Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Wednesday, June 11, 2014

கோழியின் தொடைக்கறி(சிக்கன் லெக்பீஸ்) மோகம் சரியானதா?



நண்பர்களுடன் பிரியாணி சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்தாகிவிட்டது.உடன் வந்தவர்கள் லெக்பீஸ் கேட்க நான் மட்டும் வேண்டாம் என்று சொன்னேன்.கோழிபிரியாணியில் நம்மவர்களிடையே மிக விருப்பமானது தொடைக்கறி.இப்போது சாலையோர கடைகளில் விளம்பரத்திற்காக தொங்கிக் கொண்டிருக்கின்றன.கண்ணைப்பறிக்கும் கலரில் சாப்பிடத்தூண்டுகின்றன.

செயற்கை வண்ணங்கள் பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.கடையில் சில்லி சிக்கன் சாப்பிட்டு விட்டு வந்த ஒருவரை நாக்கை நீட்டுமாறு நண்பர் சொன்னார்.நாக்கு முழுக்க வண்ணம் பூசப்பட்டிருந்தது.உணவுக்குழாய் முழுக்க சிவப்பு வண்ணம் படிந்திருக்கும் நிலையை கற்பனை செய்யுங்கள்.

தொடைக்கறி சாப்பிட்டால் கறி சாப்பிட்ட திருப்தியைத்தரும் என்று தோன்றுகிறது.ஆனால் மேலை நாடுகளில் தொடைக்கறியை விரும்பாமல் ஏற்றுமதி செய்துவிடுவதாக ஒரு தகவலைப்படித்தேன்.நமக்கு அதிக விருப்பம் தரக்கூடியது சில இடங்களில் ஒதுக்கப்படுகின்றன.சுவையா? ஊட்டச்சத்தா? என்பதில் நாம் சுவைக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

கோழியின் தொடைக்கறியை ஒப்பிடும்போது நெஞ்சுப்பகுதியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.விழிப்புணர்வு உள்ளவர்கள் நெஞ்சுப்பகுதியை விரும்புகிறார்கள்.குறிப்பாக உயிர்ச்சத்து பி6 (vitamin B6) அதிகம் உடலுக்குச்சேரும்.உயிர்ச்சத்து சி,இ போன்று பி6 ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு இந்த வைட்டமினுக்கு உண்டு.

கோழிக்கறியை சிற்றின்பத்தோடு தொடர்புபடுத்தி கிராமத்தில் பேசுவார்கள்.இதற்கு அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை.ஆனால் நல்லமனநிலைக்கு இந்த வைட்டமின் உதவி செய்கிறது.மனநலத்திற்குக் காரணமான செரோடானின்,டோபமைன் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது.பி6 குறைபாட்டினால் சிடுசிடுப்பும்,மன அழுத்தமும் கூட ஏற்படலாம்.

ஹீமோகுளோபின் உருவாக்கத்துக்கு அவசியம் என்பதால் பற்றாக்குறை ஒருவகை ரத்தசோகையைத் தோற்றுவிக்கலாம்.கர்ப்பகாலத்தில் தோன்றும் குமட்டல் வாந்தியின் அறிகுறியைக் குறைக்க இந்த வைட்டமின் உதவும்.நினைவிற்கு வந்த நன்மைகளைச் சொல்லியிருக்கிறேன்.மேலும் நோயெதிர்ப்புத்திறன்,நல்ல உடல்நலத்திற்கு அவசியமான உயிர்ச்சத்து இது.

கோழியின் நெஞ்சுப்பகுதியில் மட்டும்தான் இந்த வைட்டமின் இருக்கிறதா?அப்படியில்லை,வாழைப்பழம்,பட்டாணி,சிலவகை மீன்கள்,உருளைக்கிழங்கு,கீரைகள்,சிறு தானியங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது.பணம் கொடுத்து சாப்பிடும்போது ஊட்டச்சத்தையும் கவனிக்கலாம்.விழிப்புணர்வு இல்லாத நிலைதான் நமக்கு பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது.

வறுமையும்,ஊட்டச்சத்துப்பற்றாக்குறையும் நிலவும் தேசத்தில் உணவுப்பொருட்கள்,உடல்நலம் பற்றிய அறிவைப்பெறுவது முக்கியமானது.இவை நமது பாடத்திட்டத்தின் பகுதியாக இருக்கவேண்டும்.உணவை எடுத்துக்கொள்ளும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஓரளவாவது நமக்கு சொல்லத்தெரியவேண்டும்.

