Sunday, October 6, 2013

நூடுல்ஸ் குழந்தைகளுக்கு வேண்டாம்.



குழந்தைகளுகளால் விரும்பி சுவைக்கப்படும் உணவு நூடுல்ஸ்.மிக விரைவாக தயாரித்துத் தந்துவிடமுடிகிறது.ஆனால் அதில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன என்பது நமக்குத்தெரியாது.விளம்பரங்களில் சொல்லப்படுவதை நம்பியே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். விளம்பரங்களில் உள்ள தகவல்களுக்கும் உண்மைக்கும் இருக்கும் இடைவெளியை நாம் அனுபவித்திருக்கிறோம்.

நுகர்வோர் கவசம் என்ற இதழை தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிடுகிறது.சென்றமாத இதழில் தலையங்கமாகவும் ஒருபக்க செய்தியொன்றும் நூடுல்ஸ் பற்றி இருக்கிறது.குஜராத்தில் நுகர்வோர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்று நூடுல்ஸ் குப்பை உணவு என்பதை தெரிவிக்கிறது.படித்த்தில் நினைவில் உள்ளவை இவை.



அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சோடியமும்,கொழுப்பும் இருக்கின்றன.விளம்பரங்களில் சொல்லப்படுவது போல சத்துக்கள்  இல்லை.நார்ச்சத்து,புரதம் போன்றவை மிகக் குறைவாகவே இருக்கின்றன.முன்னணியில் உள்ள பதினைந்து தயாரிப்புகளை ஆய்வுக்காக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.நூடூல்ஸ் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இல்லை என்பது உறுதியான முடிவு.


சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு நுகர்வோர் இயக்கங்களுடன் ஈடுபாடு உண்டு.நாட்டில் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன.ஆனால் நுகர்வோர் பிரச்சினைக்காக பணிபுரிபவர்கள் மிகவும் குறைவு.மனிதனாகப் பிறந்த அத்தனைபேரும் நுகர்வோர்கள்தான்.ஒரு பொருளை அல்லது சேவையை பணம் கொடுத்து பெறுபவர் நுகர்வோர்.


பேருந்து நிலையத்தில் கட்டணக்கழிப்பிடத்தில் எத்தனை ரூபாய் சொன்னாலும் சத்தமில்லாமல் கொடுத்துவிடுகிறோம்.இலவசத்திற்காக மயங்கி ஓடுகிறோம்.ஆடித்தள்ளுபடிஅமாவாசைத்தள்ளுபடி எல்லாம் உண்மையல்ல என்பது நமக்குத்தெரியும்.விலையை ஏற்றிவிட்டு செல்லும் ஏமாற்றுவேலைதான்.இருந்தாலும் ஏமாந்து கொண்டே இருக்கிறோம்.

ரசீது இல்லாமல் சில நூறு குறைவு என்றால் சந்தோஷமாக வாங்குபவர்கள் பலர் இருக்கிறார்கள்.ஆனால் மருந்துக்கடையில் மாத்திரை வாங்கினாலும் பில் கேட்டு வாங்காதவர்கள் உண்டு.காலாவதியான மருந்து,தவறான மருந்தை தந்துவிட்டவர்களை எப்படி தண்டிப்பது? நுகர்வோருக்கு பில்தான் ஆயுதம்.


மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு தரப்படுகிறது.பள்ளி,கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.முறையற்ற வணிக நடைமுறைகள் இன்று அதிகரித்துவிட்டன.சட்டத்தின் துணைகொண்டு அவற்றை எதிர்த்து போராடமுடியும்.மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தமுடியும்.

உணவே மருந்து என்ற நிலையிலிருந்து உணவுக்குப்பின் மருந்தை தேடும் நிலையை நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.விளம்பரங்களும்,நுகர்வு கலாச்சாரமும் ஏற்படுத்தியுள்ள இழிநிலை இது.சந்தையில் விற்கப்படும் பொருள்களை ஆய்வுக்குட்படுத்தவும்,விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதிக நுகர்வோர் அமைப்புகள் உருவாக வேண்டும்.கொடுத்த பணத்திற்கு தரமான பொருளும்,உரிய சேவையும் நம்முடைய உரிமை.
-

1 comment:

Anonymous said...

மிகவும் நல்ல பதிவு! நூடுல்கள் கேடில்லை, ஆனால் துரித நூடுல்கள் என மசாலா சேர்த்து, பாக்கெட்டுகளில் கிடைக்கும் நூடுல்களை தினமும் உண்டால் கொழுப்பு, உப்பு, உட்பட உடல் தீது தரும் பலவற்றையும் உண்டு நோய் பிணி வரும் என்பதில் ஐயமில்லை. நம் நாட்டுக்கு உகந்த சத்தான ஆகாரங்கள் வீட்டிலே உண்டாக்கப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி, புட்டு போன்ற உணவுகளேற். இட்லியும், சாம்பாருமே ஏற்றவும் நல்லதொரு சிற்றுண்டி என பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நல்ல உண்வையும், ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டியது நம் கடமை !!