Showing posts with label drugs. Show all posts
Showing posts with label drugs. Show all posts

Wednesday, December 7, 2011

மாத்திரைகளும் மனிதர்களும்


பலசரக்கு கடைகளில்,காய்கறி கடைகளில் நிற்கும் மக்கள் கூட்ட்த்தை விட அலை மோதுகிறார்கள்.சமீப காலமாக மருந்துக்கடைகள் நிரம்பி வழிகின்றன.முன்பெல்லாம் மருத்துவமனை,மருத்துவர் அருகில் இருந்தால்தான் ஃபார்மஸி விற்பனை இருக்கும் என்று நம்பினார்கள்.இப்போது அப்படியில்லை.
                              தானாகவே மாத்திரை பெயர் சொல்லி வாங்குபவர்களும்,தொந்தரவை சொல்லி வாங்கிக் கொள்பவர்களும் அதிகரித்து விட்டார்கள்.இது தொடர்பாக எனது முந்தைய பதிவுகள்  மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார் மற்றும் உடல்நலம்-உயிரைக்குடிக்கும் பழக்கங்கள். அலோபதி கடைகள் என்றில்லாமல் சித்தா,ஆயுர்வேத மருந்துகளும் சக்கைப்போடு போடுகின்றன.
                              எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.உறவினர் ஒருவருக்கு சரியாக தூக்கம் வருவதில்லை என்று மருத்துவரிடம் போனார்.அவரும் மாத்திரைகள் கொடுத்தார்.அப்புறம் மருத்துவரிடம் போகாமலே கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்திருக்கிறார்.ஒரு கட்ட்த்தில் மாத்திரை இல்லாவிட்டால் தூக்கமில்லை என்ற நிலை வந்து விட்ட்து.
                               வீட்டில் இருப்பவர்கள் மிகத் தாமதமாகவே இதை அறிந்திருக்கிறார்கள்.மீண்டும் மருத்துவரிடம் அழைத்துப்போய் விஷயத்தைச்சொன்னால் பழைய மருந்து சீட்டு அல்லது மாத்திரை அட்டை ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.பரிந்துரை சீட்டு கிடைக்காவிட்டாலும் மாத்திரை அட்டையை கொண்டுபோய் காட்டினார்கள்.
                                மாத்திரையை பார்த்தவுடன் மருத்துவருக்கு புன்னகை.அது தூக்கத்தை வரவழைக்கும் மாத்திரை அல்ல! ஆனால் வலி நிவாரணி.உடலில் ஏதோ வலி இருப்பதாக சொன்னதால் இது தூக்கத்திற்கு என்று காட்டி அப்போதைக்கு கொடுத்துவிட்டார்.வலி நிவாரணியை அதிகம் பயன்படுத்துவது ஆபத்தானது.சிறுநீரகம் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்.
                               இப்படி இன்று நிறைய பேர் இருக்கலாம் என்று தோன்றுகிறது.தூக்கத்திற்கு என்றில்லாமல் உடல்வலி,வயிற்றில் அமிலம் சுரத்தல் என்று மாத்திரை போட்டால்தான் ஆகிறது என்று ஆகிவிட முடியும்.மாத்திரைகளுக்கு அடிமையான நிலைதான் இது.சில உடல் நலக்குறைவுகளுக்கு தொடர்ந்து மாத்திரை உட்கொள்பவர்கள் மனதளவில் இப்படி ஆகிவிடுவதுண்டு.
                                இம்மாதிரியான நிகழ்வுகளில் மாத்திரைகள்தான் மீண்டும் பரிந்துரைப்பார்கள்.படிக்காத ஆளாக இருந்தால் வைட்டமின் மாத்திரைகளை கொடுப்பார்கள்.விஷயம் தெரிந்த படித்தவராக இருந்தால் அதற்கும் மாத்திரை இருக்கிறது.சிலரை ஏமாற்ற முடியாது.அவர்களுக்கு ஆலோசனைதான் தீர்வு.
                                மருந்துக்கடைகளில் அலைமோதும் கூட்ட்த்தில் மேலே சொன்னவாறு இருக்கவும் வாய்ப்புள்ளது.நம் குடும்பத்திலோ,தெரிந்தவர்களோ யாரேனும் இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள்.ஒரே மாத்திரையை மீண்டும் மீண்டும் நாமாகவே வாங்கிப் பயன்படுத்துவது பிரச்சினையை வளர்க்கும்.
-

