோடு ஒப்பிட்டே நம்மை மதிப்பிடுகிறோம்.பக்கத்து வீட்டுக்காரர்கள் ,நண்பர்கள் ,உறவினர்கள் இவர்கள் தான் நம்முடைய அளவுகோல் .நானும் அவனும் ஒண்ணா படிச்சோம் ,ஆனா அவன் சொந்தமா வீடு வாங்கிட்டான்.அவனுக்கு நேரம் நன்றாக இருக்கிறது.மனைவி வீட்டில் பக்கபலமாக இருக்கிறார்கள்.எனக்கு அப்படி இல்லையே! .இப்படி புலம்புபவர்கள் ஏராளம்.இவை பலருக்கும் இயல்பாக இருக்கும் ஒன்று.மிகச்சிலருக்கு பெரிய பிரச்சினையாகவும் இருக்கும்.

                                                                                  தொடர்ந்து வீட்டில் இருப்பவர்களும்( குறிப்பாக மனைவி) குத்திக்காட்ட ஆரம்பிக்க வளர்ந்தவர்கள் மீது பொறாமையும்,தன் மீது கோபமும் ,எரிச்சலும் உருவாகி பலர் தன்னை தாழ்த்தி மதிப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.நான் எதற்கும் உபயோகமில்லாதவன்,திறமையில்லாதவன் என்ற எண்ணங்கள் அதிகமாகி தன்னைத்தானே வெறுக்கத் துவங்குவார்கள்.எதிலும் நம்பிக்கையில்லாமல் போய் தாழ்வு மனப்பான்மையால் குறுகிப்போவார்கள்.


                                                         தொடர்ந்து ஏதேனும் தோல்வியை சந்திப்பவர்கள்,எதிர்பாராத துயரம் ,நோய்,அவமானம்  போன்றவற்றிற்கு ஆளானால் தன்னை தாழ்த்தி மதிப்பிடுவதும் அதைத் தொடர்ந்து அறிவுக்குப் பொருந்தாத எண்ணங்களும் உருவாகும்.சுய மதிப்பு குறைவு என்பது மேலும் மன நிலையை சிக்கலாக்கும்.

                                                         முதுகலை பட்டதாரி இளைஞர் அவர்.பையன் படித்திருக்கிறான்,நல்ல வேலைக்கு போய்விடுவான் என்று உறவினர் ஒருவர் பெண் கொடுக்க, திருமணமாகி ஒரு குழந்தையும் ஆகிவிட்டது.அரசாங்க வேலை அவரது கனவாக இருந்தது.தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தார்.ஆனால் அது லேசில் ஆகிற காரியம் இல்லை.

                                                         சம்பாதிக்காத வேலையில்லாத கணவன் மீது அவ்வளவாக மனைவிக்கு பிடிப்பில்லாமல் போய்விட்டது.தன் வயதைவிட இரண்டு வயது குறைவான இளைஞரை காதலித்து அந்த பையனுடன் ஒரு நாள் கிளம்பிப்போய் விட்டார்.மனைவி இன்னொருவருடன் ஓடிப்போனபின்னால் குழந்தையை வைத்துக்கொண்டு ! அவரது சூழ்நிலையை நினைத்துப்பாருங்கள்.


                                                         இம்மாதிரி நேரங்களில் நம்பிக்கை தருபவர்களை விட கேலி செய்பவர்களே அதிகம்.அவனுக்கு என்ன குறையோ? என்னவோ ? என்பவர்கள்தான் அதிகம்.அவமானம்,வேதனை.!என்னவெல்லாம் உணர்ந்திருப்பார்? தன்னைப்பற்றியே அவருக்கு வெறுப்பும்,கோபமும் ,குறைந்த சுய மதிப்பும் ஏற்படத்தான் செய்யும்.

                                                        மோசமான மனநிலையில் இருந்திருந்தால் அவரது வாழ்க்கையும் மோசமாகவே முடிந்திருக்கும்.ஆனால் முன்னேற்றத்தில் இன்னும் தீவிரமாக அக்கறை காட்டி அவர் அடுத்த அரசுத்தேர்வில் அரசு அதிகாரியானார்.ஓடிப்போன மனைவி அந்த இளைஞன் வீட்டாரால் அடித்து துரத்தப்பட்டார்.அரசு அதிகாரி விவாகரத்து வாங்கிக் கொண்டு வேறு திருமணமும் செய்து கொண்டுவிட்டார்.


