Showing posts with label society. Show all posts
Showing posts with label society. Show all posts

Tuesday, December 23, 2014

நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு

நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக பணம் கொடுக்க ஆள் வேண்டும்.பெண் கொடுப்போர் எடுப்போர் எல்லாம் நாலு பேரை விசாரிக்காமல் முடிவு செய்ய மாட்டார்கள்.யாரும் எனக்குத் தேவையில்லை என்று தூக்கி எறிந்து  விட முடியாது.


பணக்காரர்களுக்கு பணத்தை வீசி எறிந்தால் எல்லாம் வரும்.தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயம் நடுத்தர வர்க்கத்துக்கு அதிகம்.அலுவலகத்தில் சம நிலையில் உள்ளவர்கள்,கீழ்நிலையில் உள்ளவர்களைத்தான் தனிமைப்படுத்த முடியும்.அதிகாரியை தனிமைப்படுத்த  முடியாது.பணமும் அதிகாரமும் எல்லாவற்றையும் கொண்டுவந்து விடுகிறது. 

நடுத்தர வர்க்கத்துக்கு உறவுகள் வேண்டும்.அவர்களுடைய பலமும் அதுதான்.என் நண்பன் ஒருவனுக்கு இருபது வயதில் திருமணம் நடந்தது.அவனுக்கு வேறு  கனவுகள் இருந்தன.சொந்தக்காரப் பெண்ணை கல்யாணம் முடிக்கவேண்டும் என்று சிறு வயதிலேயே இரண்டு வீட்டிலும் முடிவு செய்து விட்டிருந்தார்கள்.அவன் தீர்மானமாக மறுத்துப் பார்த்தான்.


ஒரு நாள் அவனுடைய உறவினர்கள் அத்தனைபேரும் கூடி விட்டார்கள்." நாங்களெல்லாம் உனக்கு வேண்டாம் என்றால் உன் விருப்பம் போல செய்!'' என்றார்கள்.சொத்து பத்து கிடைக்காது என்றார்கள்.அடுத்து என்ன வேலை செய்ய வேண்டுமென்று அவர்களே முடிவு செய்தார்கள்.அவனது திறமைகளையும் கனவுகளையும் அந்த சமூகம் தின்று விட்டது.

மனிதன் சமூக விலங்கு என்று அரிஸ்டாட்டில் சொன்னார்.மனிதன் இயல்பு தவறும்போது இடித்துரைப்பது சமூகம்தான்.சமூகக் கட்டுப்பாடுகளுக்குப்  பொருந்திப் போக வேண்டும். திட்டுவது,கேவலமாகப் பேசுவது,தனிமைப்படுத்துவது என்று தண்டனைகள் கிடைக்கும்.சட்டம் தன் கடமையைச் செய்யக்கூடும். 


எப்போதோ படித்த கதை ஒன்று .விட்டில் பூச்சிகள் விளக்கைத் தேடிச்சென்று சிக்கி மடிந்து போகும்.ஒரு விட்டில் பூச்சி மட்டும் வானத்தில் உள்ள நிலாவை நோக்கி பறக்க ஆரம்பித்தது.உடனிருக்கும் அத்தனை பூச்சிகளும் தடுத்தன.அந்த நாலுபேரை(?) மதிக்காமல் பறக்க ஆரம்பித்தது.மேலேமேலே உற்சாகத்துடன் பறந்து சென்றது.நிலவை அடைய முடியாவிட்டாலும் அதிக சந்தோஷத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தது.

பூச்சிக்கு சரி மனிதனுக்கு சாத்தியமா?நாலு பேரை ஒதுக்கிவிட்டு முன்னேறிச்செல்வது அத்தனை எளிதா?
-

Tuesday, March 22, 2011

பாலியல்,பெண் மற்றும் சமூகம்


                               தமிழ் செய்தித்தாள்களில் பலவற்றுக்கு முன்னோடி தினமணி.நான் முதன் முதலில் பணம் கொடுத்து வாங்கிப் படித்த செய்தித்தாளும் அதுதான்.தந்தி,தினமலர் தேநீர் கடைகளில் படிப்பேன்.இப்போது பத்தாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகளுக்கு மாதிரி வினா-விடைகள் பெரும்பாலான தினசரிகளில் வெளிவருகின்றன.நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது தினமணியில் மட்டுமே வரும்.

