Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

Wednesday, September 10, 2014

யார்கிட்டேயாவது பேசுனாவே சந்தேகப்படறார்



ஆத்திரமும் வேதனையும் தொனிக்கும் குரலில் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.அவர் அனுபவித்துக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் உணர்ச்சிகள் நிஜம். ``அவருக்கு சந்தேகப்புத்தி சார்!யார்கிட்டயாவது பேசுனாவே சந்தேகப்படறார்``.நான் புன்னகைத்திருக்கவேண்டும்!.இருவரும் திருமணமாகாதவர்கள்.ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.

என்னுடைய கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. ``அவர் அப்படி நினைப்பதாக உங்களுக்கு யார் சொன்னது?``.அவர் எதுவும் பேசாமல் கிளம்பிப் போய்விட்டார்.ஆண் பெண் நட்பு பற்றிய எண்ணங்கள் உருவானாலும் அந்தப்பெண்ணின் கதை கொஞ்சம் சிக்கலான விஷயம்.அந்தப்பையனை அவர் விரும்புகிறார்.பையனிடமிருந்து எதிர்பார்த்த எதிர்வினை இல்லை.

இன்னொரு பையனுடன் நெருங்கிப் பழகுவதன் மூலம் அவனது எண்ணத்தை அறிய முயற்சி செய்தார்.அவன் சாதாரணமாக பேசுவதை,நடப்பதை, நிற்பதையெல்லாம் தனக்கு சாதகமான விஷயங்களாக மற்றவர்களிடம் சொல்லிக்கொள்வார்.பல மாதங்கள் இப்படிச்செய்து பார்த்துவிட்டு ``அவன் சந்தேகப்படுவதாக அவருக்குத் தோன்றியது.இந்த எண்ணத்தை மனம் தன்னிச்சையாக உருவாக்குகிறது.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அணுகுவதில் இது எதிர்மறை அணுகுமுறை.நிறைய திரைப்படங்களில் இந்தக்காட்சியைப் பார்த்திருக்கலாம்.காதலி வேறொருவனுடன் பழகும்போது காதலன் பொங்குவான்.ஆனால் இந்த அணுகுமுறை தவறானது.ஒருவரை புரிந்து கொள்வதைத் தவிர்த்து பொறாமை உணர்ச்சியைத்தூண்டி கீழே விழச்செய்கிறது.இது வலைவீசிப் பிடிப்பதற்குச் சமமானது.மனித உயிரை உடலாக மட்டுமே காண்பதுதான் காரணம்.

ஆணும் பெண்ணும் பேசினாலே சந்தேகம் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பெண்ணை உடலாகக் கருதும் வரை இந்த எண்ணங்களைத் தவிர்த்துவிட முடியாது.ஆணும் பெண்ணும் பேசித்தான் ஆகவேண்டும்.இன்றையப் பணிச்சூழலில் இதெல்லாம் தவிர்க்கமுடியாத ஒன்று.ஆனாலும் உற்றுப்பார்ப்பவர்கள்தான் அதிகம்.பெண் வதந்திகளையும்,விமர்சனங்களையும் கடந்தாகவேண்டும்.

ஆண்,பெண் நட்பை ஆரோக்கியமாகக் கருதுபவர்கள் குறைவு.ஆரோக்கியமான உறவை அவர்களது ஆளுமையே தீர்மானிக்கிறது.ஒரு பெண் சிரித்துப்பேசினாலே கற்பனையில் மிதப்பவர்கள் இருக்கிறார்கள்.அந்தப்பெண்ணுடன் இணைத்து வதந்தி பரப்புபவர்கள் இருக்கிறார்கள்.பெண்கள் தங்களது பணிச்சூழலில் நோக்கம் தெரிந்தும் கவனிக்காதது போலக் கடந்து செல்பவர்கள் அதிகம்.பலவீனத்தைப்பயன்படுத்தி ஆதாயம் அடைபவர்களும் உண்டு.