இந்த வலைப்பதிவில் வெளியான நோய்கள் குறித்த பதிவுகள் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது.freetamilebooks.com நிறுவனம் யாவரும் இலவசமாகப் படிக்கவும்,பகிரவும் மின்னூல்களை வெளியிட்டு வருகிறது.எனது இரண்டாவது மின்னூல் உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்.பதிவிறக்கம் செய்து படிக்க,பகிர கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
-

Wednesday, April 9, 2014

உணவுகெட்டுப்போவது எப்போது?



நண்பர் ஒருவர் சாம்பார் வாங்க கடைக்கு ஓடினார்.வீட்டிலிருந்து எடுத்து வந்த சாம்பார் கெட்டுப்போய்விட்டது.வாசனையை வைத்து அவர் கெட்டுப்போய்விட்டதாக முடிவு செய்தார்.சிலருக்கு இந்த அனுபவம் இருக்கக்கூடும்.வாசனை வந்த பின்னர்தான் உணவு கெட்டுப்போனதாகக் கருதமுடியுமா? அல்லது அதற்கு சில நிமிடங்கள்,மணித்துளிகள் முன்பே கெட்டுப்போனதாக எடுத்துக்கொள்ளலாமா?

இரண்டாவதாகச் சொன்னதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.கோடைகாலத்தில் உணவுப்பொருள் கெட்டுப்போவது அதிகம்.நுண்ணியிரிகள் வளர சரியான காலநிலை நிலவுவது ஒரு காரணம்.சில நாட்களில் காலையில் தயாரித்த உணவை இரவு சாப்பிடும் பழக்கமும் பலருக்கு இருக்கிறது.இதைத்தவிர்ப்பதே பாதுகாப்பானது.

கோடையில் சாம்பாரில் புளி கொஞ்சம் அதிகம் சேர்ப்பார்கள்.சுவை கொஞ்சம் மாறும் என்றாலும் உடல்நலனைக் கருத்தில் கொள்ளவேண்டும்.கிராமங்களிலிருந்து கோயிலுக்குப் போனால் கட்டுச்சோறுதான்.புளிசாதம் இல்லாமல் புண்ணியப் பயணம் இல்லை.விரைவில் கெட்டுப்போகாது என்பதுதான் காரணம்.தேங்காய் சேர்க்கப்பட்ட உணவுகள் விரைவில் கெட்டுப்போகும் என்று தவிர்ப்பார்கள்.அவரைப்பருப்பு போன்றவையும் விரைவில் வாசனை வந்துவிடும்

புளிச்சாற்றைத் தயாரித்து சோற்றில் ஊற்றிக் கிளறினால் புளிச்சோறு.துணியில் கட்டிக்கொண்டால் கட்டுச்சோறு.பயன்படுத்தி கிழிந்துபோன சுத்தமான வேட்டிகள் கட்டுச்சோறுக்காக எடுத்து வைத்திருப்பார்கள்.இப்போது கட்டுச்சோறு கட்டிக்கொண்டிருப்பதைவிட ஹோட்டலில் சாப்பிடுவது அதிகம்.பலருக்குச் சுவை அதிக விருப்பமானதாக இருக்கிறது.

 நண்பர் ஒருவர் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.உணவை சாப்பிட்டவர்கள் வாங்கப்பட்ட இடத்தைப்பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.நகரில் பலருக்கு குறிப்பிட்ட உணவகத்தில் சுவையாக இருக்கும் என்ற எண்ணம் இருப்பது எனக்குத்தெரியும்.குறுகிய காலத்தில் பிரபலமடைந்துவிட்டது.விலை கூடுதலாக இருந்தாலும் பலர் பரிந்துரை செய்வதை கவனித்திருக்கிறேன்.
 
சமீபத்தில் மேலே குறிப்பிட்ட உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.உணவுகளில் அஜினோமோட்டோ பயன்படுத்துவதை அவர் ஒப்புக்கொண்டார்.ஊழியர்களுக்கு உணவு தயாரிக்கும்போது நாங்கள் சேர்க்கமாட்டோம் என்றும் சொன்னார்.ஆனால் அஜினோமோட்டோ நன்மையா? தீமையா? என்பதற்கான பதிலை அவரால் தெளிவாகச் சொல்லமுடியவில்லை.