                               மாதிரி வினா-விடைகளுக்காக வாங்க ஆரம்பித்து பிறகு தினமணி என்னோடு ஒன்றிப்போனது.தலையங்கமும்,அதே பக்கத்தில் வெளியிடப்படும் கட்டுரைகளும் என்னை ஈர்த்த்து.படிப்பதை விடமுடியாமலும் ஆகிவிட்ட்து.சமூகம் சார்ந்த மதிப்பீடுகளை என்னிடம் உருவாக்கியதில் தினமணிக்கு முக்கிய பங்குண்டு.சமூகப் பிரச்சினைகள் பலவற்றை நான் பகிர்ந்து கொண்டேன்.


                                அடுத்த்தாக பெண்.எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.போதையில் கத்தியை தூக்கிக் கொண்டு துரத்தும் கணவனுக்கு பயந்து எங்கள் வீட்டில் தஞ்சம் புகுந்த பெண் எனக்கு சிறுவயதில் அதிர்ச்சியையும்,அவர் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்தினார்.தொடர்ந்து நான் எந்திரம் போல வாழும் பெண்களையே அதிகம் பார்த்தும்,சிந்தித்தும் வந்திருக்கிறேன்.


                               நகரத்தில் எங்கோ சிகரெட் பிடிக்கும் ஒரு பெண்ணை பார்த்துவிட்டு இதுதான் பெண் என்று நினைப்பது அறியாமை.எல்லாவற்றிலும் விதிவிலக்கு உள்ளது போலத்தான் இவை.தினமணியை முன்னோடி என்று சொன்னேன்.எனக்கு தெரிந்து மகளிர் தினத்துக்காக முதன் முதலில் மகளிர் மலர் வெளியிட்ட்தும் தினமணியே!தற்போது தனது தளத்தில் வலைப்பூக்களுக்கு இடம் ஒதுக்கியதயும் குறிப்பிடலாம்.


                                கள்ளக்காதல்,பாலியல் தொல்லை,மூடநம்பிக்கைகள் என்று பாலியல் பற்றிய பதிவுகளை எழுதி வந்திருக்கிறேன்.தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் ஏராளமான மனிதர்களை சந்தித்தேன்.பாலியல் தொழிலாளர்கள் உள்பட.முக்கியமான தனி மனித பிரச்சினைகள் பாலியல் தொடர்பானவையே என்று நம்புகிறேன்.இதைப் பற்றி விரிவாக வரும் காலங்களில் பேசலாம்.

                                நான் பகிர்ந்து கொண்டவற்றில் பெரும்பாலானவை பெண்,சமூகம்,பாலியல் பற்றியவை என்பதால் அதற்கான காரணங்களை குறிப்பிட்டேன்.சென்ற ஆகஸ்ட் மாத்த்தில் வாரத்திற்கு ஒரு பதிவு எழுதலாம் என்று ஆரம்பித்து இன்று நூறு பதிவுகள் ஆகி விட்ட்து.


                                முதல் பதிவு சோதனை பதிவு.பாரதியின் வரி,தலைப்பின் கீழே இருக்கிறது.தொடர்ந்து எழுதலாம் என்று நினைத்து எழுதிய முதல் பதிவும் பாரதியார் கவிதைகள் பற்றியது.கருத்துரை இட்டவர் கேபிள் சங்கர்.சுமார் ஒரு வாரம் கழித்தே கவனித்தேன் என்று நினைக்கிறேன்.ஏற்கனவே வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இப்போதும் எனக்கு ஆச்சரியம்தான்.அவர் வேறெங்கும் கமெண்ட் போட்ட்தை நான் அதிகம் பார்த்த்தில்லை.இது ஒரு நல்ல உதாரணமும்கூட.புதியவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பது முக்கியமானது.அவருக்கு நன்றி தெரிவிக்க இது ஒரு வாய்ப்பு.

                               ஜோதிஜி, உண்மைத்தமிழன்,ரஹீம் கஸாலி ஆகிய பிரபலங்கள் நான் அவர்களுடைய தளத்துக்கு செல்லும் முன்னரே தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள்.அங்கிதவர்மாவின்(பாண்டிச்சேரி வலைப்பூ,இப்போது தமிழ்ச்சரம்) விருது,ஜோதிஜியிடமிருந்து எப்போதாவது வரும் மின்ன்ஞ்சல் போன்றவை உற்சாக டானிக்.

                                வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியவர் ரஹீம்கஸாலி.அதற்கு சில தின்ங்கள் முன்புதான் வலைச்சரம் பற்றியேதெரியும்.தமிழ்மணம் இருபதுக்குள் வந்த்தற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு மெயில் வந்த்து.அந்த வார இருபதில் பார்த்துதான் வலைச்சரம் சென்று ஃபாலோயராக சேர்ந்தேன்.இது என்னுடைய பதிவுலக ஞானத்திற்கு ஒரு உதாரணம்.


                                இண்ட்லி,தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி ஆகிய திரட்டிகளுக்கு நன்றி என் பயணத்தில் பங்கு கொண்டமேற்குறிப்பிட்ட அனைவருக்கும் நன்றி.தங்களது கருத்துரையாலும்,வாக்குகளாலும் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் இக்பால்செல்வன்,மதுரை சரவணன்,ரஹீம்கஸாலி,கருன்,தம்பி றஜீவன்,துளசி கோபால்,தமிழரசி,ஜனா,சாகம்பரி,சீனா அய்யா,சங்கர் குருசாமி,சி.பி,சதீஷ்குமார்,பாரத்..பாரதி,மனோ,ஜோதி(jothi) மற்றும் விடுபட்ட அனைவருக்கும்,பின் தொடர்பவர்களுக்கும்,வாசகர்களுக்கும் என்னுடைய உள்ளம் கனிந்த நன்றி.

                                எழுதிவைத்த்தை இரண்டு நாளில் வரிசையாக வெளியிட்டுவிட்டேன்.மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாளில்தான்.வலைப்பதிவு துவக்கினேன்.இன்று நூறாவது பதிவு எழுதவேண்டுமென்பதற்காக தினம் இரண்டு பதிவு.தேர்தல் முடியும்வரை தினமும் எழுத முடியுமாவென்று தெரியவில்லை.இருந்தாலும் முயற்சி செய்வேன்.மீண்டும் அனைவருக்கும் நன்றி.

-

Sunday, February 6, 2011

வக்கிர ஆண்களால் பெண்கள் படும்பாடு


இன்றைய சூழலில் பணியிடங்களில் ஆண்,பெண் இருபாலரும் நட்புடனோ,நட்பின்றியோ பழகுவது தவிர்க்க முடியாத ஒன்று.உடன் பணி புரிகிறவர்கள் அத்தனை பேரும் நல்ல குணத்துடன் இருப்பார்கள் என்பது சாத்தியமல்ல.வக்கிர ஆண்களிடம் சரியான விழிப்புணர்வின்றி அல்ல்ல்படும் பரிதாபம் பெண்கள் மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினை.

பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியிருந்த்து.புதிதாக பணிக்கு சேர்ந்தார்.ஏழெட்டு பேர் மட்டும் பணிபுரியும் இடம்.இரண்டுபேர் மட்டும் பெண்கள்.புதிய ஊர்.பல தகவல்கலுக்கு யாருடைய உதவியாவது தேவைப்படும் சூழ்நிலை.அலுவலகத்தில் இருப்பவர்கள்தான் இத்தகைய நிலையில் உதவ முடியும்.

அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியன் ஒருவன் தாராள குணத்துடன் இருந்தான்.அவளுடைய அதிர்ஷ்டம் பலருக்கும் ஓடி ஓடி உதவிகள் செய்தான்.எல்லா தகவல்களும் அவனிடம் இருந்த்து.அவனுடைய உதவியால் புதிய இட்த்து வாழ்க்கை மிக எளிதாக இருந்த்து.அவளது கணவனுடனும் நண்பனாகி விட்டான்.

சிறிது காலம் கழித்து அவனது நோக்கம் வேறாக இருப்பது அந்தப் பெண்ணுக்கு புரியத் துவங்கியது.அலுவலகத்தில் இருந்த இன்னொரு பெண்ணும் அதை உறுதி செய்தார்.நோக்கத்தை தெரிந்து கொண்டபின் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கவே அவன் எல்லா உதவிகளையும் நிறுத்தி விட்டான்.நிறைய ஆவணங்கள் வேறு அவனிடம் மாட்டிக் கொண்ட்து.

கணவனை விட்டு போன் செய்தால் போனை எடுக்காமல் போக்கு காட்டினான்.சக ஊழியரை விட்டு கேட்டபோது ’’நான் நிறைய செலவு செய்திருக்கிறேன் அந்த பணத்தை கொடுத்தால் கொடுத்து விடுகிறேன்.’’என்றான்.ஒரு வழியாக பணத்தை கொடுத்து எல்லா ஆவணங்களையும் திரும்ப வாங்கினார்கள்.

ஏமாற்றம் கோபம், ஆத்திரம் போன்றவற்றை ஏற்படுத்தி விடுகிறது.அவனுக்கும் அப்படியே.கோபத்தை வேறு வகையில் திருப்பினான்.அந்த பெண்ணைப் பற்றி அவதூறாக பல இடங்களில் பேச ஆரம்பித்தான்.இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறான்.இனியும் பேசுவான்.

திருமணமாகாத பெண்கள் என்றால் இம்மாதிரியான சூழலில் கூடுதல் பிரச்சனை.மாப்பிள்ளை வீட்டார் பெண்ணைப் பற்றி அலுவலக ஆட்களிடம் விசாரிக்க வந்தால் வக்கிர ஆண்கள் பேசுவது வேறுமாதிரி இருக்கும்.இது போன்ற காரணங்களுக்காக திருமணம் தடை பட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

சில பெண்கள் இத்தகைய ஆண்களின் நோக்கம் தெரிந்தே விளையாட்டாக பழகுவதுண்டு.மிரட்டினால் ஓடிப்போய்விடுவார்கள் என்று நினைப்பதுதான் காரணம்.ஆனால் ஆணின் ஆசை நிராசையாகி ஏமாற்றப்படும்போது விளைவுகள் பெண்ணுக்கு எதிராகவே முடியும்.அவதூறு பரப்பலாம்,சில கற்பழிப்பு வரை கூட செல்ல்லாம்.ஏமாற்றத்தால் உருவாகும் உணர்ச்சிகளை உள்ளம் ஏதோவொரு வித்த்தில் ஈடு செய்யவே முயற்சிக்கும்.

-

Tuesday, January 25, 2011

எங்கே போனார்கள் அந்தப் பத்திரிகையாளர்கள்?


மேலாளர் ஒருவருக்கும் பணியாளர்கள் சிலருக்கும் தகராறு.ஒரு பணியாளருக்கு ஆத்திரம் அதிகமாக,மேலாளரை ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறி.பல இடங்களில் விசாரித்து ஒரு புலனாய்வு பத்திரிகை நிருபரை பிடித்தான்.மேலாளரின் ஊழலையும் அத்துமீறலையும் விவரித்தான்.

அடுத்த சில நாட்கள் வேலைக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு நிருபருடன் அலைந்தான்.ஆதாரங்கள் தயாரானது.மூன்று வேளையும் பத்திரிகையாளருக்கு சாப்பாடு,சிற்றுண்டி எல்லாம் ஆனது.அடுத்த வெளியீட்டில் புகைப்பட்த்துடன் மேலாளரைப்பற்றிய செய்தி வந்திருக்க வேண்டும்.ஆனால் வரவில்லை.

இரண்டு,மூன்று பத்திரிகையாளர்கள்-அவர்களும் புலனாய்பவர்கள்-கூடி விவாதித்தார்கள்.ஆதாரங்களுடன் மேலாளரிடம் பேசினார்கள்.பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மேலாளரின் மானம் காப்பாற்றப்பட்டு விட்ட்து.அவருக்கும் குடும்பம் இருக்கிறது(நிருபருக்கு இல்லையா?).புலனாய்வு நிருபர் சில நாட்கள் அலைந்த்தற்காக மட்டும் மேலாளரிம் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டார்.

எனது நண்பர் ஒருவர் உள்ளூர் பத்திரிக்கை நட்த்தி வந்தார்.பத்தாண்டுகளுக்கு முன்பு! எப்போதும் ஒரு கூட்டம் பின்னால் சுற்றிக்கொண்டிருக்கும்.அவர்களெல்லாம் நிருபர்கள்.பத்திரிக்கை அதிபர் அவர்களுக்கு சாப்பாடு கூட வாங்கித் தரமாட்டார்.ஊதியம் கிடையாது.நிருபர்கள் ஆசிரியருக்கு எல்லா செலவையும் பார்த்துக் கொள்வார்கள்.புதிது புதிதாக முளைப்பார்கள் இளைஞர்கள்.

தற்போது சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு மீண்டும் பத்திரிக்கை முயற்சியை தொடங்கிப்பார்த்தார் நண்பர்.நிருபர்கள் ஒருவர் கூட வரவில்லை.இளம் பத்திரிக்கையாளர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.நண்பர் ஆச்சரியத்துடன் கூறுகிறார்இப்போதெல்லாம் மாறிப்போய்விட்ட்துஎன்னதான் நடந்த்து?’’ஒரு வேளை அவர்களெல்லாம் வலைப்பூ எழுதுகிறார்களோ என்னவோ’’என்றேன்.

உண்மையில் அந்தப் பத்திரிகையாளர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள்.கண்ணில் இலட்சிய வெறியும்,தார்மீக கோபமும்,சமூகத்தின் மீது அக்கறையும் உள்ள இளைஞர்களை காலம் விழுங்கி விட்ட்து.பேனா மாற்றத்தை உருவாக்கித்தரும் என்று நம்பியவர்கள் அவர்கள்.கால ஓட்ட்த்தில் காணாமல் போனார்கள்.

செல்போன்கள் போன்று நுகர்பொருட்கள் அவர்களை சிதைத்தன.இரண்டு,மூன்று செல்போன்கள் இன்றைய நடைமுறை.தனக்கு,மனைவிக்கு,குழந்தைகளுக்கு விலை உயர்ந்த சாதன்ங்கள் தேவை.இல்லாவிட்டால் யார் மதிப்பார்கள்?அவன் வீட்டில் யார் பெண் எடுப்பார்கள்? யார் பெண் கொடுப்பார்கள்?

ஒரு அதிகாரியைப் பற்றி இரண்டு பக்கத்துக்கு எழுதுவதன் மூலம் அவனுக்கு என்ன கிடைக்கும்.தவிர,எழுதப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டு சமூகம் நன்மையடைந்த்தா,ஆட்சியாளர்களை மக்கள் புறக்கணித்து ஒதுக்கி வெளியேற்றினார்களா அல்லது அரசு வாகனத்தில் பவனி வந்தார்களா என்பது நமக்கு தெரிந்த எளிய உண்மை.

பத்திரிகையாளன் பேரம் பேசாமல் இலட்சியத்துடன் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டானா?ஆனால் முழுதும் அப்படியல்ல!கொஞ்சம் தர்ம்ம் மிச்சமிருக்கிறது.நமக்கு கொஞ்சம் நம்பிக்கை..இதுவும் கடந்து போய்விடும்!


-

Monday, October 25, 2010

பணியிடங்களில் பாலியல் தொல்லை ஆண்களுக்கு இல்லையா?

பெண்களுக்கு பணியிடங்களில் பாலியல் தொல்லைகள் பற்றிய எனது பதிவை படித்துவிட்டு ஒருவர் கேட்டார்.ஆண்களுக்கு இவையெல்லாம் ஏற்படாதா?.விதி விலக்குகள் விதிகள் ஆகுமா என்று தெரியவில்லை.சில ஆண்களுக்கு பெண்கள் மீது தீராத ஆத்திரம் உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.எங்கேயாவது ஆணுக்கு இப்படிப்பட்ட தொல்லைகள் நேர்ந்தால் அவன் பாவம்.அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் எந்த சந்தோஷமும் இல்லை.பெண்களைப்போல அவனால் வெளியே சொல்லவும் முடியாது.அடேயப்பா என்று மேலும் கீழும் பார்ப்பார்கள்.
ஆண்களுக்கும்,பெண்களுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம் பெண்களுக்கு கிடைக்கும் சமூக ஆதரவு ஆண்களுக்கு கிடைக்காது.பெண்களுக்கு மற்ற பெண்கள் ஆதரவாக இருக்கும்போது,ஆண்கள் இன்னொரு ஆணுக்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்.எதிர்பாலினர் அங்கீகாரம் ஆண்களுக்கு ஒரு பிரச்சினையாவதால்பெண் தனக்கு ஆதரவாக திசைதிருப்புவது எளிது.ஆண்களைப்போல பெண்களின் தொல்லைகள் வெளிப்படையாக இருக்காது.பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் ஆண்,தனது நண்பர்களை இழக்க வேண்டியிருக்கலாம்.அந்த இடத்தை விட்டு மாறுதல் பெற்றுக்கொள்வதுதான் நல்லது.
எனக்கொரு நண்பன் இருந்தான்.அவனுக்கு திருமணமாகவில்லை.அவனுடைய அலுவலகத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு -திருமணமானவர்-அவனை பிடித்துப்போனது.சாப்பாடு எடுத்து வரத்தொடங்கினார்.கணவர் பற்றி தொடர்ந்து குறை கூறுவது,கணவர் வீட்டில் இல்லைஎன்பதை அழுத்தமாக தெரிவிப்பது.அடிக்கடி போனில் பேசுவது என்று ஆரம்பித்தார்.அவனுக்கு பிடிக்கவில்லை.நேரில் பார்ப்பதை தவிர்த்தான்.போனை எடுக்கவில்லை.யாரிடமும் வெளியே சொல்லாமல் எனக்கு போன் செய்தான்.அந்த பெண்,நிறுவன தலைமையிடம் நெருக்கமாக இருந்தார்.அமைதி காக்குமாறு கூறினேன்.மற்ற பெண்களும் இவனை பார்த்தாலே குறை சொல்ல ஆரம்பித்தார்கள்.அப்பெண்ணின் திட்டமிட்ட அணுகுமுறையால் அலுவலக நண்பர்கள் இவனை விட்டுவிட்டு பெண்களிடமே அதிகம் பேசிக்கொண்டிருக்க தனிமைப்படுத்தப்பட்டான்.ஒரு கட்டத்தில் மாறுதல் பெற்று வெளியேறினான்.
பெண் என்னதான் செய்வாள் ?
  • நண்பர்களை பிரித்து தனிமைப்படுத்துவது.
  • செல்வாக்கை குறைக்க முயற்சி செய்வது.
  • அதிகாரிகளிடம் பொய்யான காரணங்களை சொல்லி முறையிடுவது.
  • மற்ற பெண்களையும் தனக்கு ஆதரவாக மாற்றுவது.
  • பணியில் ஒத்துழைக்க மறுப்பது
  • நண்பர்களை விட்டே பின்தொடர்வது.
  • தொடர்ந்து இமேஜை கெடுக்கும் விதத்தில் அவதூறு பரப்புவது.
  • செயலையும்,நோக்கங்களையும் முடக்க நினைப்பது.
பொதுவாக ஆணுக்கு நடப்பதெல்லாம் அபூர்வமாக நடப்பதுதான் .விபத்துபோல.ஆனால் பெண்ணுக்கு நடக்கும் தொல்லைகள் வாழ்க்கை முறையாக உள்ளது.ஆணுக்கு நஷ்டஈடு கொடுக்கலாம்.ஆனால் ஆண்களால் நேரும் பெண்களின் தொல்லைகளுக்கு சட்டமும்,இயக்கமும் தேவை.இது பாலியல் தொல்லைகள் என்றில்லாமல் அனைத்து பிரச்சினைகளுக்கும் பொருந்தும். -