ஒருவரது பலவீனங்கள் உறவைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.எதைக்கொடுத்து சரிக்கட்டலாம்? எப்படி விழ வைக்கலாம் என்று அணுகுபவர்களே அதிகம்.அறியாமை,ஏழ்மை போன்றவை ஒருவரை வீழ்த்தப் பயன்படுத்தப்படுகின்றன.நாம் சொல்லும் பொய்யை நம்புபவர் நமக்குப் பிடித்தமானவராக இருக்கக்கூடும்.நாம் சொல்வதையெல்லாம் நம்புபவர் நமது தன்முனைப்பைத் திருப்தி செய்கிறார்.அவரது அறியாமை நமக்குப் பலம்.

மேலே சொல்லப்பட்டபெண் விஷயத்தில் அவரது நோக்கம் நிறைவேறியிருந்தால் என்ன நடக்கும்? ஆணின் பலவீனத்தைப் பிடித்தாகி விட்டது.தான் காரியம் சாதிக்க நினைக்கும் போதெல்லாம் இந்த உத்தியை பயன்படுத்தக்கூடும்.திருமணத்திற்குப்பின் தம்பதிகள் வாழ்வில் பெரும்பாதிப்பைக் கொண்டுவரலாம்.பலவீனத்தைப்பயன்படுத்தி வெற்றி கொள்வது தற்காலிகமானது.இந்த அணுகுமுறை இன்றைய உறவுச்சிக்கல்களில் பெரும்பங்கு வகிக்கிறது.
-

Monday, July 14, 2014

குடும்பங்களில் பழிவாங்கும் உணர்வு



பாம்பு பழிவாங்கும் கட்டுக்கதையைக் கிராமத்தில் சொல்வார்கள்.பாம்பை உயிர்போகும்வரை அடிக்காமல் விட்டுவிட்டால் தேடிவந்து பழிதீர்க்கும் என்பார்கள்.அதுவும் கொம்பேறிமூக்கன் என்ற பாம்பு தன்னை அடித்த மனிதனை கடித்து உயிரைப்போக்கிய பிறகு சுடுகாட்டு மரத்தின் மீது ஏறி இறுதிச்சடங்கை பார்த்தபின்னர்தான் ஆத்திரம் தீரும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.பழிதீர்க்கும் மனிதர்களைப் பாம்பு என்று குறிப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அரிஸ்டாடில் மனிதன் சமூக விலங்கு என்று சொன்னார்.அரசியல் மிருகம் என்று குறிப்பிட்டார்.சமூக வாழ்விலும் அரசியலிலும் பழி வாங்கும் உணர்வே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.எப்போதும் மனிதன் பழிதீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறான்.திரைப்படங்களில் பழிவாங்கும் கதைகள் வெற்றி பெற்றுவிடுகின்றன.வஞ்சம் தீர்ப்பது அடிப்படையாக இருந்து கொண்டிருக்கிறது.மனிதன் பழிதீர்க்கும் மிருகம் என்று சொல்லலாம்.

சிறுவயதில் நடந்த அந்த சம்பவம் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.போதையேறிய ஆசாமி ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரை தரக்குறைவாகப் பேசிவிட்டார்.அப்படிப்பேசிய இடம் அவர் வீட்டிலிருந்து ஒருகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.அவருக்குப் பதிலடி கொடுக்கவேண்டும் என்றால் வீட்டு வாசலில் இருந்தே பேசியிருக்கலாம்.ஆனால் ஒருகிலோமீட்டர் தூரம் சென்று அவர் பேசிய இடத்திலேயே பேசி விட்டுவந்தார்.



நம்முடைய இதிகாசங்களிலும் இதற்கான உதாரணங்கள் இருக்கின்றன.ராமன் காட்டுக்குப்போக நேர்ந்தது கூனியின் பழிதீர்த்தல்தான்.பாஞ்சாலியும் பழிதீர்த்துக்கொண்டார். நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.``இந்த மாவட்டத்துக்கு உயரதிகாரியாக வரவேண்டுமென்று`` ஒருவர் விருப்பப்பட்டதாகச்சொன்னார்.அவர் குறிப்பிட்ட மாவட்டத்தில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு மானம் போய்விட்டது.அதே இடத்தில் உயர் அதிகாரியாக வருவதன் மூலம் பதிலடி கொடுக்கவேண்டும்
.
தம்பதிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.திருமண வாழ்வில் ஆறாண்டுகள் கடந்துவிட்டார்கள்.ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்கள்.திருமணத்தின்போது தனது தந்தையை விமர்சனம் செய்தது முதல் மனைவி சொல்ல ஆரம்பித்தார்.அவமானம்,தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவற்றை விவரிக்க ஆரம்பித்தார்.

குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளிலும் பழிவாங்கும் உணர்வு வலிமையாக இருக்கிறது.அண்டை அயலார்கள்,இரத்த சம்பந்தமான உறவுகளுக்கும் இது பொருந்தும்.கணவன்,மனைவி என்றில்லாமல் அனைவரும் பழி உணர்வை கையாளக்கற்றுக்கொள்வது அமைதிக்கு வழிவகுக்கும்.அவனை ஏதாவதுசெய்தே தீருவேன் என்று சிந்திக்கும் நேரத்தில் வளர்ச்சி குறித்த எண்ணங்களை உருவாக்கலாம்.

உறவினர் நிகழ்ச்சி ஒன்றுக்குப்போகவேண்டாம் என்று வீட்டில் சொன்னார்கள்.ஆனால் அவர்கள் அழைத்திருந்தார்கள்.``நம்முடைய நிகழ்வுகளுக்கு வராமல் அவர்கள் புறக்கணித்தார்கள்.அதனால் நாம் அவர்களைப் புறக்கணிக்கவேண்டும்`` என்பது வீட்டில் உள்ளவர்களது வாதம்.நான் சொன்னேன்,``நான் அவர்களைப் பின்பற்ற முடியாது.`` ஆமாம்,நாமும் அவர்களைப்போலத் தரமின்றி நடந்து கொள்ளவேண்டாம்.
-

Sunday, October 27, 2013

இரயில் பயணத்தில்.....



பார்க்கச்சலிக்காத விஷயங்களில் இரயிலும் ஒன்று.பேருந்துப்பயணத்தை ஒப்பிடும்போது இரயில் உடல் சோர்வு தராமல் கொண்டு சேர்க்கிறது.எங்கள் கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டரில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று இருக்கிறது.ஆடி பதினெட்டு என்றால் வழக்கமாகச் செல்வதுண்டு.சுமார் பாதிதூரத்தை இரயில்பாதை வழியே நடந்துசெல்வது வழக்கம்.அப்போது இத்தனை இரயில் இல்லை.இரயிலை பார்ப்பது சந்தோஷமாக இருக்கும்.

கடந்தவாரம் ஆம்பூரிலிருந்து சென்னைக்கு இரயிலில் பயணம் செய்தேன்.முதல் வேலையாக இரண்டாம்வகுப்பில் காலியிடத்தைக் கேட்டோம்.வாலாஜாவில் உட்கார்ந்துகொள்ளலாம் என்று சீட்டு வழங்கினார்கள்.அதுவரை நின்றுகொண்டுதான் பயணம் செய்யவேண்டும்.பக்கத்தில் குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு ஒருகுடும்பம் காத்திருந்தது.

மூன்றுபேர் அமரும் இருக்கையில் ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள்.குழந்தைகளுக்கு ஆறு,நான்கு வயது இருக்கக்கூடும்.கணவர் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.தாயும் இரண்டு குழந்தைகளும் உள்ள இருக்கையில் இன்னொருவர் அமரமுடியும்.கையில் குழந்தை வைத்திருந்தபெண் உட்கார அனுமதி கேட்டார்.அவரது முயற்சி பலிக்கவில்லை.அந்தப்பெண்மணியின் பரிவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டார்கள். குழந்தைகளுக்கு டிக்கெட் எடுத்திருக்கக்கூட மாட்டார்கள் என்று ஒருவர் சொன்னார்.கணவன்,மனைவி இருவரும் பட்டம் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.ஆங்கில நாளிதழ் ஒன்றின் பெயர் தாங்கிய பயணப்பையை வைத்திருந்தார்கள்.கணவரும்,மனைவியும் மாறிமாறி குழந்தையை வைத்துக்கொண்டார்கள்.

