Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Thursday, November 24, 2011

குடிப்பவர்களை அடித்துத் திருத்த முடியுமா??


அன்னா ஹசாரே சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் பாவம்.குடிப்பவர்களை மூன்றுமுறை எச்சரிக்க வேண்டுமாம்.அப்புறம் கடவுள் முன்னால் சத்தியம் வாங்க வேண்டுமாம்.திருந்தாவிட்டால் கம்பத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடிக்கவேண்டும் என்கிறார்.ஏராளமான கண்டன்ங்கள்.தலீபான் தீவிரவாதிகள் ஸ்டைல் தண்டனை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி சொன்னார்.
                               ஹசாரே சொல்கிற மாதிரி திருத்த முடிந்துவிட்டால் சமூகத்தில் பல பிரச்சினைகளை சரி செய்து விடலாம்.இப்படி அவர் வயதில் இருக்கும் விஷயம் தெரியாதவர்கள் நினைக்க வாய்ப்பிருக்கிறது.மதுவில்,போதை மருந்துகளில் எப்போதாவது பயன்படுத்துபவர் முதல் அடிமையானவர்கள் வரை வித்தியாசங்கள் உண்டு.

                               என்னுடைய அனுபவத்தில் பல குடும்பங்களில் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள்.மனைவி பிறந்த வீட்டுக்கு போய் குடும்பம் நட்த்த வரமாட்டேன் என்பது முதல் சத்தியம் வாங்குவது வரை ஏராளமான முயற்சிகள்.ஆனால் பெரிய வெற்றியை அடைந்தவர்கள் யாருமில்லை.
                                நண்பன் ஒருவனின் தந்தை மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்று தோன்றியது.வீட்டில் ஒரு பொருளைக் கூட வைக்க முடியாது.கண்ணில் பட்டால் எடுத்துப்போய் விற்று குடித்துவிட்டு வந்து விடுவார்.அவருக்கு ஒரே பையன்.மிகுந்த பாசம்.பையன் வீட்டை விட்டு ஓடிப்போவேன் என்று மிரட்டிய பிறகு குடிப்பதை நிறுத்திவிட்டார்.பலருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.

                                 இன்னொருவர் கல்லூரிப் படிப்பு வரை படித்திருந்தார்.குடித்துவிட்டால் ஊரில் பல பிரச்சினைகள்.கெட்ட வார்த்தைகள்,சண்டை என்று போய்க்கொண்டிருந்த்து.பல முறை நிறுத்தி விடுவதாக சத்தியம் செய்தும் நிறுத்த முடியவில்லை.உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு போனால் மருத்துவர் நிறுத்தியாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்.ஆனாலும் முடியவில்லை.
                                  மருத்துவரிடம் “ நான் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் முடியவில்லை,என்று சொன்னார்.அவருக்கு நிஜமாகவே எண்ணம் இருக்கிறது.ஆனால் விட முடியவில்லை.சென்னையில் உள்ள TTK  மையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.ஒரு மாதம் தங்கி ஆலோசனையும்,சிகிச்சையும் பெற வேண்டும்.
                                  மது அடிமைகளுக்கு கவுன்சலிங் முதல் சிகிச்சை வரை ஆளுக்குத்தகுந்த மாதிரி மீட்கும் வழிமுறைகள் உண்டு.சிலர் நல்ல ஆலோசனையிலேயே நிறுத்திவிடுவதும் உண்டு.குறிப்பிட்ட காலவரையறை வைத்துக்கொண்டு படிப்படியாக நிறுத்தவேண்டும்.இப்படி விட்டுவிட்டவர்களும் இருக்கிறார்கள்.சிலருக்கு மருந்துகளும்,ஆதரவுக்குழு ஆலோசனைகளும் தேவைப்படும்.

                                  சென்னையில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றவர் குடியிலிருந்து மீண்டுவிட்டார்.அதற்குப் பின் குடிப்பவர்கள் பக்கத்தில் இருந்தாலும் அவருக்கு அந்த எண்ணம் ஏற்படுவதில்லை என்று சொன்னார்.TTK  மையம் பலருக்கு இப்படி மறுவாழ்வு அளித்து வாழ வைத்திருக்கிறது.ஹசாரே முறை கடைப் பிடித்தால் மறுவாழ்வு மையங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
                                   நாம் பழகிவிட்ட எந்த பழக்கத்தையும் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது.விதிவிலக்காக சிலர் நினைத்தவுடன் நிறுத்திவிடுவதும் சாத்தியம்தான்.இங்கே உள்ளம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.அடித்து,சத்தியம் வாங்கியெல்லாம் திருத்தி விட முடியாது.தினமும் இரவில் அல்லது விழாக்களில் மட்டும் மது அருந்தி பிரச்சினை இல்லாமல் இருப்பவர்கள் உண்டு.பணத்தைக் கரைத்து,பிரச்சினை ஆகி,வாழ்க்கையை பாதிக்கும் நிலைக்கு போவது சிக்கல்.இதை ஹசாரே சொல்கிற மாதிரி சாத்தியமில்லை.
-

Tuesday, October 25, 2011

பீர் தீபாவளியா? குவார்ட்டர் தீபாவளியா?