                                                            எத்தனையோ சூழ்நிலைகளில் நம்மைப்பற்றி நாமே குறைத்து நினைக்கும் சூழ்நிலைகள் அமைந்து விடுகின்றன.மனம் தளராமல் அதை தாண்டவேண்டும்.உபயோகமற்றவராக நினைக்கும்போது ,உங்களையே தாழ்வாக நினைக்கும்போது கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்.உங்களை யாராவது எப்போதாவது பாராட்டியிருப்பார்கள்.எதற்காகவாவது புகழ்ந்திருப்பார்கள்.பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும் அவற்றை நினைவுக்கு கொண்டுவாருங்கள்.உங்கள் மனம் மீண்டு வரும்.

                                                             ஓய்வான நிலையில் உங்களுக்கு நீங்களே சில நல்ல கருத்துக்களை உங்கள் மனதிற்கு கொடுப்பது (auto suggestion) நல்ல விளைவுகளை தரும்.உங்களை நீங்கள் பெருமையாகவே நினையுங்கள்.நீங்களே நினைக்காவிட்டால் மற்றவர்கள் எப்படி நினைப்பார்கள்.ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்களே! யாருடனும் ஒப்பிடத்தேவையில்லை.
-

Friday, May 20, 2011

கர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்ச்சி ரிப்போர்ட்

தெரிந்த மருத்துவர் ஒருவரை பார்க்கப்போயிருந்தேன்.வழக்கத்துக்கு மாறான கூட்டம்.அவரது துணைவியார் மகப்பேறு மருத்துவர்.அன்று வெளியூர் சென்றுவிட்டதால் பெண்களின் சாதாரண பிரச்சினைகளுக்கும் அவரே சேர்த்து பார்த்துக்கொண்டிருந்தார்.

                                         என்னை பார்த்துவிட்டவர் அழைத்தார்."இவர்களிடம் கொஞ்சம் பேசிப்பார் 'என்றார்.கிராமத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள்.ஒரு இளம்பெண்ணும்,அவரது பெற்றோரும் இருந்தார்கள்.தாய் மட்டும் அதிக பதற்றத்துடன் காணப்பட்டார்.


                                         மருத்துவர் உங்களிடம் பேசச் சொன்னார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு "என்ன பிரச்சினை?'' என்றேன்.தாய் ஆத்திரத்துடன் பேச ஆரம்பித்தார்.''வாயே திறக்க மாட்டேங்கிறா! இவ யார் தலமேலயாவதுதூங்கும்போது  கல்ல தூக்கி போட்டுடுவா! நான் என்ன பாவம் பண்ணேனோ !ஏன் வயித்துல வந்து பொறந்திருக்கு!நாங்க வாழறதா?சாகறதா?எப்படியாவது கலைச்சிட சொல்லுங்க சார்!"

                                       பெண் கர்ப்பமாக இருக்கிறார்.திருமணமாகவில்லை.பதினேழு,பதினெட்டு வயது இருக்கும்.சாதாரண விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள்.கருவை கலைப்பதற்காக வந்திருக்கிறார்கள்.எத்தனை மாதம் தெரியாது.அது ஸ்கேன் செய்து பார்த்துதான் முடிவு செய்யவேண்டியிருக்கும்.பெண் வாயை திறக்க வில்லை.

                                     கர்ப்பத்திற்கு காரணமானவர்கள் தெரிந்தால் ஒருவேளை அவருக்கே திருமணம் செய்து வைத்து விடலாம்.சட்ட உதவியை நாடலாம்.ஆனால் அந்த பெண் சொல்லவிரும்பவில்லை.அதிகம் கவலையாக இருந்தது போல் தெரியவில்லை.


                                       பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு நான் பேசிப்ப்பார்த்தேன்."என்னை எதுவும் கேட்கவேண்டாம் .எனக்கு எதுவும் தெரியாது! "என்றார்.'நீங்கள் சொல்லும் தகவல் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும் ,வெளியே யாரிடமும் சொல்ல மாட்டோம்.உங்கள் பெற்றோருக்கு கூட சொல்ல மாட்டேன்' என்றேன்.மீண்டும் அவரது பதில் உறுதியாக இருந்தது."எனக்கு தெரியாது"

                                        தோல்வியுடன் மருத்துவரை பார்த்து சொன்னேன்."சார் ,வேலைக்காகவில்லை." புன்னகையுடன் அவர் கூறியது,"அடிக்கடி இப்படி யாராவது வருவார்கள்.இங்கே கருக்கலைப்பு செய்வதில்லை! என்றாலும் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இது போன்ற பலரும் வாயைத் திறப்பதில்லை என்பதுதான் முக்கியமான விஷயம்."