பேருந்துப்பயணத்தில் சாதாரணமாக நாம் பார்த்திருக்கிறோம்.கர்ப்பிணிகள் என்றால் யாராவது இடம் கொடுத்துவிடுவார்கள்.பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும் அப்படித்தான்.ஆனால் இப்போது அந்தப்பண்பும் மறைந்து வருவதாக எனக்குத்தோன்றுகிறது.இப்போது அந்தக்குணங்களை கொண்டிருப்பவர் எளிய கிராமத்து மனிதராக இருக்கிறார்.இன்று பேருந்திலும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது.கர்ப்பிணிகளுக்கும்,குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கும் இடம் ஒதுக்கினால் என்ன?

இரயில் நான் அந்தப்பெண் குழந்தைகளைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.அவர்களிடமும் இத்தகைய பண்புகள்தான் மனதில்பதியும்.தனிக்குடும்பத்தைத் தாண்டி சக மனிதர்களிடம் பழகுவதே குறைந்துவருகிறது.உலகத்தில் இருப்பதே அவர்கள் நான்குபேர்தான்.குழந்தைகளுக்கு பரிவும் நேசமும் வளர வாய்ப்பே இல்லை.தாய்,தந்தையைத் தாண்டி குழந்தைகளுக்கு நெருக்கமான உறவுகள் அறிமுகமே இல்லை.

கிராமத்திலும்,கூட்டுக்குடும்பத்திலும் குழந்தையைத்தூக்கிக் கொண்டாட நிறைய மனிதர்கள் இருந்தார்கள்.அவர்கள் பரிவும் நேசமும்காட்டினார்கள்.குழந்தைகளிடமும் அந்தப்பண்புகள் வளர்ந்தன.சாஃப்ட்வேர் துறையில் நல்ல நிலையில் இருக்கும் ஒருவர்,கிராமத்து உறவினர் வீட்டு சாவுக்கு செல்லத்தயங்கினார்.நான் செத்துப்போனால் நாலுபேர் வீட்டில் இருக்கவேண்டுமே? என்று மகனுக்குப் புரியவைத்தார்.

சுகதுக்கங்களை பகிர்ந்துகொள்ள உறவுகள் என்றநிலை மாறி நாலுபேர் வேண்டுமே? என்று ஆகிவிட்டது.குழந்தைகளுக்கு உறவினர்களை அறிமுகப்படுத்துவதும்,அவர்களுடைய வீடுகளுக்கு சென்றுவருவதும் அவசியம் என்று தோன்றுகிறது.சக மனிதர்கள்மீது பரிவும்,நேசமும் வளராத சமூகம் குற்றவாளிகளைத்தான் உற்பத்தி செய்யும்.
-

Monday, September 2, 2013

உறவுகளை சிதைக்கும் பெட்ரோல்குண்டு .

சிறு வயது முதலே அவர்கள் நண்பர்கள்.இப்போது  வேறுவேறு ஊர்களில் இருக்கிறார்கள்.நேரில் சந்திப்பது தொடர்பாக ஒருவர் தொலைபேசியில்  தொடர்பு கொண்டார்.அழைப்பை எடுக்கவேயில்லை.தொடர்ந்து முயற்சி செய்ய எரிச்சலாக இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்து விட்டார்.நண்பர்கள் என்றில்லை,தம்பதிகள்,உறவினர்கள் என்று பலருக்கும் இத்தகைய அனுபவம் நிகழமுடியும்.அலுவலகப் பிரச்சினைகள் வீட்டில்,நண்பர்களிடம் எதிரொலிப்பது,வீட்டுப்பிரச்சினைகள் வெளியிடங்களில் கொட்டப்படுவது சாதாரணமாக நிகழ்கிறது.

மன அழுத்தம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயம்.பல்வேறு சூழலில் மனதுக்கு விரும்பாத செயல்களை செய்ய நேரிடுகிறது.எதிர்பார்ப்புக்கு மாறான சம்பவங்கள்,வாழ்வில் ஏற்படும் மாற்றம்,திட்டமிடாத வாழ்க்கைமுறை,புரிதலற்ற  டென்சன் உள்ள மனிதர்கள் என்று நிறைய காரணங்கள் இருக்கின்றன்.காரணங்கள்  ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதைப் போலவே அவற்றை சமாளிக்கும் விதத்திலும் வேற்றுமை இருக்கும்.சமாளிக்கும் திறனற்ற நிலையில் பாதிப்புகள் அதிகரிக்கின்றன.