                          குடிக்கத் துவங்கும் பலர் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில்தான் ஆரம்பிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.(நிறைஞ்ச அமாவாசை என்பதனாலா?).அதுவும் பீரில் ஆரம்பித்து அடுத்த தீபாவளிக்குள் குவார்ட்டருக்கு வந்து விடுவார்கள். வருடாவருடம் தீபாவளிக்கு மது விற்பனை விண்ணைத்தொடுகிறது.எப்போதாவது குடிப்பவர்களும் இந்த மாதிரி நாட்களை தவரவிடுவதில்லை.ஏன் என்பதற்கான அலசல் ஏற்கனவே எழுதப்பட்ட பதிவிலிருந்து...
                           தீபாவளி மட்டுமல்ல,பொங்கல் ,திருவிழாக்கள்,திருமணம்,சடங்குகள் என்று விழா நாட்களில் மது விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கிறது.பண்டிகைகளுக்கும் மதுவிற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை.பின் ஏனிந்த மோகம்?
பெண் வீட்டார் ஒருவர் உறவினர் ஒருவரை கேட்டார்கள் "அந்த பையன் எப்படி?கெட்ட பழக்கம் ஏதாவதுஉண்டா?".பதில்:"இந்தக்காலத்தில் குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?இந்த பதிலில் மாப்பிள்ளை பற்றிய பொய்யும்,சமூகத்தை பற்றியஓரளவு உண்மையும் இருக்கிறது.

நண்பேண்டா -சொல்ல ஆளில்லை!
எல்லா பண்டிகை காலங்களிலும் வழக்கமாகவே நான் தனிமையை அனுபவித்திருக்கிறேன்.எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால்தான் என்பதை வெகு காலம் கழித்து உணர்ந்தேன்.அதேபோல நண்பர்களின் திருமணத்திற்கு காலையில் முகூர்த்தத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.முந்தைய இரவில் சென்றால் தனியாக அலைய வேண்டும்.குடிக்காத சில நண்பர்கள் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் உடன் இருப்பதில்லை. எனக்கு நண்பர்கள் குறைவாக இருப்பதற்கு மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது ஒரு காரணமா என்று தெரியவில்லை.விழாக்காலங்களில் மது மீது அதிக ஆர்வம் உள்ள சிலர் தங்களது குற்ற உணர்வை -சமூகம் தவறென்று சொல்லித்தந்திருக்கிறது-குறைத்துக்கொள்ள குழுவை சேர்த்துவிடுகிறார்கள்.
விழாக்கால மனப்பாங்கு!

விழா நாட்களில் கூட்டம் கூடுவது இயல்பு.அறிமுகமாகாதவர்கள்,உறவினர்கள்,ஊர்க்காரர்கள் என்று பொது இடங்களில் சந்திக்க வேண்டியிருக்கிறது.எல்லோரும் நம்மை முக்கியமாக கவனிக்கவேண்டும் என்ற எண்ணமும்,கவனிப்பார்களா?என்ற கலக்கமும்,அதன் தொடர்ச்சியாக பதட்டமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நாலு பேருக்கு முன்னால் பேசவோ இயங்கவோ நமக்கு எப்போதும் கொஞ்சம் தயக்கம்தான்.பெரும்பாலான குற்றச்செயல்களும் மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளன.மது பதட்டத்தை குறைத்து செயல்பட தூண்டுகிறது.எனக்கு ஒரு நண்பனை தெரியும்.தண்ணி அடித்த பிறகுதான் போனை எடுத்து பெண்களிடம் பல மடங்கு பேசுவான்.அவனே நேரில் அதிகம் பேசாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.மிதமான போதை இருந்தால் விழா நேரங்களில் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் எளிதாக பதட்டமின்றி,என்ன நினைப்பார்களோ?என்ற எண்ணமின்றி இயங்கலாம்.

வேறு என்னதான் செய்வது?
பண்டிகை என்று சொல்கிறார்கள்,விழா என்று சொல்கிறார்கள்.இனிப்பும்,விருந்தும் சாப்பிட்டு விட்டால் போதுமா?மன எழுச்சி குறையவேயில்லை.நண்பர்கள் இலவசமாக வாங்கித்தருவதாக அழைக்கிறார்கள்.வேறு என்னதான் செய்வது?
மாறிவரும் மதிப்பீடுகள்:
அலுவல் தொடர்பான கூட்டங்களில் ,விருந்துகளில் மது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.மிதமான போதையில் பேசிக்கொண்டிருப்பதுதான்பலருக்கு மகிழ்ச்சியாக ,உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்த உதவுவதாக இருக்கிறது.மதுவால் ஏற்படும் சமூகக்கேடுகள்,சீரழிவுகள்,தனிமனிதனுக்கு உடலநல பாதிப்புகள் எல்லாமும் பின்தள்ளப்பட்டு இன்றைய நாகரீகமாக மாறுவதற்கு நுகர்பொருள் கலாச்சாரமும்,அதன் விளைவாக ஏற்பட்ட அடையாள சிக்கல்களும் ஒரு காரணம்.தவிர,இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியும் இல்லை.