                                         அவரே அடுத்துக் கூறினார் "இப்படி வந்த ஒரு பெண் எங்களிடம் மட்டும் உண்மையை கூறியபோது அதிர்ந்து போய்விட்டோம்.சமூகம் திருமண உறவை அனுமதிக்காத உறவினர்களால் ஏற்பட்ட கர்ப்பம் அது! இந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு நிலை இருக்கலாம்" என்றார்.கர்ப்பத்துக்கு காரணமானவர்களை திருமணம் செய்துகொள்ள முடியாது.அப்படிப்பட்ட உறவுகள்.

                                           குழந்தைகள் நெருங்கிய உறவினர்கள் தெரிந்தவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாவது பல்வேறு ஆய்வுகளில் வெளிவந்த ஒன்றுதான்.கன்னிப் பெண்களுக்கும் இவை இருந்து கொண்டிருக்கிறது.சத்தமில்லாமல் கலைக்கப்பட்டுவிடும்!பெற்றோர்,பெண் மற்றும் அதற்கு காரணமானவன் தவிர சமூகத்துக்கு தெரிவதில்லை.
-

Thursday, May 19, 2011

சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?-இரண்டு.

முந்தைய பதிவு படிக்காதவர்கள் கீழே கிளிக் செய்து படிக்கவும்.
                           சரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி?-1
                                                                            உங்கள் உடல் பருமனை கணக்கிடுங்கள்.உங்கள் எடையை உயரத்தின் மீட்ட்ர் ஸ்கொயரால் வகுத்தால் பருமன் (body mass index) கிடைக்கும்.உதாரணமாக உங்கள் எடை 50 கிலோ,உயரம் 1.5மீ என்று வைத்துக்கொள்வோம்.50/1.5*1.5.என்று கணக்கிட்டால் BMI-22.


                                                       .22  முதல் 26 வரை இருந்தால் சரி.அதிகமாக இருந்தால் நீங்கள் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள்.தேவைப்படும் கலோரியை விட குறைவாக உண்ண வேண்டும்.அதே சமயம் உடலுக்கு அன்றாட தேவையான உயிர்ச்ச்த்துக்கள் மற்றும் தாதுக்கள் (vitamins and Minerals) கிடைக்கவேண்டும்.


                      சாதம் ,சப்பாத்தி,தோசை,இட்லி போன்ற உணவு வகைகளை குறைத்துக்கொண்டு பழங்கள் ,கீரை,காய்கறிகள் அதிகம் சேர்க்கவேண்டும்.இவற்றில் மேற்குறிப்பிட்ட சத்துக்கள் கிடைக்கும்.உடற் பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.ஒவ்வொருவருக்கும் தேவையான அளவு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

                              22க்கும் கீழ் இருப்பவர்கள் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் மிதமான வகையில் இவை அதிகரிக்க வேண்டும்.அதிகம் உண்பதே பழக்கமாகி சாப்பிடாமல் இருக்க முடியாத நிலை ஏற்படக்கூடாது.அதிக கலோரி உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும்.


                              குழந்தைகளுக்கு சிறுவயது முதலே எதை சொல்லித்தருகிறோமோ இல்லையோ உடல் நலம் பேணுவது குறித்து கற்பிப்பது நல்லது.சிறு வயது பழக்கம் என்பது நீடித்து இருக்க கூடியது.வாழ்நாள் முழுக்க அவர்களூக்கு உதவும்.

                              சில ஆண்டுகளுக்கு முன்பு யுனிசெஃப் நிறுவனம் மூலமாக அயோடின் உப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தினார்கள்.பள்ளிக் குழந்தைகளை வீட்டிலிருந்து உப்பு எடுத்துவரச்செய்து ஸ்டார்ச் விட்டு யாருடைய வீட்டு உப்பில் அயோடின் இருக்கிறது ,யாருடையதில் இல்லை என்று காட்டினார்கள்.கூடவே அதன் அவசியமும் தெரிவிக்கப்பட்ட்து.


                                குழந்தைகள் அன்றிலிருந்து கடையில் அவர்களாகவே போய் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.பெற்றோருக்கு குழந்தைகள் விவரித்தார்கள்.சில தின்ங்களிலேயே சாதாரண உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பு அனைத்து கிராமங்களிலும் விற்பனைக்கு வந்து விட்ட்து.குழந்தைகளிடம் ஏற்படுத்தும் விழிப்புணர்விற்கும்,பழக்கத்திற்கும் பலன் அதிகம்.
-