இன்னொரு நண்பர் திருமண நிகழ்வுக்காக சமையல்காரரை ஏற்பாடு செய்யப்போனார்.உணவில் அஜினோமோட்டோ சேர்க்கவேண்டாம் என்று சொன்னதற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.ஒப்பந்தமே தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.அஜினோமோட்டோ போடாவிட்டால் சுவை கிடைக்காது என்றும்,தனக்கு பெயர் கிடைக்காது என்றும் சொன்னார்.அடுத்து தன்னை யாரும் தேடிவரமாட்டார்கள்,வேறுஆளைப்பார்க்குமாறு ஒதுங்கினார்.

ஹோட்டலில் சாப்பிடுவது,வீட்டுக்கு வாங்கிப்போவது இப்போது அதிகரித்திருக்கிறது.கணவன்,மனைவி இருவரும் வேலைக்குப்போக வேண்டிய நிலை,வேலைப்பளுவால் வரும் சோர்வு,வீட்டுக்குத் திரும்புவதில் தாமதம் போன்றவை காரணமாகச் சொல்லப்படுகின்றன.இவற்றில் ஓரளவு உணமையும் இருக்கக் கூடும்.ஆனால் அஜினோமோட்டோ முக்கிய காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

சுவைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் ஏதேனும் காரணம் சொல்லி உணவகங்களை நாடுகிறார்கள்.மிகக் குறைந்த நேரத்தில் நம்மால் ஏராளமான உணவுகளை வீட்டில் தயாரிக்க முடியும்.கிராமத்தில் நாள்முழுக்க நிலத்தில் வேலைசெய்துவிட்டு அல்லது கூலிக்கு போய்விட்டு வந்து விறகு அடுப்பில் சமையல் செய்து குழந்தைகளூக்கு பொங்கிப்போடவேண்டும்.அப்படி வளர்ந்த குழந்தைகள் இன்று கேஸ் அடுப்பில் சமையல் செய்ய சலித்துக்கொண்டு ஹோட்டலை நாடுகிறார்கள்.

ராகி,ரொட்டி,சோளரொட்டி,உப்புமா என்று ஆரோக்கியத்தை உறுதி செய்ய ஏராளம் இருக்கின்றன.வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும் என்று சில மெஸ்களை சொல்லி பரிந்துரைப்பார்கள்.இன்று ஹோட்டல் சுவை போல வீட்டில் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார்கள்.துரித உணவுகள்  இல்லாத தெருக்கள் இன்று இல்லை.அத்தனையும் அஜினோமோட்டோ செய்யும் மாயம்.

அமில எதிர்ப்பு மருந்துகள் ஏராளமாக விற்பனை ஆகின்றன.இவற்றில் பெரும்பாலும் மருந்துவர் பரிந்துரை இல்லாமல் வாங்கப்படுபவை.இந்நிலைக்கு முக்கியக் காரணமாக வெளியில் சாப்பிடுவதைச் சொல்லலாம்.குடல் புண்ணாகிவிட்டால் முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உறிஞ்சப்படுவது பாதிக்கப்பட்டுவிடுகிறது.பணத்தைக்கொடுத்து உடலுக்குக் கேட்டையும் தேடிக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை எப்படி அழைக்கலாம்?


இரவு உணவுகளில்  வெளியில் இருந்து வாங்கிவருவது பல குடும்பங்களில் அதிகமாகி வருகிறது சோர்வு,தலைவலி,வயிற்றில் எரிச்சல்,செரிமானமின்மை போன்றவற்றை கடைகளில் மாத்திரை வாங்கியே நிவாரணம் தேடுகிறார்கள்.அதற்குக் காரணமானவற்றைக் கண்டறிய முயற்சிப்பதே இல்லை.முழுமையான விழிப்புணர்வு இல்லாமலேயே கடந்து சென்றுவிடுகிறார்கள்.
இத்தளத்தின் உணவு குறித்த பதிவுகள் உணவும்உடல்நலமும் என்ற தலைப்பில் மென்நூலாக வெளியிடப்பட்டுள்ளது.நூலைப் பதிவிறக்க

-

Friday, February 14, 2014

தென்னை இளநீர்-இயற்கை தந்த வரம்



கடுமையான தலைவலியில் நடந்துகொண்டிருந்தேன்.வெயில்காலத்தின் மாலையில் வயலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்.மாத்திரை வாங்கவேண்டுமானால் ஒரு கிலோமீட்டர் திரும்பிவரவேண்டும்.என்னையறியாமல் தென்னைமரத்தை நோக்கிப்போனேன்.ஒரு குச்சியை எடுத்து சிறியமரத்திலிருந்த இளநீரைப்பறித்தேன்.

