Showing posts with label பொட்டாசியம். Show all posts
Showing posts with label பொட்டாசியம். Show all posts

Friday, February 14, 2014

தென்னை இளநீர்-இயற்கை தந்த வரம்



கடுமையான தலைவலியில் நடந்துகொண்டிருந்தேன்.வெயில்காலத்தின் மாலையில் வயலை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறேன்.மாத்திரை வாங்கவேண்டுமானால் ஒரு கிலோமீட்டர் திரும்பிவரவேண்டும்.என்னையறியாமல் தென்னைமரத்தை நோக்கிப்போனேன்.ஒரு குச்சியை எடுத்து சிறியமரத்திலிருந்த இளநீரைப்பறித்தேன்.

அப்போதுதான் நீர்பிடிக்க ஆரம்பித்திருந்தது.கத்தியால் வெட்டவேண்டிய அவசியம் இல்லை.குச்சியில் ஓட்டைபோட்டு குடித்துவிடலாம்.கொஞ்சம் துவர்ப்பாக இருந்தது.முதல் இளநீரைக் குடித்துமுடித்தவுடன் தலைவலி காணாமல் போயிருந்தது.நிலத்தடிநீர் கிராமத்தின் ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது.இன்று அந்தமரம் பட்டுப்போய்விட்டது.

தென்னை நம்முடைய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்திருக்கிறது.வயசுக்கு வந்தால் குடிசை கட்ட தென்னைஓலை.சாவுக்கு தென்னை ஓலை.வெயில் காலத்தில் கூரை மீதுபோட தென்னைஓலை.மரம் இருக்கும் வீடுகளில் பருப்பைக்காயவைத்து எண்ணெய் ஆடிக் கொள்வார்கள்.குளித்துவிட்டு தலைக்கு எண்ணெய் வைக்காதவர்கள் திட்டுவாங்க வேண்டியிருக்கும்.

நல்ல காரியமோ, கெட்ட காரியமோ நமக்குத் தேங்காய்வேண்டும்.உயிர்பிரிந்தவுடன் தேங்காய் உடைப்பதுதான் முதல் வேலை.பிள்ளையாருக்கு சிதறுகாய் போடவேண்டும்.தேங்காயை தலைமீது உடைத்து கடவுளை வழிபடுபவர்கள் உண்டு.திருமணத்தில் தேங்காய்ப்பை கொடுப்பதுதான் அதிகம் வழக்கத்தில் இருந்தது.

கோழிக்கறி,அவரைப்பருப்பு குழம்புகளில் தேங்காய்த்துண்டுகள் அத்தனை சுவை.சுண்டல் என்றால் தேங்காய்த்துருவிப் போடவேண்டும்.திருவிழாக்களில் விளக்குமாவு பிடிப்பார்கள்.எனக்குத்தேங்காயுடன் சாப்பிட்டுத்தான் பழக்கம்.மறக்கமுடியாத ருசியாக இருக்கும்.பொரியோடு தேங்காய் சாப்பிடுவது மாலைநேர சந்தோஷம்.

இளநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.களைப்பைப்போக்கிவிடுகிறது.சிறுநீரகக்கல்லுக்கு அருமருந்தாக இருக்கிறது.கிருமிகளை எதிர்த்துப்போரிடுகிறது.இரத்த அழுத்தத்தைக்குறைத்துவிடுகிறது.சிறுகுடல் நலத்தை உறுதிசெய்வது,அமில கார சமநிலையை சீர்செய்வது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அவசியமான உயிர்ச்சத்துக்களும்,நார்ச்சத்துக்களும் இருக்கின்றன.


குடல் புழுக்களுக்கு இளநீருடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயையும் சாப்பிடச்சொல்வார்கள்.குடல்புண்ணுக்கும்,வயிற்றில் கொட்டும் அமிலத்துக்கும் நல்லது.சிறுநீர்ப்பாதை தொற்றுக்களை குணப்படுத்திவிடுகிறது.உடலின் செல்களுக்கு ஆக்ஸிஜன்,ஊட்டச்சத்துக்களை கொண்டுசேர்ப்பதை இளநீர் மேம்படுத்தும்.

அம்மை போட்டுவிட்டால் இளநீர்தான் கிராமங்களில் முக்கிய மருந்து.இளநீரில் உள்ள லாரிக் அமிலம் உடல் வைரஸ்களை எதிர்க்க உதவுகிறது.பெரும்பாலும் உதடுகளுக்கு அருகே  நீர்கோர்த்து கொப்புளங்கள் வரும்.பல்லி ஒண்ணுக்குப்போய்விட்டது என்பார்கள்.ஹெர்பீஸ் வைரஸினால் ஏற்படும் பிரச்சினை அது.இளநீர் குடிக்கலாம்.