உடலில்,மனதில்,நடத்தையில் விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.உடலில் வலிகள்,இதயம் பாதிக்கபபடுதல்,சர்க்கரை அளவில் மாற்றம்,வயிற்றுப்பிரச்சினைகள்(உணவு செரித்தலில் பிரச்சினை,இரைப்பைப் புண்,பசியின்மை போன்றவை),பாலியல் வாழ்க்கையில் ஆர்வமில்லாத நிலை போன்றவை இருக்கும்.ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலும் பலவீனமடைகிறது.

எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை,கவலை ஒத்துழைக்க மறுப்பது,எரிச்சலான மனநிலை,தூக்கமின்மை,அதிக அளவு மது,புகை பிடித்தல் என்று நடத்தையிலும் விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்துகின்றன.தம்பதிகளிடையே பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.உறவுகளை சிதைக்கும் பெட்ரோல் குண்டாக மன இறுக்கம் அமைந்துவிடுகிறது.

மனதளவில் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணர்வதுதான் முதல்படி.பலர் இதை உணராமல் நடந்து கொள்வதே பிரச்சினையைக் கூட்டிவிடுகிறது.மற்றவர்கள் நம்மிடம் எரிச்சலாக நடந்து கொள்ளும்போதும் இப்படி நாம் புரிந்து கொள்ள முடியும்.மனம் அமைதியிழக்கும் நேரங்களில் யோகா,தியானம்,பிரணாயாமம் போன்றவை பெருமளவு உதவும்.ஆனால் முறையாகக்  கற்றுக்கொள்ளாமல் முயற்சி செய்யக்கூடாது.

இவற்றைத்தவிர எளிய மூச்சுப்பயிற்சியும் பெருமளவு பலனளிக்கிறது.பிரச்சினையான நேரங்களில்  நரம்பு மண்டல செயல்பாடு காரணமாக சரியான சுவாசம் இருக்காது.வேகமாக,உடல் முழுக்க ஆக்சிஜனை பெற முடியாத நிலை இருக்கும்.இந்நிலையை மாற்ற மூச்சுப்பயிற்சி உதவும்.எந்த இடத்திலும் இளைப்பாறிக் கொள்ள முடியும்.இடது மூக்கை மூடிக்கொண்டு வலது மூக்கில் பத்து எண்ணிக்கை வரை மூச்சை உள்ளிழுக்கவேண்டும்.இடது மூக்கு வழியாக பத்து எண்ணிக்கை வரை எண்ணி வெளியே விட வேண்டும்.இதே போல மாறிமாறி பதினைந்து நிமிடம் செய்யலாம்.

அமர்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ வசதியான நிலையில் மேற்கொள்ளலாம்.நல்ல விஷயங்களை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும்.ஆட்டோ சஜஷன்  என்று சொல்வார்களே அந்த மாதிரிதான்.சீரான சுவாசம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.சமாளிக்கும் திறனை அதிகப்படுத்தும்.உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்.
-

Tuesday, August 13, 2013

பொறாமை கொண்டவர்களை சமாளிப்பது எப்படி?



நண்பர் ஒருவர் தனது கனவைப்பற்றிச் சொன்னார்.முகத்தில் அமிலத்தைக்கொட்டியதுபோல வெள்ளையாக இருக்கிறது.தொட்டுப்பார்த்தால் சீழ்பிடித்திருப்பது போல இருக்கிறது.அதிர்ச்சியாக உணர்கிறார்.அலுவலகத்துக்கு மருத்துவ விடுப்பு எடுக்கலாம் என்ற எண்ணம் தோன்ற விழித்துக்கொண்டுவிட்டார்.இதைவிட மோசமான கனவு ஒருவருக்கு இருக்கமுடியாது.அழகுக்காக அத்தனை பேரும் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கும்போது தனது முகம் சீழ்பிடித்த நிலையைக் காண்பது கொடூரமானது.

அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் அவருக்குப் பிரச்சினைகள் இருந்தன.அவரைப்பற்றி தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருந்தார்கள்.அவருடைய உண்மையான முகம் சிதைக்கப்பட்டு பணிச்சூழல் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்த்து.மேலே சொல்லப்பட்ட கனவுக்கு அலுவலகப்பிரச்சினை காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.மற்றவர்களைவிட கூடுதலாக தகுதிகள்,திறமைகள் இருக்கும்போது அவர்களிடம் பொறாமையை ஏற்படுத்தவே செய்யும்.யாரையும்விட முதன்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது.

திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் இப்படிச்சொன்னார், வித்தியாசமாக சிந்திப்பவர்களை சராசரியாக்கும் வரை விடமாட்டார்கள். பணியிடங்களில் சிறப்பாக செயல்படுபவர் விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.உணர்ச்சிப்போக்கில் போகாமல் சிந்தித்து செயல்படுபவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.மறைமுக எதிரிகளை சிரிப்புடன் எதிர்கொள்ளும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன்.அவர் உங்களைப்பற்றி தவறான விமர்சனத்தை முன் வைத்தார் என்பதற்கு ஒருவர் வெடிச்சிரிப்புடன் சொன்னது, அந்தப்பெண் மீது அவனுக்கு ஒரு கண், என்னிடம் சிரித்துப்பேசுவது அவனுக்குப்பிடிக்கவில்லை.பெண் மீது மோகம் கொண்டவர்கள் மற்ற ஆண்களை மட்டம் தட்டவே விரும்புவார்கள்.

என்ன காரணத்திற்காக ஒருவர் நம்மைப்பற்றி அவதூறு செய்கிறார் என்று புரிந்துகொண்டால் மனம் பாதிக்கப்படாது.காய்க்கிற மரம் கல்லடிபடும் என்று சொன்னார்கள்.நம்மைத்தவிர நம்மை யாரும் தாழ்த்திவிட முடியாது என்பதும் நிஜம்தான்.ஆப்பிளை சாத்துக்கொடி என்று சொன்னால் சொல்பவருடைய தவறு.நம்மைப்பற்றியே நம்முடைய கணிப்பு சரியாக இல்லாதபோதுதான் மனம் பாதிக்கப்பட்டுவிடுகிறது.நாமும் விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறோம்.நேர்மையாக இருந்து அடுத்தவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகும்போது நமக்கு பொறுமை தேவை.

அவர்களைவிடவும் உங்களிடம் கூடுதலாக ஏதோவொன்று இருக்கிறது.அவர்களிடம் இல்லாமல் இருக்கிறது.அவர்களை நாம் புரிந்துகொள்ள முடியும்.இரக்கம் காட்டவும் முடியும்.மற்றவர்களைவிட உயர்ந்து நிற்கும்போது பணிவு தேவைப்படுகிறது. ஆமாம்  உயரும்போது பணிவு கொண்டால்....என்ற கவிஞரின் வரிகள் வைரவரிகள்.மறைமுக எதிரிகளை சமாளிக்க நல்ல வழி இருக்கிறது.அவர்களை பாராட்டுங்கள்,அவர்களை எதிரியாக நினைக்கவேண்டாம்.உங்களுக்கு எதிரியாக இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.தகுதியில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை அனுதாபத்துடன் எதிர்கொள்ளவேண்டும்.அவர்களை பாராட்டிவிட்டால் போதும்,குழப்பத்தில் அடிவாங்கி நகர்ந்துபோய்விடுவார்கள்.

சில நேரங்களில் அவர்களுடைய விமர்சனத்தில் உண்மையும் இருக்க வாய்ப்புண்டு.அப்போது திறந்த மனத்துடன் உங்களை மாற்றிக்கொள்வதே சரியானது.வேண்டுமென்றே கூறப்படும் விமர்சனத்தை ஒதுக்கிவிடலாம்.மற்றவர்களிடம் அவர்களது குணத்தைப்பற்றி சொல்லிவைத்துவிட வேண்டும்.பெரும்பாலானவர்கள் உங்களைப்பற்றிய அவதூறுகளை சந்தேகத்துடன் கவனிப்பார்கள்.,அவற்றை பொருட்படுத்தமாட்டார்கள்.
-