அப்போதுதான் நீர்பிடிக்க ஆரம்பித்திருந்தது.கத்தியால் வெட்டவேண்டிய அவசியம் இல்லை.குச்சியில் ஓட்டைபோட்டு குடித்துவிடலாம்.கொஞ்சம் துவர்ப்பாக இருந்தது.முதல் இளநீரைக் குடித்துமுடித்தவுடன் தலைவலி காணாமல் போயிருந்தது.நிலத்தடிநீர் கிராமத்தின் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது.இன்று அந்தமரம் பட்டுப்போய்விட்டது.

தென்னை நம்முடைய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்திருக்கிறது.வயசுக்கு வந்தால் குடிசை கட்ட தென்னைஓலை.சாவுக்கு தென்னை ஓலை.வெயில் காலத்தில் கூரை மீதுபோட தென்னைஓலை.மரம் இருக்கும் வீடுகளில் பருப்பைக்காயவைத்து எண்ணெய் ஆடிக் கொள்வார்கள்.குளித்துவிட்டு தலைக்கு எண்ணெய் வைக்காதவர்கள் திட்டுவாங்க வேண்டியிருக்கும்.

நல்ல காரியமோ, கெட்ட காரியமோ நமக்குத் தேங்காய்வேண்டும்.உயிர்பிரிந்தவுடன் தேங்காய் உடைப்பதுதான் முதல் வேலை.பிள்ளையாருக்கு சிதறுகாய் போடவேண்டும்.தேங்காயை தலைமீது உடைத்து கடவுளை வழிபடுபவர்கள் உண்டு.திருமணத்தில் தேங்காய்ப்பை கொடுப்பதுதான் அதிகம் வழக்கத்தில் இருந்தது.

கோழிக்கறி,அவரைப்பருப்பு குழம்புகளில் தேங்காய்த்துண்டுகள் அத்தனை சுவை.சுண்டல் என்றால் தேங்காய்த்துருவிப் போடவேண்டும்.திருவிழாக்களில் விளக்குமாவு பிடிப்பார்கள்.எனக்குத்தேங்காயுடன் சாப்பிட்டுத்தான் பழக்கம்.மறக்கமுடியாத ருசியாக இருக்கும்.பொரியோடு தேங்காய் சாப்பிடுவது மாலைநேர சந்தோஷம்.

இளநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.களைப்பைப்போக்கிவிடுகிறது.சிறுநீரகக்கல்லுக்கு அருமருந்தாக இருக்கிறது.கிருமிகளை எதிர்த்துப்போரிடுகிறது.இரத்த அழுத்தத்தைக்குறைத்துவிடுகிறது.சிறுகுடல் நலத்தை உறுதிசெய்வது,அமில கார சமநிலையை சீர்செய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அவசியமான உயிர்ச்சத்துக்களும்,நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.


குடல் புழுக்களுக்கு இளநீருடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயையும் சாப்பிடச்சொல்வார்கள்.குடல்புண்ணுக்கும்,வயிற்றில் கொட்டும் அமிலத்துக்கும் நல்லது.சிறுநீர்ப்பாதை தொற்றுக்களை குணப்படுத்திவிடுகிறது.உடலின் செல்களுக்கு ஆக்ஸிஜன்,ஊட்டச்சத்துக்களை கொண்டுசேர்ப்பதை இளநீர் மேம்படுத்தும்.