சிறுநீரகம் தொடர்பான நோய் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் இளநீர் அருந்தக்கூடாது. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.(அவ்வளவெல்லாம் யாரும் குடிக்கமாட்டார்கள் என்பது வேறுவிஷயம்)மிக அதிக அளவு இளநீர் பொட்டாசிய அளவை அதிகப்படுத்தும்.நீரிழிவு நோயாளிகளும் குடிக்கலாம்.
-

Friday, December 13, 2013

சமையல் உப்பும் உடல்நலமும்


அறுபது வயதைக்கடந்தும் தான் ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார்.அப்போதுதான் வயலில் வேலை செய்துவிட்டு வந்திருந்தார்.உடன் வந்திருந்த மாமன் மகன் சொன்னான் வியர்வை வெளியேறிவிட்டால் ஒரு நோயும் கிடையாது.வியர்வை உப்புக்கரிக்கக் காரணம் சோடியம்.உடலின் நீர்சமநிலையை காக்கும் பணியைச் செய்வது இதுதான்.


சமையல் உப்பு  சோடியம்குளோரைடுஎன்பது உங்களுக்குத்தெரியும். உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொன்னார்கள்.நாம் சுவைக்காகத்தான்உப்பைச்சேர்த்துக்கொள்கிறோம்.வயிற்றுப்போக்கின்போது சர்க்கரையும் உப்பும் கலந்த நீரைத்தயாரித்து பருகவேண்டும்.இதில் உப்பு உயிர்காக்கும் பணியைச்செய்கிறது.நம்முடைய உணவுப்பொருட்களில் சோடியம் இருக்கிறது.

உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா? என்று கேட்பார்கள்.உப்பு ஆத்திரம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிப்படையாக இருக்கிறது என்ற பொருளில் சொல்கிறார்கள்.அதிக உப்பு இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணமாக உள்ளது.நோய் வந்தபிறகு உப்பைக்குறைத்து சாப்பிடுவார்கள்.உடல் உழைப்பு குறைந்த இன்றைய வாழ்க்கைமுறையில் உப்பைக்குறைவாகவே பயன்படுத்தவேண்டும்.


சில குடும்பங்களில் வழக்கமாகவே மிகக் குறைவாக உப்பு சேர்த்துக்கொள்வார்கள்.ஒவ்வொரு குடும்பத்துக்கும் இது வேறுபடும்.அன்றாட சமையலில் சேர்க்கும் உப்பு மூலம் நாம் சாப்பிடுவது குறைவு.பொட்டலமிடப்பட்ட பொருட்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் வழியாக அதிக உப்பைப்பெறுகிறோம்.பதப்படுத்துவதில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.

உப்பைக் குறைத்து சாப்பிடும் பழக்கத்தை சிறுவயது முதலே ஏற்படுத்தவேண்டும்.ஆனால் இன்று குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணும் பொருட்களாக,பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களும்,பேக்கிங் செய்யப்பட்டவையும் இருக்கின்றன.துரித உணவுகள்,நூடூல்ஸ் போன்றவற்றில் அதிக உப்பு இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.


அதிக உப்பு கால்சியத்தை வெளியேற்றிவிடுவதால் உறுதியான எலும்புக்கு உத்தரவாதம் இல்லை.இன்றைய பெற்றோர்கள் அதிக உப்புச்சுவையை பழக்கப்படுத்துகிறார்கள்.ஏற்கனவே குறிப்பிட்டது போல உப்புச்சுவைக்கு ஒரு குடும்பத்தின் பழக்கமே காரணம்.எதிர்காலத்தில் உப்பைக்குறைத்து சாப்பிடவேண்டிய நிலையில் சுத்தமாக சுவை இல்லாத சிரமத்தை உணர்வார்கள்.


சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்போது பொட்டாசியம் குறைக்கிறது.சோடியம்,பொட்டாசியம் விகிதத்தில் நாம் கவனமாக இருக்கவேண்டும்.அதிக சோடியம் ஏற்படுத்தும் விளைவுகளை பொட்டாசியம்கட்டுப்படுத்தும்.பழங்கள்,கீரை,காய்கள்,இளநீர்,போன்றவை பொட்டாசியத்தை அதிக அளவில் கொண்டிருக்கின்றன.வாழைப்பழம் நமது கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன பழம்.முக்கனிகளிலும் பொட்டாசியம் இருக்கிறது.மூன்று வேளையும் வாழைப்பழம் சாப்பிடலாம்.
-