-

Wednesday, July 13, 2011

மாணவிகள் வகுப்பறையில் கண்டெடுத்த பீர்பாட்டில்


அதிர்ச்சி என்று தலைப்பில் போடவேண்டுமா என்ன? தலைப்பே அப்படித்தான் இருக்கிறது.எனக்கும் கேட்டபோது அப்படித்தான் இருந்த்து.இப்போதுதான் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தவெளிமாவட்ட நண்பர் ஒருவர் துணைவியார் தெரிவித்த விஷயம் இது.

                                 மிகவும் பிரபலமான் மகளிர் மேல்நிலைப்பள்ளி அது. காலையில் வழக்கம்போல பள்ளியை சுத்தம் செய்தவர்கள் குப்பைக்கூடையில் இரண்டு பீர்பாட்டில்கள் இருந்த்தை பார்த்திருக்கிறார்கள்.ஆயா பள்ளி முதல்வரிடம் கொண்டு வந்து பதினொன்றாம் வகுப்பில் ஒரு பிரிவில் இருந்த்தாக ஒப்படைத்துவிட்டார்.

                                 தலைமை ஆசிரியர் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து பதறியிருக்கிறார்.குறிப்பிட்ட வகுப்பறைக்கு சில ஆசிரியைகலுடன் ஓடியிருக்கிறார்கள்.அதிரடி விசாரணை.மிரட்டல்.நீங்களே ஒப்புக்கிட்டா,மன்னித்து விட்டுவிடுவோம்’’ ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை.

                                  தனித்தனியாக ஒவ்வொரு மாணவியையும் அழைத்து விசாரணை நட்த்தியிருக்கிறார்கள்.இதில் ஒரு மாணவி உண்மையைப்போட்டு உடைத்து விட்டார்.யார் கொண்டு வந்த்து என்று தெரிந்துவிட்ட்து.தலைமை ஆசிரியருக்கு அம்மாணவியை கண்டிப்பதா,வேண்டாமா என்று தர்ம சங்கடம்.நகரின் பிரபல வணிகர் ஒருவரின் மகள்.அரசியல் செல்வாக்கு உடையவர்.

                                  மேலும்மேலும் அம்மாணவியை விசாரித்த்தில் வெளிவந்த விஷயம்,வீட்டு ஃப்ரிட்ஜில் நிறைய பீர்பாட்டில்கள் உண்டு.அப்பாவும்,அண்ணனும் ஒன்றாக சேர்ந்தும் குடிப்பார்கள்.பீர் ஒன்றும் போதயில்லை என்று வேறு சொல்லிக்கொள்வார்கள்.மாணவிக்கும் குடித்துப்பார்க்கவேண்டும் என்று ஆசை வந்துவிட்ட்து.தனியாக குடிக்க விரும்பவில்லை.இரண்டு பாட்டிலை வகுப்புக்கு எடுத்து வந்து விட்டார்.

                                   வகுப்பில் உள்ள தனது தோழிகளை குடிக்கச்சொல்லி கேட்டிருக்கிறார்.ஆனால் எந்த மாணவியும் ஒப்புக்கொள்ளவில்லை.இது போதை கிடையாது,குளிர்ச்சி,எங்கள் வீட்டில் நிறைய இருக்கிறது என்று சொல்லிப்பார்த்திருக்கிறார்.உடன் இருப்பவர்களுக்கு விருப்பமில்லை.பயந்து விட்டார்கள்.அவரும் குடிக்கவில்லை.விளையாட்டாக குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்கள்.

                                   பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவி அவர்.டீனேஜ் என்பது எதையும் முயற்சி செய்து பார்க்கும்.வீட்டில் முன்மாதிரிகள் இருக்கும்போது விபரீதம் தெரியாத விளையாட்டாகிவிடுகிறது.ஒரு வழியாக பள்ளி தாளாளர் வழியாக அம்மாணவியின் தந்தைக்கு விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

                                   கிராமங்களில் மது வாங்கிவர,பீடி சிகரெட் வாங்கிவர பிள்ளைகளை அனுப்பும் தந்தைகளை பார்த்திருக்கிறேன்.அவர்கள் நாகரீகம் இல்லாத மனிதர்களாக தோன்றும்.வீட்டையே பார் ஆக்குபவர்களை என்ன சொல்வது? எனக்கென்னவோ காலப்போக்கில் மது டீ,காபி போல ஆகிவிடும் என்று தோன்றுகிறது.(இப்போ மட்டும் என்னவாம்?)
-