அம்மை போட்டுவிட்டால் இளநீர்தான் கிராமங்களில் முக்கிய மருந்து.இளநீரில் உள்ள லாரிக் அமிலம் உடல் வைரஸ்களை எதிர்க்க உதவுகிறது.பெரும்பாலும் உதடுகளுக்கு அருகே  நீர்கோர்த்து கொப்புளங்கள் வரும்.பல்லி ஒண்ணுக்குப்போய்விட்டது என்பார்கள்.ஹெர்பீஸ் வைரஸினால் ஏற்படும் பிரச்சினை அது.இளநீர் குடிக்கலாம்.

சிறுநீரகம் தொடர்பான நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இளநீர் அருந்தக்கூடாது. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.(அவ்வளவெல்லாம் யாரும் குடிக்கமாட்டார்கள் என்பது வேறுவிஷயம்)மிக அதிக அளவு இளநீர் பொட்டாசிய அளவை அதிகப்படுத்தும்.நீரிழிவு நோயாளிகளும் குடிக்கலாம்.
-

Friday, December 13, 2013

சமையல் உப்பும் உடல்நலமும்


அறுபது வயதைக்கடந்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்.அப்போதுதான் வயலில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார்.உடன் வந்திருந்த மாமன் மகன் சொன்னான் வியர்வை வெளியேறிவிட்டால் ஒரு நோயும் கிடையாது.வியர்வை உப்புக்கரிக்கக் காரணம் சோடியம்.உடலின் நீர்சமநிலையை காக்கும் பணியைச் செய்வது இதுதான்.


சமையல் உப்பு  சோடியம்குளோரைடுஎன்பது உங்களுக்குத்தெரியும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொன்னார்கள்.நாம் சுவைக்காகத்தான்உப்பைச்சேர்த்துக்கொள்கிறோம்.வயிற்றுப்போக்கின்போது சர்க்கரையும் உப்பும் கலந்த நீரைத்தயாரித்து பருகவேண்டும்.இதில் உப்பு உயிர்காக்கும் பணியைச்செய்கிறது.நம்முடைய உணவுப்பொருட்களில் சோடியம் இருக்கிறது.

உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா? என்று கேட்பார்கள்.உப்பு ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற பொருளில் சொல்கிறார்கள்.அதிக உப்பு இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாக உள்ளது.நோய் வந்தபிறகு உப்பைக்குறைத்து சாப்பிடுவார்கள்.உடல் உழைப்பு குறைந்த இன்றைய வாழ்க்கைமுறையில் உப்பைக்குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.


சில குடும்பங்களில் வழக்கமாகவே மிகக் குறைவாக உப்பு சேர்த்துக்கொள்வார்கள்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் இது வேறுபடும்.அன்றாட சமையலில் சேர்க்கும் உப்பு மூலம் நாம் சாப்பிடுவது குறைவு.பொட்டலமிடப்பட்ட பொருட்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் வழியாக அதிக உப்பைப்பெறுகிறோம்.பதப்படுத்துவதில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பைக் குறைத்து சாப்பிடும் பழக்கத்தை சிறுவயது முதலே ஏற்படுத்தவேண்டும்.ஆனால் இன்று குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களாக,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களும்,பேக்கிங் செய்யப்பட்டவையும் இருக்கின்றன.துரித உணவுகள்,நூடூல்ஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.


அதிக உப்பு கால்சியத்தை வெளியேற்றிவிடுவதால் உறுதியான எலும்புக்கு உத்தரவாதம் இல்லை.இன்றைய பெற்றோர்கள் அதிக உப்புச்சுவையை பழக்கப்படுத்துகிறார்கள்.ஏற்கனவே குறிப்பிட்டது போல உப்புச்சுவைக்கு ஒரு குடும்பத்தின் பழக்கமே காரணம்.எதிர்காலத்தில் உப்பைக்குறைத்து சாப்பிடவேண்டிய நிலையில் சுத்தமாக சுவை இல்லாத சிரமத்தை உணர்வார்கள்.


சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்போது பொட்டாசியம் குறைக்கிறது.சோடியம்,பொட்டாசியம் விகிதத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.அதிக சோடியம் ஏற்படுத்தும் விளைவுகளை பொட்டாசியம்கட்டுப்படுத்தும்.பழங்கள்,கீரை,காய்கள்,இளநீர்,போன்றவை பொட்டாசியத்தை அதிக அளவில் கொண்டிருக்கின்றன.வாழைப்பழம் நமது கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன பழம்.முக்கனிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது.மூன்று வேளையும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
-