Tuesday, April 26, 2011

உடல் நலம் :உயிரைக் குடிக்கும் பழக்கங்கள்


                                                           படித்தவர்களுக்கு கிராம மக்கள் பரவாயில்லை என்று சில நேரங்களில் தோன்றும். கிராம மக்களிடம் உடல் நலன் குறித்த மூட பழக்கவழக்கங்கள் ஏராளம் இருந்ததுண்டு.சில இடங்களில் இன்னும்கூட இருக்கிறது.உடல்நலம் சரியில்லாவிட்டால் கடவுளிடம் போவது,சடங்குகள் செய்வது என்று ஆரம்பித்து விடுவார்கள்.இல்லாவிட்டால் பாட்டி வைத்தியம்.

                                                                             கல்வி அறிவற்று மரபு சார்ந்து செய்து வந்த விஷயம்.இவர்களை விட படித்தவர்களின் பழக்கங்கள் கொடூரமாக இருக்கிறது.தெரிந்த விஷயம்தான் .இன்னமும் பலர் கைவிடாத ஒன்று.ஒரு புத்திசாலி தனது குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று கடையில் சில மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்.

                              காலையில் தூங்கி எழுந்த போது மனைவி அந்த தகவலை சொன்னார்.பையனுக்கு அம்மை போட்டிருக்கிறது.வீட்டில் விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள்.அம்மன் கோயிலுக்கு சென்றார்கள் .பக்தி அதிகமாகிவிட்டது.வீடெங்கும் பக்தி மணம்.அன்று மாலையே குழந்தை பேச்சுமூச்சில்லாமல் ஆகி விட்டது.மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள் .

                                பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதை அறிவித்தார்.மருத்துவர் அறிகுறிகளை பார்த்துவிட்டு விசாரித்ததில் தெரிய வந்த விஷயம்.- சிறுவனுக்கு உடலில் ஏற்பட்டது அம்மை அல்ல! கடையில் வாங்கி வந்த மாத்திரைகளால் ஏற்பட்ட ஒவ்வாமை (அலர்ஜி ).மாத்திரைகள் சிறுவன் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

                                 சிலருக்கு சில மாத்திரை ,மருந்துகள் உணவுப் பொருட்கள் ஒத்துக் கொள்ளாது.காலாவதியான மருந்துகளாலும் இத்தகைய இழப்புகள் நேரலாம்.உடனே மருந்தை நிறுத்தியிருந்தாலாவது உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.மாத்திரை கொடுப்பதைய்ம் நிறுத்தவில்லை.இன்னமும் பெட்டிக்கடைகளில் மாத்திரைகள் விற்கும் பழக்கமும் ,அதை வாங்கி செல்வோரும் குறையவே இல்லை.

                             தான் பணம் சம்பாதிப்பதற்காக உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.அதிலும் படித்தவர்கள் ஏதோ ஒரு மாத்திரை பெயரை தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.இன்னொரு பழக்கம் இருக்கிறது.சென்றமுறை உடல்வலி ,காய்ச்சலுக்காக மாத்திரை வாங்கி வந்த சீட்டு இருக்கிறது.இப்போது மனைவிக்கு உடல்வலி ,காய்ச்சல் என்றால் அந்த சீட்டை காட்டியே மாத்திரை வாங்கி வந்துவிடுவார்கள்.இதுவும் தவறுதான். 

                              அடுத்ததாக கர்ப்பிணிப்பெண்கள் .எந்த சூழலிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுய மருத்துவம் பேராபத்தில் முடியும்.பலருக்கு கருக்கலைந்து போவதற்கு காரணமே தெரிவதில்லை.கிராமப்புற பெண்கள் பலருக்கு இறந்து பிறத்தல்,முடமாக பிறத்தல் போன்றவற்றிற்கு இப்படிப்பட்ட சுய மருத்துவமும் காரணமாக இருக்கலாம் என்ற அனுமானம் இருக்கிறது.

                               யாருக்குமே இந்த பழக்கம் நல்லதல்ல !சோம்பேறித்தனமும்,சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனமும் ,அதி புத்திசாலித்தனமும் தான் இதற்கெல்லாம் காரணம்.உடல் நலனைத்தவிர முக்கியமானது எதுவும் இல்லை.அதை நாம் உணர்வதும்,மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் நல்லது.

                                                          
-