Saturday, December 11, 2010

ஓநாயும் வீட்டு நாயும் -பாரதி


ஓநாய்:- ஹே சகோதரா,நான் உன்னைச்சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்.எனக்குத் தயவு செய்து விடைகள் அளிப்பாயா?

வீட்டு நாய்:-அடா ஓநாயே,நாம் நம்முடைய அந்தஸ்துக்கு குறைவான எந்த நாயோடும் சினேஹம் பாராட்டுவதில்லை.ஆயினும்,உன் மேல் நம்மையறியாமலே நமக்குப்பிரீதி ஏற்படுகிற படியால் நீ கேட்கும் கேள்விகளுக்கு ஜவாப் சொல்ல சம்மதித்தோம்.

ஓநாய்:-ஐயா,உம்முடைய அந்தஸ்தென்ன?நீ வசிக்கும் இடமெங்கே?இக்காட்டிற்கு வந்த காரணமென்ன?உமக்கு இவ்வளவு சுகமான வாழ்க்கை எங்கனம் ஏற்பட்டது?

வீட்டுநாய்:-நாம் உக்கிரேச பாண்டியநிடத்தில் இருக்கிறோம் அவர் நமக்கு ராஜோபசாரஞ் செய்து வருகிறார்.நமக்கும் அவரிடத்தில் பக்தியுண்டு.நம்மை அவர் மற்றெந்த நாய்களைக்காட்டிலும் மேலாக மதித்து வருகிறார்.

ஓநாய்:-அண்ணா,என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?காற்றிலும் மழையிலும் வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியிருக்கிறது.பசியின் கொடுமையை சகிக்க முடியாததாய் இருக்கிறது.

வீட்டுநாய்:-தம்பி,உன்னுடைய ஊழ் வினைப்பயனை நீயே அனுபவித்து தீர வேண்டும்.பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனாய் நமக்கு இப்போது இப்பதவி கிடைத்தது.

ஓநாய்:-நாயாரே,நானும் உக்கிர சேனனின் நட்பை நாடி வரலாமா?சுக துக்கங்களே சமரசமாய் இருந்தால் மாத்திரமே இவ்வுலக வாழ்வு சகிக்கத்தக்கது.என்னுடைய கஷ்டகாலத்திற்கும் ஓர் வரை வேண்டும்.

வீட்டுநாய்:-நல்லதப்பா,என் கூட வா.

இருவரும் சம்பாஷித்துக்கொண்டே வழி நடந்தார்கள்.திடீரென்று ஓநாய்க்கு ஒரு சமுதாயம் தோன்றிற்று.பகதூரின் கழுத்தைச்சுற்றி அகலமான தழும்பு இருந்தது.ஓநாய் அதைப்பார்த்தவுடன் ஒரு கேள்வி கேட்டது.

ஓநாய்:-பகதூர்,உமது கழுத்தில் அவ்வளவு பெரிய தடம் படக் காரணமென்ன?

பகதூர்(வீட்டு நாய் ):-ஓ,அது ஒன்றுமில்லை.எனக்குக் கழுத்தில் தங்கப்பட்டை போட்டிருந்தது.அதன் தடம் தெரியலாம்.

ஓநாய்:-அந்தப் பொன் பதக்கம் எங்கே? நீர் ஏன் அதைப் போட்டுக்கொண்டு வரவில்லை.

பகதூர்:-என்னை வெள்ளி சங்கலியால் கட்டும் பொழுதுதான் அதை என் கழுத்தில் போடுவார்கள்.

ஓநாய்:-உம்மை ஏன் கட்ட வேண்டும்?யார் கட்டுகிறார்கள்?

பகதூர்:-என்னுடைய எஜமானன் என்னைக் கட்டுவார்.அவரைப் பார்க்க வரும் மனிதர்கள் என்னைக் கண்டு அஞ்சாதிருக்கும்படி என்னைக் கட்டி வைப்பார்.

ஓநாய்:-தூ! பிரஷ்டப்பயலே!என்னை நீ ஏமாற்றப் பார்த்தாய்.உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா?நீ ஒரு அடிமையாய் இருந்தும் மெத்த ஜம்பமாய் பேசினாய்;நான் சுதந்திரப்பிரியன்.எனக்கு எஜமானனும் இல்லை.சங்கிலியும் இல்லை.கஷ்ட வாழ்வாய் இருப்பினும் நான் சர்வ சுதந்திரன்.யதேச்சையாய் எங்கும் செல்வேன்.எதையும் தின்பேன்.எதையும் சொல்வேன்.எவரோடும் சேர்வேன்.பராதீனம் பிராண சங்கடம்.ஒருவருடைய ஆக்கினைப்படி வரவோ,போகவோ,உண்ணவோ,உறங்கவோ,மலம் ஜலம் கழிக்கவோ சம்மதித்து இருப்பவன் மகா நீசனாய் இருக்க வேண்டும்.

இவ் வார்த்தைகளைக் கேட்ட பகதூர் வெட்கமடைந்து திரும்பிப் பாராமல் ஓடிப்போய்விட்டது.

-பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட பாரதியார் கட்டுரைகளிலிருந்து.
-

No comments: