Tuesday, October 29, 2013

வெள்ளாட்டுக்கறியும் தீபாவளியும்



வெள்ளாட்டுக்கறிதான் மதிப்பு மிக்கதாக இருந்துவருகிறது.சுவை மட்டும் இதற்கு காரணமல்ல! கிராமப்புறங்களில் தோஷம் இல்லாதது என்றநம்பிக்கை இருந்து வருகிறது.உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் சாப்பிடுவார்கள்.பல இடங்களில் தீபாவளிக்கு கறி சீட்டு பிரபலமாக இருக்கிறது.வெள்ளாட்டுக்கறி என்று சொன்னால் கலந்துகொள்பவர்கள் அதிகம்.

காந்தி வெள்ளாட்டுப்பாலைக் குடித்து வந்தார்.வெள்ளாட்டுக்கறியில் கொலஸ்ட்ரால் பயம் இல்லை.மற்ற கறிகளை ஒப்பிடும்போது கொழுப்பு மிகவும் குறைவு.வீட்டில் அரைக்கும் மசாலாவில் சேர்க்கப்படும் பொருட்களே இருக்கும் கொழுப்பையும் சமன்படுத்திவிடும்.அதிகம் பயப்படாமல் சாப்பிடத்தேர்ந்தெடுக்கலாம்.

இந்த ஆண்டு பலருக்கு கறி இல்லாத தீபாவளியாக அமைந்துவிட்டது.பல குடும்பங்களில் கௌரி விரதம் முடியும்வரை அசைவம் சாப்பிடமாட்டார்கள்.அமாவாசை அன்று ஞாயிற்றுக்கிழமைதான் விரதம் வருகிறது.அடுத்தநாள் பலருக்கு அலுவலகம் இருக்கும்.இந்த விரதம்தான் பலரை நகரத்திலிருந்து கிராமத்துக்கு வரச்செய்கிறது.

தீபாவளி சீட்டு என்று இனிப்பும் காரமும் தருகிறார்கள்.ஆனால் விரதத்தின் சிறப்பு இனிப்பாக அதிரசம் தயாரிப்பார்கள்.படைக்கமட்டும் நெய்யில் தயாரித்துவிட்டு எண்ணெயில் பொரிப்பார்கள்.பாகு பதம்பார்த்து எடுப்பதற்கென்றே சிலர் உண்டு.அன்றையதினம் மட்டும் அவருக்கு சிறப்பு மரியாதையாக இருக்கும்.அதிரசத்தை வாழைப்பழத்தில் பிசைந்து நெய்விட்டு சாப்பிடுவது பலருக்கு விருப்பமானது.

கிராமங்களில் ஒருவாரம் முன்பே பட்டாசுகள் கடைக்கு வந்துவிடும்.அவ்வப்போது விட்டுவிட்டு சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்.விலை அதிகமாகிவிட்டதால்இப்போது அதுவும் குறைந்துபோய்விட்டது.நகரத்திலிருந்து வருபவர்கள்தான் அதிகம் வெடித்துக்கொண்டிருக்கிறார்கள்.


எண்ணெய் தேய்த்துக்குளிப்பது தீபாவளிக்கு இன்னொரு விசேஷம்.கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று கேட்பார்கள்.அதிகாலையில் சுடுநீர் காய்ச்சிக்கொண்டிருப்பார்கள்.நல்லெண்ணெய் அதிகம் தீபாவளிக்குத்தான் விற்பனையாகும்.தலைதீபாவளிக்கு மாப்பிள்ளை முறுக்காக இருப்பார்.புதுத்துணியும் நகையும் பளபளக்கும்.மாமன்,மச்சான் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி...

வெளியூரிலிருந்து கிராமத்துக்குச் சென்று வருவது பண்டிகை நாட்களில் சிரமமாக இருக்கிறது.பேருந்தின் கூட்ட நெரிசலும்,பயணக்களைப்பும் சோர்வைத்தரக்கூடியது.ஆனால் பலரை நேரில் சந்திக்க முடிவது ஒரு சந்தோஷம்.நெருங்கிய உறவினர்களையும்,பால்ய நண்பர்களையும் பார்த்துப்பேசலாம்.களைப்பெல்லாம் அந்த மகிழ்ச்சியில் காணாமல் போய்விடுகிறது.
-

3 comments:

நம்பள்கி said...

ஆடு இல்லாமல் என்னத்த தீப்பாவளி! எண்ணத்தே கொண்டாடி!
என் தமிழ்மணம் + 1 வோட்டு போட்டு விட்டேன்.
நன்றி!

Anonymous said...

வணக்கம்

நம்ம தழிழன்ட கலாச்சாரம்... ஆட்டுக்கறி இல்லாத தீபாவளியா???
பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மகேந்திரன் said...

வெள்ளாட்டுக்கறியும்
விரிந்து வந்த
தீப ஒளிச்சுடரும்
நிகழ்வுகளின் சாரங்களும்
மிக அருமை...